Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 27 மே, 2020

சிவபுராணம் - பாகம் 2 பகுதி 029

சிறுத்தொண்ட நாயனார் !!

காவிரி வளநாட்டில் திருச்செங்கோட்டங்குடி நீர் வளமும், நில வளமும் நிறைந்துள்ள ஓர் அழகிய ஊர். எம்பெருமான் எழுந்தருளியிருக்கும் கோவில் கணபதீச்சுரம் என்று அழைக்கப்பட்டது. அங்கு மாமாத்திரர் என்னும் குலம் சிறந்து விளங்கியது. அந்த குலத்தில் பிறந்தவர்கள் அரசர் குலத்திற்கு படைத்தளபதியாகவும், அமைச்சராகவும் பணியாற்றி வந்தனர். இந்த குலத்தில் பிறந்த பரஞ்ஜோதியார் என்னும் தொண்டர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் பல்லவ மன்னனிடம் படைத்தலைவராகப் பணியாற்றி வந்தார்.

வாளின் வலிமையும், உடல் வலிமையும் கொண்டிருந்த அவர் போர்க்கள பயிற்சியில் பேராற்றல் பெற்று விளங்கினார். எண்ணற்ற போர்களில் மன்னனுக்கு ஈடில்லா மாபெரும் வெற்றியை வாங்கிக் கொடுத்தார். இவ்வாறு வீரமிக்கவராய் வாழ்ந்த பரஞ்ஜோதியார் பக்தி மிக்கவராகவும் இருந்தார். எந்த நேரமும் எம்பெருமானின் சிந்தனைகள் சிந்தையில் எண்ணி கொண்டே வந்தார். அதோடு மட்டுமல்லாமல் சிவனடியார்களைச் சிரம் தாழ்த்தி வரவேற்று உபசரித்து உண்ணும் உயர்ந்த பண்பினை கொண்டிருந்தார்.

அடியார் முன்பு தன்னை சிறியவராக எண்ணிக் கொண்டு அவர்களிடம் மிகவும் அடக்கமான முறைகளில் உள்ளம் உருக தொண்டாற்றிய காரணத்தால் இவரை அனைவரும் சிறுத்தொண்டர் என்று அழைத்தனர். முன்னோரு சமயத்தில் பரஞ்சோதியார் பெரும்படையைத் திரட்டிக் கொண்டு வடநாடு சென்றார். பெரும்படைகளுடன் நடைபெற்ற போரில் வென்று வாதாபியை வென்றார். உலகெல்லாம் பல்லவன் கீர்த்தி திக்கெட்டும் முழங்க தென்புலம் திரும்பி வந்தார்.

பரஞ்ஜோதியாரின் வீரத்தை பார்த்த பல்லவ மன்னன் பெருமகிழ்ச்சி கொண்டார். அவையறிய அவரது வீரத்தையும், தீரத்தையும் வானளாவாகப் போற்றிப் புகழ்ந்தான். மன்னரிடம் போரில் வென்றதால் விருதுகள் பல பெற்றார். ஒருநாள் அமைச்சர்கள் பரஞ்ஜோதியாரின் வெற்றிக்கான முக்கிய காரணத்தை அறியும் பொருட்டு மன்னனிடம் சென்றனர். பரஞ்ஜோதியார் இறைவனின் திருவடிகளில் நிறைந்த பக்தியுடையவர். எம்பெருமானின் அருளும், பரஞ்ஜோதியாரின் பக்தியுமே இவரது வெற்றிக்கு காரணமாகும். இறைவன் மீது மிகுந்த பக்தி கொண்ட நம் தளபதியை எதிரி நாட்டு வேந்தர்கள் வெற்றி கொள்வது என்பது எவ்வாறு சாத்தியமாகும் என்று கூறினார். அமைச்சர்கள் உரைத்ததைக் கேட்ட வேந்தர் மிகவும் திகைப்படைந்தார்.

பரஞ்ஜோதியாரின் சிவபக்தியை எண்ணி வேந்தர் மிகவும் மகிழ்ச்சி கொண்டார். அதே சமயத்தில் பரஞ்ஜோதியாரை எண்ணி வேதனையும் அடைந்தார். ஏனெனில் தன்னை அறியாமல் தாம் எம்பெருமானிடம் ஏதோ பிழை இழைத்தாக எண்ணி மனம் வாடினார் மன்னர். எம்பெருமானை எந்த வேளையிலும் சிந்தித்து அவருடைய நாமத்தை உச்சரித்து கொண்டு இருக்கக்கூடிய அடியாரை போர் முனைக்கு அனுப்பி மாபெரும் தவறு இழைத்ததாக எண்ணி தனக்குள்ளாகவே கலக்கம் கொண்டார். அந்த கலக்கமே அவருடைய சிந்தையில் தடுமாற்றத்தையும் ஏற்படுத்தியது.

எதிரிநாட்டு போர்வீரர்களுடன் போர் புரியும்போது எந்தவிதமான நிகழ்வுகளும் நிகழலாம். ஒருவேளை போர்க்களத்தில் எம்பெருமானை மனதில் கொண்டு வழிபடும் இவ்வடியாருக்கு ஏதேனும் தீங்கு ஏற்படுமாயின் அது தமக்கு எவ்வளவு பெரிய அவப்பெயரை உருவாக்கிவிடும் என்பதை எண்ணி மனம் கலங்கினார். இந்த வகையான எண்ணமே மன்னரை பரஞ்ஜோதியாரின் செயல்பாடுகளில் ஒரு முடிவினை எடுக்க வழிவகை செய்தது. அதாவது பரஞ்ஜோதியார் போருக்கு படைவீரர்களை வழிநடத்தி செல்லும் தளபதியாக அவரை கருதாமல் அவரை வழிபடுவதற்குரிய பெரிய மகானாக கருதினார். அந்த எண்ணத்தை உடனே செயல் வடிவமாக மாற்ற வேண்டும் என்ற எண்ணம் கொண்டு பரஞ்ஜோதியாரை உடனடியாக வரவழைத்தார் வேந்தர்.

காவல் ஆட்கள் மூலம் மன்னரின் ஆணையானது பரஞ்ஜோதியாரை அடைந்தது. அரசரின் அணையை கேட்டதும் அரண்மனைக்கு விரைந்து வந்தார் பரஞ்ஜோதியார். மன்னரை கண்டதும் மிகுந்த பணிவுடன் உரையாட துவங்கிய பரஞ்ஜோதியாரிடம் அரசர் அவரிடம் உள்ள பணிவை காட்டிலும் அதிக பணிவுடன் தவசீலரே... யாம் தங்களை பற்றி புரிந்து கொள்ளாமல் தங்களைப் போருக்கு அனுப்பி பலவிதமான இன்னல்கள் கொடுத்ததற்கு எம்மை பொறுத்தருள வேண்டும் என்றும், இந்த எளிய அடியேனுக்காக இனி தாங்கள் எம்முடைய ஆணைக்கோ அல்லது ஏவலுக்கோ தாங்கள் எனக்கு சேவை புரிதல் ஆகாது. இனி தாங்கள் தங்களின் விருப்பம் போலவே எம்பெருமானின் அடியை போற்றி தாங்கள் விரும்பியவாறு சிவநெறியில் இருந்து சிவத்தொண்டுகள் பல புரிந்து விளங்குவீர்களாக என்று வேண்டி நின்றார்.

மன்னர் உரைப்பதை கேட்ட பரஞ்ஜோதியார் திடுக்கிட்டு நின்றார். அந்த நிலையில் என்ன செய்வது? என்று அறியாமல் நின்று கொண்டு இருந்தார். முடிவில் மன்னனின் ஆணையை ஏற்று கொண்டார். இங்கு நடப்பவை எல்லாம் எம்பெருமானின் அருட்வருட் செயலே என்று மனதில் உறுதி கொண்டார். பின்பு மன்னர் பரஞ்ஜோதியாருக்கு நிறைய பொன்னும், பொருளும் வழங்கி அவரை ராஜ மரியாதையுடன் ஊருக்கு அனுப்பி வைத்தார். பரஞ்ஜோதியார் மன்னர் அளித்ததை எல்லாம் மிகுந்த மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டார்.

பரஞ்ஜோதியார் மன்னனிடமிருந்து பெற்று கொண்ட பொன்னையும், பொருளையும் ஆலய திருப்பணிகளுக்கும், அடியார்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கும் செலவு செய்து வந்தார். நேரங்காலம் தவறாமல் இறைமார்க்கத்தில் வாழத் தொடங்கிய பரஞ்ஜோதியார் நற்குடியில் பிறந்த திருவெண்காட்டு நங்கை என்னும் பெயருடைய மங்கையை திருமணம் புரிந்துகொண்டார். அவரது துணைவியாரும் கணவரை போலவே எம்பெருமானின் மீது மிகுந்த அன்பு கொண்டு அடியார்களிடத்தும் நல்ல பக்தியும், அன்பும் உடையவராக இருந்தார்.

பரஞ்ஜோதியார் அவ்வம்மையாரோடு இல்லறத்தை முறைப்படி நடத்தத் தொடங்கினார். குறள்வழி வாழும் இவ்வில்லறத்தார் இன்பத்தின் முழுப்பயனையும் பெற்றுக் கருத்தொருமித்த காதலர்களாக வாழ்ந்து வந்தனர். பரஞ்ஜோதியாரும், அவரது மனைவியாரும் தொண்டர்களை அன்போடு வரவேற்று அமுதளித்து, விருந்தினர் முன்னுண்டு தாங்கள் பின் உண்ணும் முறை அறிந்து ஒழுகினர். சிவத்தொண்டர்கள் மனங்குளிர அவர்கள் விரும்பியவாறே எது கேட்டாலும் இல்லையென அளித்து அமுதூட்டி மகிழ்ந்தனர்.

பரஞ்ஜோதியாருக்கும், அவரது மனைவியாருக்கும் சிவபெருமானின் அருளால் ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. எம்பெருமானின் அருளால் அக்குழந்தைக்கு சீராளன் எனப் பெயர் சூட்டி மகிழ்ந்தனர். இவ்வாறு வாழ்ந்து வந்த சிறுத்தொண்டரின் பெருமையையும், பக்தியையும் உலகிற்கு உணர்த்த திருவுள்ளம் கொண்டார் சிவபெருமான். பள்ளிப்பருவம் அடைந்ததும் சீராளன் பள்ளிக்குச் சென்றிருந்தான். பெற்றோர்கள் விருந்தினரை எதிர்பார்த்து வாசலிலேயே நின்று கொண்டிருந்தனர்.

நீண்ட நேரம் ஆகியும் விருந்துண்ண ஒரு சிவனடியார் கூட வராததைக் கண்டு மிகவும் கவலை கொண்டார் சிறுத்தொண்டர். பின்பு இனியும் பொறுத்தல் ஆகாது என்று எண்ணி விருந்தினரைத் தேடி வெளியே சென்றார். தனது கணவர் அடியாரை தேடி சென்றதும் சிறுத்தொண்டரின் மனைவி கவலையோடு உள்ளே சென்று சிவநாமத்தை ஜெபிக்கத் தொடங்கினாள். அவ்வேளையில் தனது அடியார்கள் அடையும் வேதனையை கண்டு சிவபெருமான் பைரவ சந்நியாசியாக வேடம் கொண்டு பரஞ்ஜோதியாரின் இல்லத்திற்கு வருகை தந்தார். எம்பெருமான் பரஞ்ஜோதியார் வீட்டின் வெளியே நின்றபடியே சிவனடியார்களுக்கு அமுது அளிக்கும் சிறுத்தொண்டர் வீட்டில் இருக்கிறாரா? என்று கேட்டார்.

சிவனடியார் வடிவத்தில் வந்த எம்பெருமானின் குரலைக் கேட்டதும் வீட்டிற்குள் இருந்த சந்தன நங்கை என்னும் பணிப்பெண் வெளியே ஓடிவந்து அடியாரை வணங்கி சிறுத்தொண்டர் எங்கே சென்றுள்ளார் என்பதை கூறிவிட்டு மனையின் உள்ளே வந்து அமருமாறு பணிவுடன் கூறினாள். பணிப்பெண் உரைத்ததைக் கேட்டதும் அடியார் ரூபத்தில் இருந்த எம்பெருமான் ஆண் இல்லாமல் தனிமையில் இருக்கும் பெண்கள் இடத்தில் யாம் தங்குவதா? என்று கோபத்துடன் கூறினார்.

அடியார் கூறியதை இல்லத்தின் அகத்தில் இருந்து கேட்டுக் கொண்டிருந்த சிறுத்தொண்டரின் மனைவி ஓடிவந்து ஐயனே... சற்று பொறுமை காத்தருள வேண்டும் என்றும், வெளியே சென்று இருக்கும் என் கணவர் சிறிது நேரத்தில் வந்து விடுவார் என்றும், அதுவரைக்கும் தாங்கள் இல்லத்தில் வந்து அமர்ந்து ஓய்வு எடுக்கலாம் என்று கூறினார்.

ஆனால் அடியார் உருவத்தில் இருந்த எம்பெருமான் சிறுத்தொண்டரின் மனைவி உரைத்ததற்கு பிடி கொடுக்காமல் அங்கிருந்து புறப்பட தயாராகி கொண்டு இருந்தார். அதை கண்டதும் என்ன செய்வது என்று புரியாத சிறுத்தொண்டரின் மனைவி மீண்டும் அடியாரை வணங்கி, சுவாமி... தொண்டர்களுக்கு உணவு அளிக்காமல் நாங்கள் உண்பதில்லை என்றும், நாடெங்கும் இருந்து ஆயிரக்கணக்கான அடியார்கள் வந்து உணவு உண்ட மனையில் இன்று ஒரு அடியார் கூட உணவு உண்ண வரவில்லை.

அதை கருத்தில் கொண்டே என் கணவர் அடியார்களை தேடி சென்றுள்ளார் என்றும், அவர் சிறிது நேரத்தில் எப்படியும் வந்துவிடுவார். என் கணவர் வந்ததும் தங்களை கண்டால் மட்டில்லா மகிழ்ச்சி அடைவார். அதனால் கோபம் கொள்ளாமல் தாங்கள் எங்கள் இல்லத்தில் எழுந்தருளல் வேண்டும் என்றும் வேண்டினாள். ஆனால் அடியாரோ அம்மையார் எடுத்துரைத்ததை ஏற்றுக் கொள்ளவில்லை.

யாம் வடபுலத்திலிருந்து நெடுந்தூரம் பயணம் செய்து வந்தது தொண்டரைக் காண்பதற்காகத்தான். அந்த தொண்டர் இல்லாமல் யாம் இந்த மனைக்குள் தங்குவதாக இல்லை என்றும், யாம் எங்கும் செல்லோம்... எதற்கும் அருகில் உள்ள கோவிலுள்ள ஆத்தி மரத்தின் கீழே காத்திருக்கிறோம். உமது கணவர் வந்ததும் எமது அடையாளங்களைக் கூறி அனுப்பி வையுங்கள் என்று சொல்லிவிட்டு வேகமாகச் சென்றார் அடியார். அடியார் வேகமாக சென்று கொண்டு இருப்பதைக் கவனித்த சிவத்தொண்டரின் மனைவியோ வேதனையோடு உள்ளே சென்றாள்.

சிறுத்தொண்டரின் மனைவி கவலை தோய்ந்த முகத்துடன் வீட்டிற்குள் நுழைந்த கணவரைக் கண்டதும் தனது இல்லத்திற்கு அடியார் கோலத்தில் ஒருவர் வந்ததாகவும், அவர் தாங்கள் இல்லாததால் அருகில் இருக்கும் கோவிலில் இருப்பதாக கூறி சென்றுள்ளார் என்று தகவலை கூறினார். இந்த தகவலை அறிந்ததும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார் சிறுத்தொண்டர்.

பின்பு சிறுத்தொண்டரின் மனைவி அடியாரின் தோற்றத்தை பற்றிய விவரங்களை எடுத்துரைத்து அடியாரை இல்லத்திற்கு அழைத்து வருமாறு கூறினார். சிறுத்தொண்டர் மனதில் மிகுந்த மகிழ்ச்சியுடன் அருகில் இருந்த கோவிலுக்கு சிறுபொழுதும் தாமதிக்காமல் விரைந்து சென்றார். தன் மனைவி உரைத்ததைப் போன்றே ஆத்தி மரத்தின் அடியில் துறவியின் வடிவத்தில் இருந்து வந்த ஒப்பற்ற அடியாரை கண்டு அவரை போற்றி வணங்கினார்.

யாவற்றையும் அறிந்த அடியார் வடிவத்தில் இருந்த எம்பெருமான் சிறுத்தொண்டரை ஏற இறங்க பார்த்து கொண்டு நீதான் பெருமை மிகுந்த சிறுத்தொண்டரோ... என்று வினவினார். சிறுத்தொண்டர் முக மலர்ச்சியுடன் அடியாரை அணுகி இவ்வடியேனுக்கு இந்த தகுதி இருப்பதாக புலப்படவில்லை... இருப்பினும் அனைத்து அடியார்களும் என்னை சிறுத்தொண்டர் என்று அழைப்பார்கள் என்று கூறினார்.

சுவாமி தாங்கள் என்னை காண வெகுதொலைவில் இருந்து வந்துள்ளீர்கள். ஆகையால் பயண களைப்பும், பசி களைப்பும் உண்டாகி இருக்கும். ஆகவே இனியும் தாமதிக்காமல் தாங்கள் இந்த ஏழையின் இல்லத்தில் வந்தருளி உணவு உண்ண வேண்டும் என்று மிகுந்த பணிவுடன் வேண்டி நின்றார். சிறுத்தொண்டரின் கூற்றுக்களை ஏற்ற அடியாரும் எமக்குத் தேவையான உணவை உம்மால் அளிக்க இயலாத காரியமாயிற்றே என்று கூறினார்.

அடியாரின் கூற்றுக்களில் இருந்து வந்த பொருளை உணராத சிறுத்தொண்டர் ஐயனே...! அவ்விதம் தங்கள் உரைப்பது ஆகாது என்று திருவாய் மலர்ந்து கூறினார். உங்களின் விருப்பப்படியே உங்களுக்கு தேவையான உணவை தயார் செய்து யான் உங்களுக்கு அளிக்கின்றேன் என்று கூறினார்.

ஓ.... அப்படியானால் எனக்குத் தேவையான உணவை உன்னால் செய்து தர முடியும் எனில் எனக்கு மிக்க மகிழ்ச்சியே என்று கூறினார். யாம் ஆறு மாதங்களுக்கு ஒரு முறைதான் உணவு உண்போம் என்றும், அதுவும் பசுவை வதைத்துதான் உண்பது எனது வழக்கம் என்றும் கூறினார். உமது விருப்பப்படியே யாம் உணவுண்ணும் காலமும் வந்துவிட்டது. ஆனால் அத்தகைய பசுவின் மாமிசத்தை சமைத்து எனக்கு உணவு படைக்க முடியுமா? என்றுதான் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம் என்று அடியார் உருவத்தில் இருந்த எம்பெருமான் கூறினார்.

பசுவை உணவாக கேட்ட அடியாரிடம் ஐயனே...! கவலை கொள்ள வேண்டாம். தங்களுக்குத் தேவையான உணவை படைக்க என்னிடம் மூன்று வகையான பசுக்கள் இருக்கின்றன. அவற்றை வைத்து உங்களுக்கு தேவையான உணவை எம்மால் பக்குவமாக சமைத்து தர இயலும் என்று கூறினார் சிறுத்தொண்டர். திருவிளையாடல் புரியும் மன்னன் அல்லவா?... எம்பெருமான். எந்தவொரு விஷயத்தையும் எளிமையான முறையில் உரைக்காமல் சுற்றி வளைத்து உரைப்பதில் கைதேர்ந்தவர் ஆயிற்றே. நீர் எண்ணுவது போல பசு என்னும் விலங்கை பற்றி யாம் குறிப்பிடவில்லை. யாம் உரைத்தது யாதெனில் பசு என்பது ஐந்து வயது உள்ள இளம் ஆண் பிள்ளையைதான்.

அதுவும் எமக்கு உணவு செய்ய இருக்கின்ற பிள்ளையின் அங்கங்களில் எவ்விதமான குறைபாடுகளும் இருக்கக்கூடாது. அந்த விதத்தில் இருக்கக்கூடிய ஆண் பிள்ளையை யாம் உரைப்பது போன்ற பக்குவத்தில் கறி சமைத்து எமக்கு அளிக்க வேண்டும். அதுவும் அந்த புதல்வனானவன் ஒரு குடிக்கு ஒரு மகனாக பிறந்துள்ள பாலகனாகத்தான் இருக்க வேண்டும். அதுவும் அந்த புதல்வனின் உடலை தாயார் பிடிக்க... தந்தையார் அரிந்து எமக்கு கறி சமைத்து படைத்தல் வேண்டும். இந்நிகழ்வு நடைபெறும் பொழுது அம்மனையில் இருப்போர் எவரும் துன்புறுவோ, வருத்தப்படவோ கூடாது என்றும், மனையில் இருப்போர் அனைவரும் மகிழ்ச்சியுடன் இருந்து எமக்கு உணவு சமைக்க வேண்டும்.

இவ்வாறு இருக்கும் பட்சத்தில் உமது இல்லத்தில் வந்து உணவு உண்ண சம்மதிக்கிறோம் என்று அடியார் உருவத்தில் இருந்த எம்பெருமான் தமது திருவிளையாடலை நிகழ்த்தினார். ஐயனின் விருப்பம் இதுவே ஆயின் தங்களுக்குத் தேவையான உணவை நான் தயார் செய்து தங்களுக்கு அளிக்கின்றோம் என்று கூறினார் சிறுத்தொண்டர். மிக்க மகிழ்ச்சி சிறுத்தொண்டரே... எமக்கு தேவையான உணவை சமைத்து முடித்து விட்டு உணவு உண்ண வேண்டிய நேரத்தில் எம்மை அழைத்துச் செல்வாயாக. அதுவரை யாம் இங்கேயே காத்திருக்கின்றோம். விரைந்து சமைப்பாயாக யாம் மிகவும் பசியில் இருக்கின்றோம் என்று கூறினார் அடியார் வடிவத்தில் இருந்த சிவபெருமான்.

சிறுத்தொண்டர் அடியாரிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டு விரைவாக தனது இல்லத்தை வந்தடைந்தார். பின்பு தமது துணைவியிடம் நிகழ்ந்தவற்றை ஒன்றுவிடாமல் அவர்கள் புரிந்து கொள்ளும் விதமாக தெளிவாக எடுத்துக் கூறினார். அவர் மொழிந்ததைக் கேட்டு அடியார் அருளியவாறு ஒரு குடிக்கு ஒரு மகனை இந்நிலையில் எங்கு சென்று காணோம் என்று கூறிக் கொண்டிருந்தார். அவ்வேளையில் சிறிதும் யோசிக்காமல் சிறுத்தொண்டர் தமது துணைவியிடம் நான் பெற்ற அருந்தவப் புதல்வன் இருக்கும் பட்சத்தில் நாம் ஏன் பிறரை எதிர்பார்க்க வேண்டும் என்று கூறினார்.

சிறுத்தொண்டரின் இல்லத்தினை அடியார் வடிவத்தில் இருக்கும் எம்பெருமான் அடைந்ததும் அவரது திருவடிகளில் தனது கரங்களில் இருந்த மலரை தூவி வணங்கி இல்லத்திற்குள் அழைத்தனர். அடியார் அமர்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆசனத்தில் அவரை அமரச் செய்தனர். பின்பு அம்மையார் அவரது பாதங்களில் நீர்வார்க்க... அடிகளார் பாதத்தை விளக்கினார். திருவடிகளுக்கு சந்தனம் தடவி, மலர்களால் பூஜித்து, தூப தீபம் காட்டி பாதபூஜை செய்தனர். பாதபூஜை செய்த நன்னீரைச் சென்னி மீதும், மனைவியார் மீதும், வீடு முழுவதும் தெளித்தார் சிறுத்தொண்டர்.

தம்பதியர்கள் இருவரும் அடியாருக்கு அமுது படைக்க அவருடைய கட்டளைக்காக எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருந்தனர். அதற்கு ஏற்ப அடிகளாரும் திருவாய் மலர்ந்து எல்லாவற்றையும் எமக்கு ஒருங்கே படைத்தாக வேண்டும் என்று கூறினார். அடியாரின் விருப்பம் இதுவே ஆயின் தங்கள் சித்தப்படியே உணவு படைக்கின்றோம் என்று கூறினார் சிறுத்தொண்டர். அவ்வேளையில் அடியார் உருவத்தில் இருந்த எம்பெருமான் பாலகனின் எல்லா உறுப்புகளையும் சமைத்தீர்களா? என்று வினவினார். அதற்கு திருவெண்காட்டு நங்கையார் தலை இறைச்சியை மட்டும் உணவுக்கு உதவாது என்று அதை சமைக்கவில்லை என்று கூறினாள்.

அதனை கேட்ட பரம்பொருளான எம்பெருமான் அதனையே யாம் உண்போம் என்று கூறினார். இதனை எதிர்பாராத தம்பதியர் இருவரும் என்ன செய்வது என்று புரியாமல் தலை இறைச்சியை சமைப்பதற்காக உள்ளே சென்றபோது சந்தன நங்கையார் தலை இறைச்சியை அடியார் உரைத்த விதத்தில் பக்குவமாக சமைத்து வைத்துள்ளேன் என்றுரைத்து சமையலறையில் இருந்து தலை இறைச்சியைக் கொண்டு வந்தாள். தக்கதொரு சமயத்தில் காத்த சந்தன நங்கையாரின் திறமையையும், ஆற்றலையும் எண்ணி தம்பதியர்கள் இருவரும் அகத்தின் உள்ளே மகிழ்ந்தனர். பின்பு அடியார் உணவு உண்பதற்காக வெட்டப்பட்ட இலையில் தலை இறைச்சியினை பரிமாறினாள் திருவெண்காட்டு நங்கையார்.

சிறுத்தொண்டர் அடியாரை அணுகி ஐயனே...!! அமுது செய்து அருளலாமே என்று பணிவுடன் உரைத்து நின்று கொண்டிருந்தார். இறைவன் மேலும் தனது திருவிளையாடலை துவங்கினார். அதாவது யான் மட்டும் எவ்விதம் தனியாக உணவு உண்பது? நீர் சென்று இன்னொரு அடியாரையும் அழைத்து வருவாயாக என்று கூறினார். அடியாரின் இக்கூற்றினை கேட்டதும் சிறுத்தொண்டர் மிகவும் மனம் வருந்தினார்.

எம்பெருமான் வேறொரு அடியாரை கேட்டதால் அவரின் கூற்றுக்கு மறுப்பு கூற இயலாத நிலையில் மனதில் இருந்த வேதனைகளையும் வெளிப்படுத்த முடியாமல் மனதினுள்ளே வைத்துக்கொண்டு இன்முகத்தோடு மற்றொரு அடியாரை அழைத்துவர வெளியே சென்றார் சிறுத்தொண்டர். எம்பெருமானின் திருவிளையாடலால் ஊரில் எந்த அடியாரும் இல்லாத நிலை இருந்தது. இதை அறியாத சிறுத்தொண்டரும் ஊர் முழுவதும் சென்று தேடியும் எந்த அடியாரையும் காணாமல் மிகுந்த மனச்சோர்வுடன் தனது இல்லத்தை வந்தடைந்தார். பின்பு அடியார் முன்பு சென்று மிகுந்த ஏமாற்றத்துடன் சென்று ஐயனே...! எம்மைப் பொறுத்தருள்க. நான் பல இடங்களில் தேடியும் சிவனடியார்களை காண முடியவில்லை என்று கூறினார். சிறுத்தொண்டரின் கூற்றுகளை கேட்ட அடியார் ரூபத்தில் இருந்த எம்பெருமான் கவலை கொள்ள வேண்டாம் சிறுத்தொண்டரே. நீரும் சிவனடியார் தானே? ஏன் நீ எம்முடன் அமர்ந்து உணவு உண்ணக்கூடாது என்று கூறினார்.

இதை சற்றும் எதிர்பாராத சிறுத்தொண்டரும், அவரது மனைவியாரும் அதிர்ச்சியில் உறைந்து நின்றனர். தமது புதல்வனை தனது கரங்களால் அரிந்து, சமைத்து அதை நாமே உண்பதா? என்று எண்ணி வருத்தம் கொண்டாலும், அதை வெளிக்காட்டாமல் மனதினுள்ளே வைத்து கொண்டிருந்தனர். சில காரணம் சொல்லி இதை தவிர்க்க முயன்றனர். இருப்பினும் இவர்கள் கூறிய காரணங்களை ஏற்காத அடியார் எம்முடன் அமர்ந்து நீர் உணவு உண்பதாக இருந்தால் யாம் உணவை உண்கின்றோம்... இல்லையேல் யாம் புறப்படுகிறோம்... என்று கூறி அவ்விடத்தில் இருந்து எழத்துவங்கினார்.

அடியார் எழுந்து கொண்டு இருப்பதை கண்டதும் சிறுத்தொண்டர் ஐயனே...! என்னை மன்னித்தருள வேண்டும் என்றும், நான் தெரியாமல் செய்த தவறினை பொறுத்தருள வேண்டும் என்றும் கூறி அடியாருடன் எமக்கும் உணவு உண்ண ஒரு இலையை வைக்குமாறு தமது மனைவியிடம் கூறினார். வேறு எதுவும் செய்ய இயலாத நிலையில் மனைவியும் அடியாரின் அருகிலேயே ஒரு இலையை வைத்தார். அம்மையாரை நோக்கிய அடியார் எமக்கு படைத்தாற் போலவே இறைச்சியையும், அன்னத்தையும் இவ்விலைக்கும் படைப்பாயாக... என்று மொழிந்தார். திருவெண்காட்டம்மையாரும் அடியார் உரைத்தபடியே உணவினை பரிமாறினாள்.

வேறு வழியில்லாததால் சிறுத்தொண்டரும் அடியாரின் அருகில் அமர்ந்தார். எப்போதும் போலவே தமது திருவிளையாடலை மீண்டும் துவங்கினார் எம்பெருமான். அதாவது அடியார் உணவு உண்ணாமல் எதையோ சிந்தித்த வண்ணம் இருந்து கொண்டிருந்தார். இதை கவனித்த சிறுத்தொண்டர் ஒருவேளை நாம் உணவு உண்ட பின்புதான் அடியார் உணவு உண்பாரோ? என்று எண்ணி உணவில் கையை வைக்க சென்றார். இதை கண்டதும் அடியாருக்கு மிகுந்த கோபம் உருவாகியது. உணவில் கை வைப்பதற்கு முன்பாகவே அவரது கரங்களை தடுத்தார்.

உணவில் கையை வைத்த நாயனாரின் கரங்களை தடுத்து உணவு உண்பதற்கு உமக்கென்ன அவ்வளவு அவசரமா? யாம் ஆறு மாதம் உணவு உட்கொள்ளாமல் பட்டினியாக இருந்து கொண்டிருக்கின்றோம். ஆனால் நீயோ தினந்தோறும் உணவு உண்டு கொண்டிருக்கின்றாய். அவ்வாறிருக்கையில் உமக்குப் பசி அதிகமோ? நன்று... நன்று... இனி யாம் உன்னுடன் உணவை உண்பதாக இல்லை. உம்முடன் உணவு உட்கொண்டால் நீ எமக்கு இல்லாமல் அனைத்தையும் உட்கொள்வாய் போல் உள்ளது. இது சரியாகாது என்றார். எம்முடன் உணவுண்ண உமக்கு புதல்வன் இருந்தால் அவனை அழைப்பாயாக...! என்று கூறினார். அடியாரின் இக்கூற்றை கேட்டதும் தம்பதியர்கள் இருவரும் மிகுந்த மனம் வேதனையையும், துன்பத்தையும் கண்டனர்.

என்ன உரைப்பது என்று புரியாமல் அய்யனே...!! என் புதல்வன் இவ்வேளையில் உதவான் என்று கூறினர். சிறுத்தொண்டரே இவ்விதம் உரைப்பது சரியானதல்ல. உமது புதல்வன் வந்தால் மட்டுமே யாம் உணவு உண்போம். அவனை தேடி அழைத்து வருவாயாக...! என்று திருவாய் மலர்ந்தருளினார். அடியவரின் கூற்றுக்கு மறுகூற்று கூற இயலாமல் சிறுத்தொண்டர் தனது மனைவியுடன் தனது மகனை அழைக்க வெளியே வந்தார். வீட்டின் வெளியே வந்த இருவரும் என்ன செய்வது என்று புரியாமல் திகைத்து நின்று கொண்டிருந்தனர். அடியவருக்கு உணவு அளிக்க தங்களுக்கு ஏற்பட்டுள்ள இடையூறுகளை எண்ணி மனம் கலங்கிக் கொண்டு நின்று கொண்டிருந்தனர்.

இருப்பினும் சிறுத்தொண்டர் சிவபெருமானின் மீது கொண்ட அன்பையும், பக்தியையும் கைவிடாமல் எம்பெருமானை மனதில் நிறுத்திக்கொண்டு நமசிவாய மந்திரத்தை மனதில் உச்சரித்த வண்ணமே சீராளா வருக... என்று அழைத்துக் கொண்டிருந்தார். அம்மையாரும் தனது மகனை அழைத்துக் கொண்டு இருந்தார். அதாவது, மகனே சிவனடியாரிடம் அமர்ந்து நீ உணவு உண்ண வேண்டும் என்று அடியார் விரும்புகின்றார். ஆகவே விரைந்து இல்லத்திற்கு வருவாயாக...! என்று அனைவரும் கேட்கும் வண்ணம் உரக்கக் கூறி கொண்டிருந்தார்.

அந்த நேரத்தில் யாவரும் எதிர்பாராத ஒரு அதிசயம் அங்கு நிகழத் துவங்கியது. அதாவது, எல்லாம் வல்ல இறைவனின் திருவருளால் சீராளன் குருகுலத்தில் இருந்து தனது இல்லத்தை நோக்கி விரைந்து வந்து கொண்டிருந்தார். அன்னையின் கூற்றுக்களை கேட்டதும் மிகுந்த வேகத்துடன் ஓடிவந்து கொண்டிருந்தான். அவ்வேளையில் பெற்றோர்களான சிறுத்தொண்டருக்கும், அவரது துணைவியாருக்கும் நிகழ்வது யாதென்று புரியாத ஒரு நிகழ்வாக இருந்து கொண்டிருந்தது. சிறிது நேரத்திற்குள் புதல்வனும் அந்த இடத்தில் வந்து நிற்க பெற்றோர்கள் இருவரும் திகைத்து நின்று கொண்டிருந்தனர்.

புதல்வனை கண்டதும் அம்மையார் வாரி அணைத்துக் கொண்டு தழுவி மகிழ்ச்சி அடைந்து கொண்டிருந்தார். சிறுத்தொண்டரும் தனது மைந்தனை தன் மார்போடு எடுத்து அணைத்துக் கொண்டிருந்தார். சிறிது நேரத்திற்குள் சிறுத்தொண்டருக்கும், அவரது துணைவியாருக்கும் ஏற்பட்ட ஆச்சரியம் என்பது எல்லை இல்லாத அளவில் இருந்து கொண்டிருந்தது. அதில் இருந்து விடுபடவே சிறிது நேரம் எடுக்கத் துவங்கியது.

பின்பு தனது புதல்வனை அழைத்துக்கொண்டு வீட்டின் உள்ளே சென்றனர். அடியார் உருவத்தில் இருந்த எம்பெருமான் மாயமாக மறைந்து சென்றார். பாத்திரத்தையும், இலையில் பரிமாறப்பட்ட உணவுகளையும் கண்டனர். அவ்விடத்தில் எவ்விதமான உணவுகளும் இல்லை. வந்தவர் யார்? என்ன நிகழ்ந்து கொண்டிருக்கின்றது? என்பதை உணர்வதற்குள் இறைவனின் திருவருள் அவர்களுக்கு கிடைக்க துவங்கியது. அவர்களின் இல்லத்தில் இந்த பிரபஞ்ச ஒளியை விட அதிக அளவு ஒளிகொண்ட பேரொளியானது உருவாகத் துவங்கியது.

தனது அங்கத்தின் சரிபாதியை தனது உமையவளுடன் பகிர்ந்து கொண்ட மாதொரு பங்கன் மலைமகளுடன் விடையின் மேல் காட்சியளிக்கத் துவங்கினார். தேவர்கள், பூதகணங்கள், முனிவர்கள் என அனைவரும் புடை சூழ்ந்து தேவகணம் எழுப்பிக் கொண்டிருக்கின்றனர். சிறுத்தொண்டரும், திருவெண்காட்டு நங்கையும் அவர்களது புதல்வனான சீராளனும் மற்றும் சமையலில் உதவியாக இருந்து வந்த சந்தன நங்கையாரும் தலையின் மேல் கைகளை உயர்த்திய வண்ணம் நமசிவாய என்னும் மந்திரத்தை ஓதி நிலத்தில் வீழ்ந்து வணங்கி ஆனந்தக் கண்ணீர் வடித்து நின்று கொண்டிருந்தனர். தேவர்கள் யாவரும் மலர்மாரி பொழிந்து கொண்டிருந்தனர்.

எவருக்குமே கிட்டாத பெரும் பேற்றை அளித்தார் எம்பெருமான். திருசடைநாதரின் பொற்கழல் பாதத்தின் கீழ் சிறுத்தொண்டரும், உமையம்மையார் திருவடியின் கீழ் திருவெண்காட்டு நங்கையும், சந்தன நங்கையாரும், வெற்றிவேல் முருகனின் செஞ்சேவடியின் கீழ் சீராளாத் தேவனும் அமர்ந்து இன்புற்றிருக்கும் சிவலோகப் பிராப்தியை அந்நால்வருக்கும் அளித்து அருள் செய்தார் அம்பலத்திலே ஆடுகின்ற ஆனந்தக் கூத்தன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக