Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

புதன், 13 மே, 2020

சிவபுராணம் - பாகம் 2 பகுதி019

காரி நாயனார் !!

வளமையுடனும், செழுமையுடன் திகழ்ந்து வந்த திருக்கடவூர் என்னும் ஊரில் மறை வேதம் அறிந்த சான்றோர்கள் வாழ்கின்ற வளமை மிகுந்த இப்பகுதியில் காரி நாயனார் என்னும் புலவர் அவதரித்தார். இவர் தமிழில் புலமையுடன் கவிப்பாடும் திறமை கொண்டு விளங்கினார். இயல், இசை மற்றும் நாடகம் என்னும் முத்தமிழிலும் தேர்ச்சி பெற்று விளங்கினார். எம்பெருமானின் மீது கொண்ட அளவற்ற அன்பினாலும், பக்தியாலும் எம்பெருமானை கொண்டு பல பாடல்களையும் இயற்றினார்.

சொற்கள் மற்றும் கவி புனைவதிலும் வல்லவராக திகழ்ந்து வந்தார். சொல் விளங்கப் பெருமான் மறைந்து நிற்கும் வண்ணம் தமது பெயரால் காரிக்கோவை என்னும் தமிழ் நூல் ஒன்றினை புனைந்தார். தாம் இயற்றிய நூலின் பொருளை அதாவது, மறைந்திருக்கும் பொருள் (எம்பெருமான்) அனைவரும் வியக்கும் வண்ணம் மூவேந்தர்கள் மற்றும் ஆன்றோர், சான்றோர் என நிறைந்து இருந்த அரசவையில் அனைவரும் போற்றுமாறு அப்பாடல்களின் பொருளினை அழகுற எடுத்துரைத்தார்.

இவரின் பாடல்களும் அதில் மறைப்பொருளாக இருந்து வந்த எம்பெருமான் பற்றியும், காரியார் எடுத்துரைத்த விதமும் மூவேந்தர்களுடைய உயர்ந்த நட்பினைப் பெற வழி வகுத்தது. இவருடைய தமிழ்ப் புலமையை எண்ணி வியப்படைந்த மூவேந்தர்களும் மற்றும் பிற இடங்களில் இருந்தும் எண்ணற்ற பரிசுப் பொருட்களும், செல்வங்களும் வந்து குவிந்தன.

கிடைத்த பொருட்கள் யாவற்றையும் தனக்கென வைத்துக்கொள்ளாமல் அதை நல்முறையில் பயன்படுத்தினார். அதாவது, பரிசாக வந்த பொருட்களைக் கொண்டு பழுது மற்றும் சேதம் அடைந்த சிவன் கோவில்களைப் புதுப்பித்தார். சிவன் திருத்தலம் பலவற்றை கட்டி கும்பாபிஷேகம் நடத்தினார். சிவனடியார்களுக்கு அன்போடு அமுதளித்து அவர்களுக்கு வேண்டிய பொருட்கள் யாவற்றையும் இல்லை என்று உரைக்காது வாரி வாரி கொடுத்து மனம் மகிழ்ந்தார்.

அல்லும், பகலும் சிந்தையில் திருக்கடவூரில் கோயில் கொண்டுள்ள அமிர்தகடேசுவரரையும், அபிராம வல்லியையும் சேவித்துக் கொண்டே இருந்தார். அடியவர் கொண்ட அன்பினால் அகம் மகிழ்ந்த எம்பெருமான் தொண்டருக்குப் பேரருள் அளித்தார். தமது புகழ் உடம்போடு கயிலைமலை சேர்ந்து பேரின்பம் கண்டார் காரி நாயனார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக