Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 3 ஏப்ரல், 2020

சிவபுராணம்..!பகுதி 189

சிவபெருமான் திருநடனம் செய்யும் வேளையில் கங்கை நதி பாயும் ஒலியுடன், மங்கல நாதமும் இணைந்து கேட்க தொடங்கியது. மந்திர ஒலியுடன் வேதத்தின் ஒலியும் இணைந்து, கரங்களில் ஏந்திய தீயின் ஒளியுடன், திருவடி சிலம்பின் ஒலியும் இணைந்த ஒலியானது அனைத்து இடங்களுக்கும் பரவத் துவங்கியது. எம்பெருமான் ஆடிய அவ்விடத்தில் இருந்து உருவாகிய அந்த ஒலியானது அங்கிருந்த அனைவருக்கும் அமிர்தத்தைக் காட்டிலும் மிகுந்த இன்பத்தையும், பரவசத்தையும் அளித்துக் கொண்டிருந்தது.

எம்பெருமான் வெள்ளியம்பலத்தில் ஆடிய நடனத்தை கண்டு கொண்டிருந்த பதஞ்சலி முனிவரும், வியாக்ர பாத மகரிஷியும் தரிசித்த இக்காட்சிகளை கண்களைவிட்டு அகலாத வண்ணம் என்றும் நினைவில் இருக்க தன் கரங்களை சிரத்தின் மேல் கூப்பிக்கொண்டு எம்பெருமானின் திருவடிகளில் விழுந்து வணங்கினார்கள். மேலும், எம்பெருமானை பலவாறாக துதித்து மனதாரவும், நாவாரவும் போற்றி வணங்கினார்கள். இவ்விரு முனிவர்களின் வேண்டுகோளுக்கிணங்கி ஆடிய அத்திருநடனத்தை தேவர்களும், முனிவர்களும், யோகிகளும், கந்தர்வர்களும், கிம்புருடர்கள், அவுணர்கள் ஆகிய எல்லோரும் தரிசித்து வாழ்க்கையின் பேரின்பக் கடலில் மூழ்கினார்கள். பதஞ்சலி மாமுனிவரும் சிவானந்தத்தில் மூழ்கி இறைவனை பலவாறாக தோத்திரம் செய்து அவரை புகழ்ந்து பாடிக் கொண்டிருந்தார்.

வெள்ளியம்பலத்தில் திருநடனம் ஆடிக்கொண்டே இருந்த சுந்தரேஸ்வரர் இவ்விரு முனிவர்களையும் நோக்கி முனிவர்களே நீங்கள் விரும்புவது யாது? என்று வினவினார். எம்பெருமானுடைய எதிர்பாராத இந்த வினாவிற்கு யாது உரைப்பது? என்று அறியாமல் முனிவர்கள் இருவரும் எம்பெருமானை வணங்கி, எம்பெருமானே... தாங்கள் ஆடிக்கொண்டிருக்கும் இந்த தெய்வ திருநடனமானது எப்பொழுதும் எந்த காலத்திலும் இந்த வெள்ளியம்பலத்தில் நிலைத்து நிற்கவேண்டும் என்று வேண்டினார்கள்.

அடியவர்களின் வேண்டுகோளுக்கிணங்கி எம்பெருமான் வெள்ளியம்பலத்தில் ஆடிய நிலையில் இருந்தார். பின்பு, திருமண விழாவிற்கு வந்த அனைத்து மக்களும் வயிறார உண்ண உணவு பரிமாறப்பட்டது. இலட்சக்கணக்கான மக்கள் வந்து உண்ட பின்னும் உணவானது குறையாமல் இருந்ததை கண்டு அங்கிருந்த காவலர்களும் சமையல்காரர்களும் தயங்கி கொண்டிருந்தனர்.

இவ்வளவு மக்கள் வந்திருந்தும் அவர்களுக்கு தேவையான உணவுகளை சமைத்து படைத்தும், உணவானது குறையாமல் இருப்பதை எண்ணி வருந்திக் கொண்டிருந்தனர். பின்பு, தங்களது ராணியான மீனாட்சி அம்மையாரிடம் சென்று நிகழ்ந்தவற்றை எடுத்துரைத்தனர். மீனாட்சி அம்மையாருக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. ஏனெனில் திருமண விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் உணவளித்து இன்னும் நம்மிடம் உணவானது மீதம் உள்ளதை எண்ணி மகிழ்ச்சி கொண்டிருந்தார்.

பின்பு, எவ்வளவு உணவு இருக்கின்றது என்பதை காண உணவு விடுதிக்கு வந்து பார்வையிட்டார். மிகுந்த உணவுகள் மீதமாக இருப்பதைக் கண்டு ஒருவிதமான ஆணவத்துடன் காணப்பட்டிருந்தார். அதாவது மாப்பிள்ளை வீட்டாரிடம் இன்னும் சாப்பிடவில்லையோ என்று எண்ணி கணவரான சுந்தரேச பெருமானிடம் சென்று வினவினார். ஐயனே... தங்களின் உடன் வந்தவர்கள் இன்னும் உணவருந்தாமல் இருக்குமேயானால் அவர்களுக்கு தேவையான உணவுகள் இங்கு தயாரான நிலையில் இருக்கின்றன எனவும் அவர்களை சென்று உண்டுவரச் சொல்லுங்கள் என்றும் கூறினார்.

பிராட்டியாரின் பேச்சில் ஒருவிதமான ஆணவம் இருப்பதை எம்பெருமான் புரிந்துகொண்டார். மனிதனிடம் ஆணவம் என்பது நுழைந்துவிட்டால் இறைவனை அடைவது என்பது சாத்தியமாகாது. அதுவே தேவியிடம் இருக்கின்ற ஆணவத்தைப் போக்க எம்பெருமான் ஒரு திருவிளையாடலை நடத்தத் துவங்கினார். பின்பு எம்பெருமானும் பூதக்கணங்களை அழைத்து சாப்பிடாதவர்கள் யாரேனும் இருக்கும் பட்சத்தில் சென்று சாப்பிடுங்கள் என்று கூறிக் கொண்டிருந்த வேளையில் குண்டோதரன் என்ற பூதக்கணத்தை தவிர மற்றவர்கள் அனைவரும் சாப்பிட்டுவிட்டோம் என்று கூறினர்.

சிவபுராணம் நாளையும் தொடரும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக