Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 30 மார்ச், 2020

சிவபுராணம்..! பகுதி 172

கடம்பவனத்தில் எம்பெருமானான சோமசுந்தரருக்கு கிழக்குப் பகுதியில் இருக்கும் மணவூர் என்ற பகுதியை தலைமையிடமாக கொண்டு பாண்டிய குலத்தில் மன்னனான குலசேகரன் என்பவர் உண்மை மறவாது நேர்மையுடன் மிகவும் வலிமையுடன் நாட்டு மக்களின் ஆதரவோடு ஆட்சி புரிந்து வந்தார்.

மக்களின் இயல்பு :

அப்பகுதியில் தனஞ்செயன் என்ற ஒரு வணிகர் வாழ்ந்து வந்து கொண்டிருந்தார். அவர் இந்த உலகில் வாழ்வதற்கு தேவையான பொருட்களை மட்டும் ஈட்டாமல் தேவலோகத்தில் வாழ்வதற்கான பொருளீட்டுவதிலும் அதிக கவனம் கொண்டு வாழ்ந்து வந்தார். அதாவது பொருள் செல்வம் மட்டும் பத்தாது அருள்செல்வத்தின் மீதும் ஆவல் கொண்டு அதை ஈட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டார்.

தான் ஈட்டிய பொருளில் தனக்குப் போக மற்ற பொருட்களை பிறருக்கும், ஆன்மீக பணிகளுக்கும் கொடுத்து பல புண்ணிய செயல்களையும் செய்து வாழ்ந்து வந்து கொண்டிருந்தார். அவர் ஒரு சிறந்த சிவ பக்தர் ஆவார்.

இலக்கை அடைதல் :

வியாபார ரீதியாக தனஞ்செயன் பல ஊர்களுக்கு சென்று வியாபாரத்தை முடித்துக்கொண்டு சொந்த ஊரான மணவூருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அந்நேரத்தில் பொழுது சாய்ந்து இருள் சூழ்ந்து இருந்தமையால் எவ்வழியில் செல்வது என்ற குழப்பத்தினால் பாதை அறியாது கடம்பவனத்தில் நுழைந்து கொண்டார்.

நீண்டதூரம் நடந்து வந்த பயண களைப்பினாலும், உடல் சோர்வினாலும் தனியாக பயணம் மேற்கொண்ட தனிமையினால் ஏற்பட்ட வருத்தத்தினாலும் மேற்கொண்டு பயணம் செய்ய விருப்பமில்லாமல் கடம்பவனத்திலேயே தங்கிவிட வேண்டும் என்று எண்ணத் துவங்கினார்.

பிறவிப்பயனை காணுதல் :

வனத்தில் தான் தங்குவதற்கு ஏற்ற இடத்தைத் தேடி அலைந்து கொண்டிருந்தார். அப்போது அவ்விடத்தில் இதுவரை காணாத ஒளி பொருந்திய சிறந்த வேலைப்பாடுகளுடன் கூடிய ஒரு விமானம் இருப்பதை கண்டார். அந்த விமானத்தை எட்டு யானைகள் தாங்கி கொண்டிருப்பதை கண்டு ஆச்சரியமும், வியப்பிலும் ஆழ்ந்து அதன் அருகில் சென்று பார்க்க துவங்கினார்.

விமானத்தின் அருகில் சென்றவுடன் தனஞ்செயன் கண்ட காட்சி அவரை பிரமிப்பில் ஆழ்த்தியது. பறவைகள் இன்னிசை ஒலிக்க... சந்திரனோ குளுமை அளிக்க... ரம்மியமான இரவு நேரத்தில் எட்டு யானைகள் தாங்கிக் கொண்டிருந்த விமானத்தின் மையத்தில் சொக்கலிங்கப் பெருமாள் எழுந்தருளி இருப்பதை கண்டார். அக்காட்சியை அவர் கண்டதும் சில மணி நேரத்தில் இந்த பிரபஞ்சத்தில் தனக்கு கிடைத்த மகிழ்ச்சி என்பது எல்லை இல்லாத அளவில் இருப்பதை உணர்ந்து தனது சுயநினைவை இழந்து ஒரு சில வினாடிகளில் தனது இயல்பு நிலைக்கு திரும்பினார். அந்த திவ்ய காட்சியை கண்டதும், தன்னுடைய பிறவிப்பயனை அடைந்ததாக எண்ணி மிகவும் மகிழ்ச்சி கொண்டார். அன்று இரவு சிவபெருமானுக்கு பூஜை செய்ய அங்கேயே தனது இரவை கழிக்க நினைத்து அவ்விடத்தில் தங்கினார்.

தேவர்களின் வருகை :

சித்ரா பௌர்ணமியான அன்று தேவர்கள் அனைவரும் விண்ணுலகிலிருந்து பூவுலகிலுள்ள கடம்ப வனத்திற்கு விமானங்களின் மூலம் வருகை தந்தனர். தேவேந்திரனுக்கு ஏற்பட்ட சாபங்களில் இருந்து விமோசனம் அளித்த வள்ளலான சொக்கலிங்க பெருமாளை வணங்க இந்திரனும், மற்ற தேவர்களும் என அனைவரும் வருகை தந்திருந்தனர்.

பேறு அடைதல் :

தேவர்களின் வருகையைக் கண்டதும் தனஞ்செயன் மிகுந்த ஆச்சரியம் கொண்டு தனக்கு காணக்கிடைக்காத வரமும் கிடைத்ததாக எண்ணி அவர்களை வணங்கி நின்றார். பின்பு தேவர்கள் அனைவரும் எம்பெருமானை வணங்கி, அவர்கள் கொண்டு வந்திருந்த பூஜைக்கு உகந்த மலர்கள் என அனைத்தையும் எம்பெருமானின் திருவடிகளில் சமர்ப்பித்து போற்றிப் பணிந்து வணங்கிச் சென்று கொண்டிருந்தனர். இக்காட்சியைக் கண்ட தனஞ்செயனுக்கு எவருக்கும் கிடைக்காத அரிய தேவ காட்சியும் கிடைத்தது. இது மட்டுமல்லாது தான் விற்பனைக்காக கொண்டு வந்திருந்த கஸ்தூரி, பன்னீர் முதலிய வாசனை திரவியங்களையும் அவர்களின் பூஜைக்கு கொடுத்து பெரும் மன மகிழ்ச்சியும் அடைந்தார்.

சிவபுராணம் நாளையும் தொடரும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக