Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 21 மார்ச், 2020

இராமரின் வலிமையை சோதித்தல்!

 வாலி மிகுந்த வலிமை உடையவன். தன்னை எதிர்த்து யார் போர் செய்தாலும் அவர்களிடம் உள்ள வலிமை வாலியிடம் வந்து சேரும். இது சிவபெருமான் வாலிக்கு கொடுத்த வரம் ஆகும். ஒரு சமயம் மாயாவி என்னும் அரக்கனை அழிக்க வாலியும், சுக்ரீவனும் சென்றனர். அவ்வரக்கன் மலைக்குகையில் உள்ள ஒரு பொந்தில் ஒளிந்துக் கொண்டான். வாலி, தான் உள்ளே சென்று போரிட்டு அரக்கனை அழித்துவிட்டு வருவதாக சொல்லி சுக்ரீவனை வெளியே இருந்து காவல் புரியும்படி கூறிவிட்டு சென்றான். அக்குகையில் இருந்து வந்த இரத்ததால் அண்ணன் வாலி இறந்து விட்டதாக எண்ணிய சுக்ரீவன், அரக்கன் வெளிவந்தால் அனைவரையும் அழித்து விடுவான் என குகையை ஒரு கல்லை கொண்டு மூடிவிட்டு சென்றான்.

 பிறகு வாலி அரக்கனை வதம் செய்துவிட்டு வந்தபோது, குகை மூடி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தான். வாலி கல்லை நகர்த்திவிட்டு குகைக்குள் இருந்து வெளிவந்து கிஷ்கிந்தை அடைந்தான். அங்கு சுக்ரீவன் அரசாள்வதை கண்டு தன்னை கொன்று அரச பதவியை பறிக்க தான் சுக்ரீவன் இவ்வாறு செய்துள்ளான் என சுக்ரீவன் மீது கோபம் கொண்டான். சுக்ரீவனை கொல்ல வேண்டும் என நினைத்து அவன் போகும் இடமெல்லாம் சென்று அவனை துன்புறுத்தி வந்தான். அரக்கன் வெளிவந்தால் அனைவரையும் அழித்து விடுவான் என்பதால் தான் குகையை மூடிவிட்டு வந்தேன் என சொல்லியும் வாலி கேட்கவில்லை. இதனால் சுக்ரீவன் இம்மலையில் வந்து ஒளிந்து கொண்டான். இதனால் கோபம் கொண்ட சுக்ரீவனின் மனைவி ருமாதேவியை அவன் சிறை பிடித்து வைத்துள்ளான் எனக் கூறினான்.

 இதைக் கேட்டு இராமர் கோபம் கொண்டு எழுந்தார். சுக்ரீவா! உடனே எனக்கு வாலியைக் காட்டு. அவனை வதம் செய்துவிட்டு உனக்கு முடிசூட்டுகிறேன் என்றார். ஆனால் சுக்ரீவனுக்கு வாலியை எதிர்க்கும் அளவிற்கு இராமனுக்கு வலிமை உள்ளதா? என சந்தேகம் எழுந்தது. இதைப் பார்த்த அனுமன் சுக்ரீவனை தனியே அழைத்துப் சென்று, வாலியை கொல்லும் அளவிற்கு இராமனரிடம் வலிமை உள்ளதா என நீ சந்தேகப்படுகிறாய். வானளவில் படர்ந்து வளர்ந்து நிற்கும் மரங்களை இராமரின் வில் துளைத்தால், வாலியின் உயிரையும் துளைக்கும். ஆதலால் நாம் இதனை சோதித்துப் பார்ப்போம் என்றான். பிறகு அவர்கள் ஓர் இடத்தில் ஏழு மராமரங்கள் இருப்பதை கண்டனர்.

 இவர்கள் இராமனிடம் சென்று தங்களால் இந்த மரங்களை துளைக்க முடியுமா? எனக் கேட்டனர். இராமர் தன்னுடைய வலிமையை இவர்கள் அறிய எண்ணுகிறார்கள் என எண்ணினார். உடனே தன் கோதண்டத்தை எடுத்து நாணை பூட்டி அம்பை மரங்களை நோக்கி எய்தினார். நாணின் ஒலியைக் கேட்டு வானரங்கள் எல்லாம் பயந்து ஓடி ஒளிந்தன. இராமரின் பாணம் ஏழு மராமரங்களையும் துளைத்தது. அந்த மரங்கள் எல்லாம் வேரோடு சாய்ந்து கீழே விழுந்தது. இதைப் பார்த்த சுக்ரீவன் ஆச்சர்யமடைந்து நின்றான். ஒரு மரத்தை துளைப்பதே மிகவும் அரிது. அதுவும் ஏழு மரங்களை துளைப்பது மிகவும் பாராட்டக்குரியது என இராமரை வணங்கி தொழுதான்.

பிறகு அவர்கள் அங்கிருந்து போகும் வழியில் துந்துபி என்ற எலும்பு, மலை வடிவில் கிடப்பதை கண்டனர். இராமர் சுக்ரீவனிடம், சுக்ரீவா! இது என்ன எலும்பு? மலை போல் இவ்வளவு பெரியதாக உள்ளது எனக் கேட்டார். சுக்ரீவன், பெருமானே! துந்துபி என்ற அரக்கன் மலைபோல் பெரிய வடிவத்தை உடையவன். ஒரு சமயம் இவ்வரக்கன் வாலியிடம் போருக்கு வந்தான். அப்போரில் வாலி அரக்கனை கொன்று விட்டான். அரக்கனுடைய இரத்தம் சிந்திய இடமே எலும்பாக மாறி உள்ளது என்றான். இராமர் இலட்சுமணரை பார்த்து, தம்பி! இந்த எலும்பை அகற்றிவிடு என்றார். இலட்சுமணர் தன் கால் பெருவிரலால் அதனை அகற்றினார். இதனைக் கண்ட சுக்ரீவன், இராமருக்கு நிகரான பேராற்றால் உடையவர் என இலட்சுமணரை போற்றி வணங்கினார்.

தொடரும்.....


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக