Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 28 மார்ச், 2020

சிவபுராணம்..!பகுதி 169

அகத்திய முனிவரால்தான் வேகம் குறைந்துள்ளது என்பதை அறிந்த தேவேந்திரனான நகுஷன் ஓ... இந்த குள்ள மனிதரால்தான் இவ்வளவு நேரம் ஆகின்றது என்று அறிந்ததும், அகத்திய முனிவரே...!! என்னுடைய தேவை என்ன என்பது தெரியாமல் ஏன் இவ்வளவு கொடுமை செய்து கொண்டிருக்கின்றீர்கள்.

நான் இந்திராணியை அடைவதற்காக எவ்வளவு காலம் காத்துக்கொண்டு இருக்கிறேன் தெரியுமா? விரைந்து செல்லுங்கள், என்னை கொஞ்சமாவது புரிந்துக்கொண்டு இவர்களின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முயற்சி செய்யுங்கள் என்றும், அதாவது நிலத்தில் கிடக்கும் பாம்பைக் கண்டதும் அதைப் பிடித்து செல்வதற்கு கழுகு எவ்விதம் வேகமாக செல்கின்றதோ அவ்வளவு வேகத்துடன் செல்லுங்கள் என்று மிகுந்த கோபத்துடனும் இந்திராணியை அடைய வேண்டும் என்ற மோக தபாத்துடன் உத்தரவை பிறப்பித்தார்.

சாபம் பெறுதல் :

அதுவரை பொறுமை காத்து வந்த முனிவர்களோ நகுஷனின் இந்த வார்த்தையினால் மிகுந்த கோபம் கொண்டனர். அகத்திய முனிவரும் தேவேந்திரன் என்கிற உயர்ந்த பதவியில் இருந்து நீதிநெறி தவறி மோகத்தினால் எங்களை பாம்பு போல் விரைந்து செல் என்று கூறினாய் அல்லவா, நீ இப்போதே அந்த பாம்பாக மாறி இப்போதே இறப்பாயாக என்று கூறி சாபம் அளித்தார். அகத்திய முனிவரின் சாபமானது கணநேரத்தில் நிறைவேறத் துவங்கியது. அதாவது நகுஷன் பாம்பாக மாறி தேவலோகத்தில் இருந்த தேவ காவலர்களைக் கடிக்க முற்படுகையில் தேவர்கள் மற்றும் காவலர்கள் தங்களின் பாதுகாப்பு கருதி பாம்பாக இருந்த நகுஷனை அடித்தே கொன்றனர்.

இந்திராணி மகிழ்ச்சி கொள்ளுதல் :

நகுஷன், அகத்திய முனிவரின் சாபத்தினால் பாம்பாக மாறி இறந்த செய்தியானது இந்திராணியை அடைந்தது. தனது கற்புக்கு எவ்விதமான கலங்கமும் வராமல் காப்பாற்றிய அகத்தியரை நேரில் சந்தித்து அவரிடம் நிகழ்ந்தவற்றை எடுத்துரைத்து அவரிடம் ஆசி பெற்றார். பின்பு அகத்திய முனிவரை மனதார வணங்கினார் இந்திராணி.

தேவர்கள் பிரகஸ்பதியிடம் முறையிடல் :

தேவலோகத்தில் தேவராஜன் இல்லாததால் அசுரர்களால் பிரச்சனை ஏற்படுமோ எனவும், தங்களை பாதுகாப்பாக வழி நடத்திச்செல்ல தலைவன் இல்லாததை தேவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தேவகுருவான பிரகஸ்பதியிடம் முறையிட்டு தங்களது வருத்தத்தை தெரிவித்தனர். தேவர்களின் முறையீடுகளில் இருந்த உண்மையை அறிந்த பிரகஸ்பதியும் அவர்களின் வருத்தத்தைப் போக்க உபாயம் செய்யத் தொடங்கினார்.

இந்திரன் இருக்கும் இடத்தை அறிதல் :

இந்திரலோகத்தில் வடகிழக்கு திசையில் இருந்த அழகிய தாமரைகள் நிறைந்த குளத்தில் மூழ்கி அங்கு ஒளிந்துக்கொண்டு இருந்ததையும், பிரம்மஹத்தி தோஷத்தினால் தனக்கு ஏற்பட்ட இந்த இன்னல்களை போக்க வேண்டும் என்றும் இந்திரதேவன் தேவகுருவான தன்னை வேண்டி நிற்கின்றார் என்பதையும் தனது திவ்ய பார்வையால் பிரகஸ்பதி கண்டறிந்தார்.

தன்னை தஞ்சம் என்று நம்பி வந்தவரை எந்நிலையிலும் பாதுகாக்கும் தேவகுருவான பிரகஸ்பதி, இந்திரனுக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தை போக்குவதற்கான உபாயத்தை உரைக்க விருப்பம் கொண்டார். இந்திரன் மறைந்திருந்த குளத்தின் அருகில் சென்று இந்திரனை அந்த குளத்தில் இருந்து வெளியே வருமாறு கூறினார் தேவகுரு.

இந்திரனும் அதிலிருந்து வெளியே வந்து தனது தவறை உணர்ந்து தேவகுருவிடம் இந்த தோஷத்தில் இருந்து தன்னைக் காக்க வேண்டும் என்றும், அதற்கான உபாயத்தை தாங்கள் கூற வேண்டும் என்றும் பணிவுடன் வேண்டி நின்றார். தேவகுருவான பிரகஸ்பதி இந்திரதேவனிடம் உனக்கு ஏற்பட்டுள்ள இந்த பிரம்மஹத்தி தோஷத்தை போக்க பூலோகத்திலுள்ள புண்ணிய தீர்த்தங்களில் நீராட, தோஷம் நிவர்த்தி ஆகும் என்று கூறினார்.

தேவகுருவின் ஆலோசனைப்படி இந்திரன் மற்றும் மற்ற தேவர்கள் என அனைவரும் தேவகுருவிடம் ஆசிப்பெற்று பூலோகம் வந்தடைந்தனர். அவர்கள் அனைவரும் முதலில் கைலாய மலைக்குச் சென்று சிவபெருமானை தரிசித்து வழிபட்டு பின்பு தெற்கு திசையை நோக்கி தங்களது பயணத்தை துவங்கினர்.

சிவபுராணம் நாளையும் தொடரும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக