Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 27 மார்ச், 2020

லாக் டவுனை மீறிய இளைஞர்கள்; அடுத்து நடந்த அதிர்ச்சி- பெங்களுரூ துப்பாக்கிச்சூட்டின் பின்னணி!

நாடு முழுவதும் 21 நாட்கள் லாக் டவுன் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனை மீறி வெளியே வந்தால் போலீசார் எச்சரிக்கை செய்து விரட்டி அடித்து வருகின்றனர். சில இடங்களில் அத்துமீறும் நபர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தும் சம்பவங்களையும் பார்க்க முடிந்தது. இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நேற்று காலை இளைஞர்கள் சிலர் இருசக்கர வாகனத்தில் வெளியே வந்துள்ளனர். அப்போது சஞ்சய் நகர் அடுத்த பூபசந்திராவில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
இந்த சூழலில் தஜுதின், குதுப்தின் மற்றும் அவரது நண்பர் ஆகிய மூவரும் ஒரே பைக்கில் வந்ததைக் கண்ட போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதையடுத்து எதற்காக வெளியே வந்தீர்கள் என்று இரண்டு கான்ஸ்டபிள்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு மூவரும் சரியாக பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் மூவரையும் வளைத்துப் பிடிக்க போலீசார் முயன்றனர். அப்போது போலீசாரையே மூவரும் தாக்கியுள்ளனர்.

இதனை அருகில் இருந்தவர்கள் சிலர் வீடியோ எடுத்தனர். பின்னர் சமூக வலைத்தளங்களிலும் பதிவேற்றம் செய்துள்ளனர். இதற்கிடையில் போலீசார் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. உடனே அருகிலுள்ள போலீசாருக்கு இதுபற்றி தெரிவிக்கப்பட்டது.

அவர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இதையடுத்து தஜுதின், குதுப்தின் மற்றும் அவரது நண்பரை கைது செய்ய முயன்றனர். அப்போது தஜுதின் போலீசாரிடம் இருந்து தப்ப முயன்றதாக கூறப்படுகிறது.

மேலும் கற்கள், செங்கற்களை கொண்டு போலீசாரை தாக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உடனே வானத்தை நோக்கி சஞ்சய் நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாலாஜி துப்பாக்கியால் சுட்டார்.

இதையடுத்து தப்பியோடிய நபரின் முட்டிக்கு கீழே சுட்டுள்ளார். அதில் காயமடைந்த தஜுதினை அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக போலீசார் அனுமதித்தனர். இந்த சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!