Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 20 பிப்ரவரி, 2020

இலட்சுமணின் கோபம்

 கைகெயி சிறிதும் மனம் தளராமல், இராமன் வனவாசம் செல்ல வேண்டும். அப்படி இல்லையென்றால் நான் இப்போதே என் உயிரை மாய்த்துக் கொள்வேன் என்றாள். இதனை கேட்ட வசிஷ்டருக்கு மிகுந்த கோபம் உண்டானது. கைகெயி! மூத்தவனுக்கு தான் முடி சூட்ட வேண்டும் என்பது நாம் காலங்காலமாய் பின்பற்றி வரும் மரபாகும். அந்த மரபு இன்று உன்னால் அழிகிறது என்பது பற்றி உனக்கு கவலை இல்லையா? உன்னால் இன்று மன்னர் மரணத்திலும் மிகுந்த வேதனைப்படுகிறார். அதை பற்றியும் உனக்கு கவலை இல்லையா? என்று வசிஷ்டர் உரத்த குரலில் கைகெயியை கடிந்தார்.

 தசரதர், கௌசலையின் நிலையைக் கண்டு துடிதுடித்தார். கௌசலை நீ அழாதே! இராமன் வனவாசம் செல்ல வேண்டும் என்பது விதி செய்யும் செயல். விதியை வென்றவர் இவ்வுலகில் யார் தான் உண்டு என்று கௌசலைக்கு ஆறுதல் கூறினார் தசரதர். கைகெயி! இவ்வுலகில் கணவரை வாட்டி வதைக்கும் பெண்களும் சிலர் உண்டு. ஆனால் உன்னை போல் கணவனை அடியுடன் வதைத்த பெண்கள் இல்லை. இராமன் மிகுந்த நற்பண்புகளை கொண்டவன். அவன் அயோத்தியில் இருந்தால் உனக்கும், பரதனுக்கும் தீங்கு செய்வான் என்று நீ நினைக்கின்றாயா? குருநாதா! ஆலகால விஷமே எனக்கு மனைவியாக வந்துள்ளது. இனி இவள் எனக்கு மனைவியும் இல்லை. பரதன் எனக்கு மகனும் இல்லை. அவன் என் கடைசி ஈமச்சடங்கை கூட செய்யக் கூடாது என்று சொல்லி விட்டு மயங்கி விழுந்தார்.

 வசிஷ்டர் பட்டாபிஷேக மண்டபத்திற்கு சென்று அங்கு கூடியிருந்தவர்களிடம் நடந்தவற்றை எல்லாம் கூறினார். இதனை கேட்ட மக்கள் அனைவரும் புலம்பி அழுதார்கள். பட்டாபிஷேக மண்டபத்திற்கு வந்த இலட்சுமணன், கைகெயி பெற்ற வரத்தையும், அவ்வரத்தால் பரதன் நாட்டை ஆளவும், இராமன் வனவாசம் செல்ல வேண்டும் என்பதை கேட்டு மிகுந்த கோபம் கொண்டார். கோபத்தால் வில்லை வளைத்து நாண் ஓசையை உண்டாக்கினார். ஓசையால் அண்டங்கள் அனைத்தும் அதிர்ந்தன. சுமித்திரையின் மாளிகைக்கு சென்று கொண்டு இருந்த இராமன் இலட்சுமணனின் வில்லின் ஓசையை கேட்டார். இலட்சுமணன் கோபம் கொண்டால் உலகம் அழிந்து விடுமே என்று எண்ணி மண்டபத்துக்கு திரும்பி சென்றார். இராமரை கண்ட இலட்சுமணர், அண்ணா! தங்களின் பட்டாபிஷேகத்துக்கு தடை ஏற்பட்டுவிட்டது. தடை செய்தவர்களை என் கோபத்திற்கு ஆளாக்குவேன். அது மட்டுமில்லாமல் பதினான்கு உலகங்களையும் தங்களுக்கு உரிதாக்கி முடி சூட்டுவேன் என்றார்.

 தம்பி இலட்சுமணா! அமைதி பூங்காவாக விளங்கும் அயோத்தி மண்ணுக்கே கோபம் வராத போது உனக்கு எப்படி கோபம் வந்தது? அண்ணா! இன்று தங்களுடைய பட்டாபிஷேகம் தடைப்பட்டதை அறிந்து நான் கோபம் கொள்ளாமல் இருப்பேனா? தம்பி! தானத்தில் சிறந்தது நிதானம் தான். இந்த நிகழ்ச்சி தடைப்பட காரணம் மன்னரும் அன்று, நம்மை வளர்த்த தாயின் பிழையும் இல்லை, இது விதியின் செயலாகும். ஆதலால் நீ அமைதி கொள்வாயாக. அண்ணா! விதி என்று சொல்லிக் கொண்டு என்னுடைய மதியை இழப்பவன் நான் இல்லை. விதிக்கே விதியை காண்பிப்பவன் நான். இன்று தங்கள் என்னுடைய வில்லின் திறமையை காண்பீராக. தம்பி இலட்சுமணா! வேதங்கள் ஓதிய உன் நாவினால் விதியை பற்றி இவ்வாறு கூறலாமா? என்னை கானகம் செல்ல கட்டளையிட்டவர்கள் தாய் தந்தையராகும். அவர்களின் கட்டளையை நான் மீறலாமா?

அண்ணா! எனக்கு அதைப் பற்றி கவலை இல்லை. எனக்கு தாய், தந்தை, தெய்வம் எல்லாம் தாங்கள் தான். தம்பி! உன் உரிமையை நான் ஒருபோதும் மறுக்க மாட்டேன். எனக்கு நல்வழியை காட்டி வளர்த்தவர் தந்தை தசரதர். தந்தையின் கட்டளையை என்றும் நான் மீறமாட்டேன். அதேபோல் உனக்கு தந்தை நான் தானே. அப்படி என்றால் நீ என் கட்டளையை மீறக் கூடாது. அமைதி கொள்வாயாக என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக