Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 16 ஏப்ரல், 2020

கர்ணனிடம் பிறப்பின் இரகசியத்தை கூறும் கிருஷ்ணர்...!

கிருஷ்ணருக்கு, துரியோதனனின் சூழ்ச்சி தெரிந்தும், தெரியாததைப் போல ஆசனத்தில் மேல் அமர்வதற்கு ஏறினார். அவர் ஆசனத்தில் அமர்வதற்காக படியில் ஏற சென்றார். ஆனால் அவர் கால்களை முழுதாகக் கூட அதன்மேல் வைக்கவில்லை உடனே சடசட என்று முறிந்தது. 

அடுத்த விநாடியில் பள்ளத்தை நோக்கி கீழே விழுகின்ற நேரத்தில் கிருஷ்ணர் உடனே தன்னை சமாளித்து கொண்டு விண்ணும் மண்ணும், திசைகளும் ஈரேழு பதினாலு புவனங்களும் அடங்காத தன் விஸ்வரூபத்தை மேற்கொண்டார். அப்போது பூமியும், ஆகாயமும் சில நிமிடங்கள் ஆடிப் போனது. கிருஷ்ணர் திருவடிகள் கீழே பாதாளத்தை நோக்கித் தாழ்ந்தன. 

அவருடைய சிரம் மேலே வானமண்டலத்தை துளைத்துக் கொண்டு போனது.

பள்ளத்தின் அடியில் இருந்த வஞ்சக வீரர்கள் அந்தப் பரம்பொருளின் காலடியில் கிடந்து நசுங்கினர். கிருஷ்ணரின் விஸ்வரூப சக்தியை தாங்க முடியாமல் ஈரேழு பதினாலு புவனங்களிளும் பூகம்பம் ஏற்பட்டு நடுங்கிப் போனது. 

பின்பு கிருஷ்ணர் தன்னால் மற்ற உயிர்களுக்கு துன்பம் ஏற்படக்கூடாது என்று எண்ணி தன் சுய உருவை நீக்கி சிரித்துக் கொண்டே துரியோதனனுக்கு முன்னால் நின்றார். துரியோதனன், தான் சூழ்ச்சி செய்தும் கிருஷ்ணரைக் கொல்ல நினைத்தது பலிக்காமல் போனதை நினைத்து மிரண்டு போனான். ஆனால் பயத்தை வெளிக்காட்டி கொள்ளாமல் நடித்தான். சிரித்துக் கொண்டு நின்ற கிருஷ்ணரைக் கோபத்தோடு பார்த்தான்.

கிருஷ்ணர், துரியோதனனிடம் கெட்ட எண்ணத்தோடு என்னைக் கொல்வதற்கு நீ குழி வெட்டினாய். ஆனால் இதே குழிக்குள் உன்னையும் உன் குலத்தையும் புதைத்து நாசம் செய்ய என்னால் முடியும். ஆனால் நான் உங்களை கொல்லாமல் விடுகிறேன். உங்கள் குலத்தை வேறுடன் அழித்து கொல்வதாக பாண்டவர்கள் சபதம் செய்திருக்கிறார்கள். அவர்களின் சபதம் நிறைவேற வேண்டும் என்று உங்களை இப்போது உயிருடன் விட்டுச் செல்கிறேன். 

உனக்கும் பாண்டவர்களுக்கும் இடையே உள்ள பகை காரணமாகப் போர் ஏற்பட்டால் பாண்டவர்கள் சார்பாக ஆயுதமெடுத்து உன்னுடன் போர் புரியமாட்டேன் என்று உனக்கு வாக்களித்து விட்டேன் என்று கூறி கிருஷ்ணர் அவையில் இருந்து வெளியேறினார்.

கிருஷ்ணர் அவையில் இருந்து வெளியே செல்லும் முன்பு, கர்ணனை சைகை காட்டி தன்னுடன் சிறிது தொலைவு அழைத்துச் சென்றார். கிருஷ்ணர் அழைத்த உடன் ஏதோ ஒரு சக்தி அழைத்தது போல கர்ணன் தன்னை அறியாமல் அவருடன் சென்றான். 

இருவரும் தனியாக வந்தவுடன் கிருஷ்ணர் கர்ணனைப் பார்த்து, கர்ணா! இப்போது நான் ஒரு இரகசியத்தை உன்னிடம் கூறப்போகிறேன். இதனைக் கேட்டு நீ மனம் கலங்கக் கூடாது என்று கூறினார். நீ குந்திக்குப் பிறந்த முதல்மகன். பாண்டவர்கள் ஐந்து பேரும் உனக்கு தம்பிமார்கள். 

துர்வாச முனிவர் உன் தாய் குந்திக்கு கொடுத்த வரத்தால், உன்னை சூரிய பகவானால் பெற்றாள். சிறிது காலத்தில் உண்மை என்ன என்று உனக்கே தெரியவரும் என்று கூறினார்.

அதனால் நீ துரியோதனனிடம் இருந்து விலகிப் பாண்டவர்கள் பக்கம் வந்துவிடு. அவ்வாறு நீ வந்தால் மூத்த மகனாகிய உனக்கு அரசாட்சி கிடைக்கும். நாட்டை ஆளும் அருமையான வாய்ப்பை இழந்து விடாதே என்று கிருஷ்ணர் கூறினார். கர்ணன், கிருஷ்ணர் கூறியதைக் கேட்டு தனக்குள் யோசித்துக் கொண்டிருந்தான். 

பின்பு கர்ணன், கிருஷ்ணா! நன்றியை விட அரச பதவி எனக்கு பெரியதல்ல. நான் அரச பதவிக்கு ஆசைப்பட்டு துரியோதனனை விட்டு வந்தால் இந்த உலகம் என்னை நன்றி கெட்டவன் என்று பழிச்சொல்லும். நான் இந்த பழிச்சொல்லுடன் வாழ விரும்பவில்லை. என்னுடைய பிறப்பை உணர்த்தியதற்கு நன்றி. ஆனால் உண்ட சோற்றுக்கு உழைக்க விரும்புகிறேன். துரோகம் செய்ய நினைக்க விரும்பவில்லை. என்னை வற்புறுத்தாதீர்கள் என்று கூறிவிட்டான்.

கிருஷ்ணரும், கர்ணனுக்கு விடை கொடுத்து அனுப்பினார். கர்ணன் சென்றதும் அசுவத்தாமனை கிருஷ்ணர் அழைத்து வரச் செய்தார். அசுவத்தாமனை தனியாக அழைத்துச் செல்லாமல் அவைக்குள்ளேயே ஓரமாக மெல்லிய குரலில் உரையாடினார். 

கிருஷ்ணர், அவனிடம் துரியோதனன் செய்வது அநியாயம் என்பது உனக்கே தெரியும். காட்டில் வசித்து வந்த பின்பு பாண்டவர்களுக்கு அவர்கள் நாட்டை ஒப்படைக்கவேண்டும் அல்லவா? ஆனால் இப்போது ஏன் கொடுக்க மறுக்கிறார்கள். அதனால் நீ அவர்களுக்கு போரில் துணையாக நிற்காதே. உன்னைப் படைத் தலைவனாக நிற்கச் சொன்னால் மாட்டேன் என்று சொல்லி மறுத்து விடு. கௌரவர்கள் பக்கத்தில் நீ படைத் தலைவனாக நிற்க மறுத்து விட்டால் பின் பாண்டவர்கள் வெற்றி பெறுவார்கள் என்று தந்திரமாக கூறிவிட்டு தம் கையிலிருந்த மோதிரத்தை வேண்டுமென்றே கீழே போடுகிறார்.

கிருஷ்ணருக்கு பதில் கூறுவதற்காக பேச ஆரம்பித்த போது அசுவத்தாமன் பதிலைக் கூறாமல் மோதிரத்தை எடுப்பதற்காக கீழே குனிந்தான். தன் தந்திரங்களை நினைத்து கிருஷ்ணர் சிரித்துக் கொண்டிருந்தார்.

 கிருஷ்ணர் சிரித்துக் கொண்டிருப்பதையும், அசுவத்தாமன் கீழே குனிவதையும் அவையில் இருந்தவர்களும், துரியோதனனும் பார்த்தனர். அசுவத்தாமன் மோதிரத்தை எடுத்துக் கிருஷ்ணன் கையில் கொடுத்த போது சூரியனைச் சுற்றி வளையம் இருப்பதாகக் கூறி அசுவத்தாமனை சூரியனைப் பார்க்கச் சொன்னார். 

அசுவத்தாமன் உடனே சூரியனைப் பார்த்தான். பின்பு கையில் இருந்த மோதிரத்தை கிருஷ்ணரிடம் கொடுத்தான். இதனைக் கண்ட அனைவரும் அசுவத்தாமன், கிருஷ்ணர் காலடியில் விழுந்து வணங்கி அவர் கைமேல் சூரியனைச் சாட்சியாக வைத்து ஏதோ சத்தியம் செய்கிறான் என்று தவறான அர்த்தத்தில் புரிந்து கொண்டார்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக