Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 20 பிப்ரவரி, 2020

பாண்டவர்களின் இந்திரப்பிரஸ்தம்...!

 துருபதன் தனது மகளை அர்ஜுனனுக்கு திருமணம் செய்து வைத்தாலும், பாண்டவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிய அவர்களை பின் தொடர்ந்து தனது மகனுடன் குயவனின் இருப்பிடத்திற்கு வந்தான். பிறகு பாண்டவர்களை தன் அரண்மனைக்கு அழைத்துச் சென்றான் துருபதன். பாண்டவர்கள் ஐவரும் தனது மகளை திருமணம் செய்ய இருப்பதை அறிந்து துருபதனால் இதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அப்பொழுது வியாசர் துருபதன் முன் தோன்றினார்.

 திரௌபதி, தன் முன் ஜென்மத்தில் தனக்கு 14 குணங்கள் அடங்கிய கணவன் வேண்டும் என சிவனிடம் வேண்டி தவம் இருந்தாள். சிவபெருமானும் திரௌபதிக்கு அவ்வரத்தை அளித்தார். ஆனால் யாராலும் அந்த அனைத்து குணங்களையும் கொண்டிருக்க முடியாததால், அந்த குணங்களை கொண்டுள்ள ஐந்து பேருக்கு அவர் மனைவியாவாள் என சிவபெருமான் வரம் அளித்தார். அதில் தர்மம், பலம், வில்வித்தை, அழகு மற்றும் பொறுமை என சிறந்த ஐந்து குணங்களை கொண்டுள்ள கணவன் தனக்கு கிடைக்குமாறு சிவபெருமானிடம் கேட்டுக் கொண்டாள். சிவபெருமான் கொடுத்த வரத்தின்படி திரௌபதியை ஐந்து கணவர்கள் மணக்க உள்ளார்கள்.

 அதுமட்டுமில்லாமல் பாண்டவர்கள் ஐவரும் முற்பிறவியில் தேவர்கள் என்பதை வியாசர் கூறினார். அதன் பிறகு துருபதன் பாண்டவர்களுக்கு திரௌபதியை திருமணம் செய்து வைக்க சம்மதம் தெரிவித்தான். துருபதன் முன்னிலையில் பாண்டவர்கள் ஐவருக்கும் திருமணம் நடைப்பெற்றது. பாஞ்சாலத்திற்கு வந்த கிருஷ்ணன் பாண்டவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார். துருபதன் தனது மருமகன்களுக்கு ஏராளமான பரிசுகளையும், அவர்களுக்கு சீதனமாக சில நாடுகளையும் கொடுத்தான். பாண்டவர்கள் சீதனமாக கொடுத்த நாடுகளை நீதிநெறி தவறாமல் ஆட்சி புரிந்தனர்.

 பாண்டவர்கள் உயிருடன் இருக்கும் செய்தி அஸ்தினாபுரத்திற்கு தெரியவந்தது. இதை அறிந்து அனைவரும் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தனர். துரியோதனன் மட்டும் அளவற்ற கோபம் கொண்டான். அஸ்தினாபுரத்தின் அவையில் அனைவரும் ஒன்று கூடினர். பாண்டவர்களை இங்கு அழைத்து வருவதைப் பற்றி ஆலோசனை நடத்தினர். பீஷ்மர் மற்றும் விதுரரின் ஆலோசனையின்படி பாண்டவர்களை அழைத்து அவர்களுக்கு பாதி ராஜ்ஜியம் அளிக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. அதன்படி பாண்டவர்களுக்கு அஸ்தினாபுரம் வருவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பாண்டவர்களும் அஸ்தினாபுரத்தை வந்தடைந்தனர்.

 திருதிராஷ்டிரன் பாண்டவர்களுக்கு பாதி ராஜ்ஜியத்தை அளித்து யுதிஷ்டிரனுக்கு முடிசூட்டினார். முடிசூட்டு விழாவைக் காண கிருஷ்ணர், வியாசர் முதலானோர் அங்கு வந்திருந்தனர். திருதிராஷ்டிரன் யுதிஷ்டிரனை அழைத்து, மகனே! உனக்கு அளித்திருக்கும் நகரில் காண்டவபிரஸ்தமும் ஒன்று. அதனால் நீ உனது தம்பிகளை அழைத்துக் கொண்டு காண்டவபிரஸ்தம் நகருக்குச் சென்று தங்கி கொள் எனக் கூறினார். காண்டவபிரஸ்தம் மக்கள் நடமாட்டம் இல்லாத, காட்டில் இருக்கும் பாழடைந்த நகரமாகும். இதைக்கேட்டு பாண்டவர்கள் திகைத்து நின்றனர். ஆனால் கிருஷ்ணர், தாங்கள் சரியான நகரத்தை அவர்களுக்கு அளித்துள்ளீர்கள் எனக் கூறினார்.

 கிருஷ்ணர் சம்மதம் தெரிவித்ததால், பாண்டவர்களும் காண்டவபிரஸ்தம் செல்ல புறப்பட்டனர். அவர்களுடன் கிருஷ்ணரும் உடன் சென்றார். அனைவரும் காண்டவபிரஸ்தத்தை அடைந்தனர். கிருஷ்ணர், இந்திரனையும், விஸ்வகர்மாவையும் அழைத்தார். அவர்கள் கிருஷ்ணர் முன் பணிந்து நின்றனர். கிருஷ்ணர், இங்கு பாழடைந்து கிடக்கும் காண்டவபிரஸ்தத்தை அழித்து யாரும் கண்டிராத, மிகவும் அழகான நகரத்தை பொன்னால் கட்டுமாறு கூறினார். அவர்களும் அனைவரும் கண்டு வியக்கும் வகையில் நகரத்தை அமைத்தனர். அந்நகரத்தில் இருக்கும் மாளிகைகள், மதில்கள், வீதிகள் என அனைத்தும் தங்கத்தால் ஜொலித்தது. இந்திரன் மேற்பார்வையினால் கட்டப்பட்டதால் இந்நகரருக்கு இந்திரப்பிரஸ்தம் எனப் பெயர் சூட்டினார், கிருஷ்ணர்.

அதன்பிறகு பாண்டவர்கள் நாட்டை நன்கு ஆட்சி புரிந்தனர். இந்திரப்பிரஸ்தத்தை காண நாரதர் வருகை தந்தார். நாரதர் திரௌபதியிடம், மகளே! உனக்கு ஐந்து கணவன்மார்கள் இருக்கின்றார்கள். அவர்கள் சொல்லும் வேலையை செய்ய உனக்கு சிரமமாக இருக்கும். உன்னை குறித்தும் பாண்டவர்களிடம் எந்த சண்டையும் வரக்கூடாது. அதனால் நீ ஒவ்வொரு வருடம் ஒருவருடன் வாழ வேண்டும். அப்படி இன்னொருவருடன் வாழும்போது இடையூறு ஏதேனும் ஏற்பட்டால் அவர்கள் அன்றிலிருந்து ஒரு வருடம் தவக்கோலம் பூண்டு தீர்த்த யாத்திரை செல்ல வேண்டும். நாரதரின் இந்த முடிவு அனைவருக்கும் சரி எனப்பட்டது. இவ்வாறு பாண்டவர்கள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தனர்.

தொடரும்...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக