வியாழன், 7 மே, 2020

சிவபுராணம் - பாகம் 2 பகுதி 014

கணநாத நாயனார் !!

சோழ மண்டலத்தில் சீர்காழியில் பிராமண குலத்தில் பிறந்தவர்தான் கணநாத நாயனார். அத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் திருத்தோணியப்பரை மூன்று பொழுதும் போற்றித் துதித்து... உள்ளம் உருக... வழிபாடு செய்து வந்தார். குலத்திற்கு ஏற்ப சிவாகம விதிப்படி தோணியப்பரை வழிபட்டு வந்தார்.

சிவனடியார்களுக்குத் திருத்தொண்டு செய்யும் பணியை உயர்ந்த அறமாக கொண்டு வாழ்க்கையை நடத்தி வந்தார். இறைவனுக்கு தேவையான

திருநந்தனவனம் வைத்தல்,

பூக்கொய்தல்,

திருமாலைக்கட்டல்,

திருமஞ்சனமெடுத்தல்,

திருவலகிடுதல்,

திருமெழுக்கிடுதல்,

திருவிளக்கேற்றல்,

திருமுறையெழுதல்,

திருமுறைவாசித்தல்
முதலாகிய திருத்தொண்டுகளையும், மேலும் அடியார்களுக்குத் தேவையான உதவிகளையும் செய்து வந்தார்.

திருத்தலம் தொடர்பான பணிகளில் விருப்பம் கொண்டவர்களுக்கு அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப ஒரு திருத்தொண்டினைத் தேர்ந்தெடுக்கச் செய்து, பின் அதனை முறையே பயிற்றுவிப்பார். பின் நியாயம் தவறாது அத்தொண்டினையும், அந்த தொண்டினை செய்யக்கூடியவரையும் ஊக்கப்படுத்துவார்.

சமய குரவராகிய திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரைத் தினந்தோறும் மூன்று பொழுதிலும் விதிப்படி பூஜை செய்து கொண்டு வந்தார். இறைவழிபாட்டின் இனிமையையும், தனிமையையும் உணர்ந்திருந்த இவர் இல்லத்தின் இனிமையையும் நன்கு உணர்ந்திருந்தார். பொய்யில் புலவர் வகுத்த இல்லறத்தின் இனிமையையும், இல்லற நெறியையும் நன்கு உணர்ந்து மனையாளோடு கருத்து ஒருமித்து வாழ்ந்து வந்தார்.

கணநாதரின் திருத்தொண்டினையும், பக்தியின் மேன்மையையும் கண்டு அவருக்குப் பேரின்ப நிலையை அளிக்கத் திருவுள்ளம் கொண்டார் திருத்தோணியப்பர். இந்த மண்ணுலகில் பேரும் புகழும் பெற்று வாழ்ந்த அடியார், இறைவனின் அருளால் பேரின்ப வீடு பெற்றுச் சிவகணங்களுக்குத் தலைமைப் பதவி பெற்றுத் திருத்தொண்டில் நிலையான இன்பத்தைப் பெற்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்