Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 15 ஏப்ரல், 2020

சிவபுராணம்..!பகுதி 200

எம்பெருமானை பார்த்து சகல நேரங்கள் யாவற்றிலும் தியானத்தில் மூழ்கி இருக்கும் உமக்கு, இந்த உலகத்தில் இருக்கக்கூடிய அனைத்து அழகுகளையும் ஒருங்கே அமைந்து... அழகிற்கே அழகாக விளங்கக்கூடிய உமையவள் தேவையா? அந்த பேரழகியை எனக்கு அளித்துவிட்டால் நான் உன்னிடம் போர் புரியாது எனது ராஜ்ஜியத்திற்கு திரும்பி சென்று விடுகின்றேன் என்றுரைத்தான் ஜலந்திரன். ஜலந்திரனுடைய பேச்சுக்களை கேட்டதுமே எம்பெருமானுக்கு சினமானது உருவாகத் துவங்கியது.

அட மூடனே! உனது அழிவிற்காக என்னிடம் வந்துள்ளாயா? என்றும், எனது தேவியை கேட்கும் அளவிற்கு உனக்கு துணிச்சல் இருக்கின்றதா? என்றும், பிரபஞ்சமே அதிரும் அளவிற்கு மிகுந்த கோபத்துடன் கேட்கத் துவங்கினார் எம்பெருமான். ஆனால், ஜலந்திரனோ மிகுந்த அகம்பாவத்துடன் இந்திரன் முதலான தேவர்களையும், திருமாலையும் மற்றும் பிரபஞ்சத்தை உருவாக்கக்கூடிய பிரம்ம தேவரையும் வென்ற எமக்கு... அழித்தல் தொழில் செய்யும் நீ ஒரு பொருட்டா? உம்மை அழிக்க எமக்கு ஒரு கணம் போதுமானதாகும். எனது பராக்கிரமத்திற்கு முன்னால் நீ சாதாரணமானவன் என்று கர்ஜித்தான்.

மேலும் போரினால் இழப்புகள் இருக்கும் என்ற காரணத்தினால் மட்டுமே உம்மிடம் யாம் நிதானத்துடன் பேசிக்கொண்டிருக்கின்றோம். எமக்கு உமது உமையவளை அனுப்பிவிட்டால் போரானது இல்லாமல் நான் எனது ராஜ்ஜியத்திற்கு சென்றுவிடுவேன் என்று கூறினான். அந்நேரத்தில் எவரும் எதிர்பாராத விதமாக உமையவளும் அவ்விடம் வரவே ஜலந்திரனுடைய எண்ணங்கள் முழுவதுமாக மாறத்துவங்கியது. அதாவது நாரதர் உரைத்தது போலவே உமையவள் பேரழகியே என்னும் எண்ணத்திற்கு அடிமையாகினான். மேலும் கைலாய நாயகியை நெருங்கத் துவங்கிய நேரத்தில் எம்பெருமானுடைய பூதப்படைகளும் அசுரப்படைகளை எதிர்க்க துவங்கினார்கள்.

எங்கள் அன்னையை எங்கள் முன்னே தவறாக பேசிய உம்மை இக்கணப் பொழுதிலேயே அழித்து விடுகின்றோம் என்றுரைத்து பூத கணங்கள் யாவும் அசுரப்படைகளை எதிர்த்துப் போர் செய்யத் துவங்கினர். பூத கணங்கள் கொண்ட படைகளுக்கு முன்னால் அசுரப்படைகள் யாவும் அரை கணப்பொழுதில் தங்களது அழிவை சந்தித்தன. ஒரு சாதாரண தவம் புரிபவனிடம் நாம் தோல்வியைக் கண்டு கொண்டு இருக்கின்றோம் என்பதை உணர்ந்ததும் இறந்தவர்களுக்கு உயிர் அளிக்கக்கூடிய மந்திரம் தெரிந்த அசுரகுல குருவான சுக்கிராச்சாரியாரை மனதில் எண்ணினான் ஜலந்திரன்.

கைலாயத்தில் நடைபெற்று கொண்டிருக்கும் அனைத்தையும் கண்ட சுக்கிராச்சாரியார் இது முறையானது அன்று என்று ஜலந்திரனுக்கு எடுத்துரைத்தும், ஜலந்திரன் மோகத்தினால் அவருடைய அறிவுரைகளை ஏற்காமல் தங்களுடைய கண்முன்னே அசுரப்படைகள் தோற்று கொண்டிருக்கின்றன. அவர்கள் யாவரையும் நீங்கள் காப்பாற்றி தங்களுடைய மிருத சஞ்சீவினி மந்திரத்தால் இறந்த வீரர்களை உயிர்ப்பிக்க வேண்டும் என்று கூறினான்.

இனி நிகழ்வது யாது என்று புரியாமல் சுக்கிராச்சாரியாரும் வேறு வழியின்றி தான் தவமிருந்து பெற்ற வரத்தினை கொண்டு உயிரிழந்த அசுரர்களை உயிர்ப்பிக்க துவங்கினார். பூத கணங்களுடன் தேவ படைகளும் வந்து இணைந்து கொண்டன. பின்பு பூத, தேவ படைகளுக்கும், அசுரர்களுக்கும் இடையே கடுமையான போரானது நடைபெறத் தொடங்கியது. போரில் இறந்து கொண்டிருந்த தேவ வீரர்கள் அனைவரையும் துரோணாசலத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட ஒளஷாதிகளைக் (மரணத்திலிருந்து விடுவிக்கக்கூடிய நீர், மூலிகைகள்) கொண்டு பிரகஸ்பதியானவர் உயிர்ப்பிக்க துவங்கினார்.

தேவ குருவான பிரகஸ்பதியின் மூலம் இறந்த தேவர்கள் மற்றும் பூதகணங்களும் உயிர் பெற்றுக் கொண்டிருப்பதை அறிந்ததும் துரோணாசல பர்வதத்தை அடியுடன் பெயர்த்து அதை கடலில் தூக்கி எறிந்தான் ஜலந்திரன். அவ்வாறே தேவர்கள் அனைவரும் அசுரர்கள் உயிர் பெற்று வருவதை தடுக்க எம்பெருமானை எண்ண தொடங்கினர். அசுர தேவர்களின் பலமாக இருக்கக்கூடிய சுக்கிராச்சாரியாரை தடுத்திடவே தேவர்கள் யாவரும் எம்பெருமானை துதிக்கத் தொடங்கினர்.

எம்பெருமானும் தேவர்களின் வேண்டுதலை ஏற்றுக்கொண்டு சுக்கிராச்சாரியாரை தடுக்கும் வகையில் ஒரு சக்தியை அனுப்பினார். அச்சக்தியானது சுக்கிராச்சாரியாரை பிடித்து அவரை செயல்படவிடாமல் முழுவதுமாக தடுத்தது. சுக்கிராச்சாரியார் இல்லாததால் கண பொழுதுகள் அதிகரிக்க அதிகரிக்க அசுரர்களின் படை பலமானது குறைய துவங்கியது. தேவ வீரர்களால் அசுர வீரர்கள் கொல்லப்பட்டு வருவதை அறிந்ததும் தேவ வீரர்களை வதம் செய்வதற்காகவே ஆவேசத்துடன் சிவகணங்கள் மற்றும் தேவர்கள் இருந்த இடத்தில் ஜலந்திரன் தன்னந்தனியாக சென்று போரிடத் தொடங்கினான்.

சிவபுராணம் நாளையும் தொடரும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக