Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 10 பிப்ரவரி, 2020

இராமன் சீதை கல்யாணம்


 னைவரும் திருமண மண்டபத்துக்கு வந்து சேர்ந்தார்கள். பல தேசத்திலிருந்தும் மக்கள் திருமண நிகழ்ச்சியை பார்க்க கூடி இருந்தனர். திருமண நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. திருமண நிச்சயதார்த்த மண்டபத்துக்கு சீதையை அழைத்து வருமாறு வசிஷ்டர் கேட்டுக் கொண்டார். ஜனகர், வசிஷ்டரை தொழுத பின்னர் சீதையை அழைத்து வரும்படி கட்டளையிட்டார். சீதையை அழகாக அலங்கரித்து சீதையின் செவிலித்தாயர்கள் அழைத்து வந்தார்கள்.

 சீதையின் அழகை கண்டு கூடியிருந்த அனைவரும் கண்களை இமைக்க மறந்து விட்டனர். இராமன் சீதையை கண்டு அளவற்ற மகிழ்ச்சி அடைந்தார். சீதை தன் இருக்கையில் அமர்ந்தபடியே தன் கண்களை சிறிது மேல் நோக்கி அன்று கன்னிமாடத்திலிருந்து பார்த்த அந்த அழகன் தான் தன்னை மணந்து கொள்ள போகும் மணாளன் என்பதை உறுதி செய்து கொண்டு மகிழ்ச்சி அடைந்தாள்.

 தசரதன் வசிஷ்டரை பார்த்து திருமண நாள் என்று வைத்து கொள்ளலாம் எனக் கேட்டார். ஜனகர் விஸ்வாமித்திர முனிவரிடம் தன் மகளை, இராமருக்கும், தன் தம்பியின் மகளை இலட்சுமணனுக்கும், பரத, சத்ருக்குனருக்கும் கொடுக்க சம்மதித்து இரண்டாம் நாளான பங்குனி உத்திரம் நாளில் நால்வருக்கும் திருமணம் செய்வதாக நிச்சயம் செய்து கொண்டனர். இரண்டாம் நாள் நடைபெறவிருக்கும் திருமணத்திற்காக வேலைகள் விரைவாக நடைபெற தொடங்கின. நாளை திருமணம் என்பதால் சீதை இராமனை நினைத்து அவதிபடுகிறாள். இராமனும் சீதையை நினைத்து ஏங்குகிறான். மிதிலை மக்கள் திருமணத்தை பார்க்க தங்களை அலங்கரித்துக் கொண்டு வருகிறார்கள்.
 திருமண நாள் வந்தது. மிதிலை நகரமே அலங்கரிக்கப்பட்டு விழாக் கோலம் போல் விளங்கியது. வாழையும், வண்ணமயமான தோரணங்களும் மிதிலை நகரை அலங்கரித்து கொண்டு இருந்தது. தசரதன் வெண்கொற்றக் குடையை விரித்து, மங்கல வாத்தியங்கள் முழங்க, சுற்றிலும் ஏனைய அரசர்கள் புடைசூழ சம்மந்தியாக திருமண மண்டபத்துக்கு வந்து சேர்ந்தான். இராமர் மங்கல நீராடி, காதணிகள், வீரப்பட்டம், திலகம், முத்தாரம், பட்டாடை உடுத்தி மேலும் பல ஆபரணங்களை அணிந்து அலங்காரமாய் தேரில் ஏறி திருமண மண்டபத்துக்கு வந்து சேர்ந்தார்.

 மண்டபத்தில் ஹோமம் தொடங்கி வசிஷ்டர் முன்னிலையில் சடங்குகள் தொடங்கின. முனிவர்கள் வேதமந்திரங்களை சொல்ல, ஜனகன் சீதையின் கையைப் பிடித்து இராமனின் கையில் கொடுத்து கன்னிகாதானம் செய்து வைத்தான். அந்தணர்களும், தேவர்களும் ஆசி வழங்கினர். மன்னர்கள் வாழ்த்து சொல்ல, மக்கள் மகிழ்ச்சியுடன் ஆரவாரமும் செய்தனர். இராமரும் சீதையும் அக்னியை வலம் வந்து வணங்கினர். திருமண சம்பிரதாயாப்படி அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, இராமன் சீதையின் கழுத்தில் மங்கல நாண் கட்டினார். அதே மண்டபத்தில் இலட்சுமணன் ஊர்மிளைக்கும், பரதன் மாண்டவிக்கும், சத்ருக்குனன் ஸ்ருதகீர்த்திக்கும் திருமணம் நடைபெற்றது.

 திருமணம் முடிந்த பின் தசரதன் மிதிலையில் சில நாட்கள் தங்கினார். விஸ்வாமித்திர முனிவர் இராமனுக்கு வேதங்களில் சில ராஜ நீதிகளை கற்று கொடுத்தார். பிறகு விசுவாமித்திர முனிவர் தவம் செய்வதற்காக இமய மலைக்குச் சென்று விடுகிறார்.

ஜனகர் இராமனிடம், உன் மனைவியான என் மகள் சீதை, நீ செல்லும் தரும நெறியில் உன்னுடன் துணையாக இருப்பாள். உன் நிழல் போலவே எப்போதும் உன்னுடன் இருப்பாள் என்று கூறி சீதையை இராமனிடன் ஒப்படைத்து விடுகிறார். பின்னர் தசரதர் தமது சுற்றமும் பரிவாரங்களும் சூழ, ஜனகரிடம் விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டார். ஜனகர், 4 பெண்களுக்கும் சீதனந்தந்து, அறிவுரை கூறி வழியனுப்பினார். இராமர் சீதையுடன் தனித் தேரில் புறப்பட்டார்.

தொடரும்.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக