Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 28 மே, 2020

சிவபுராணம் - பாகம் 2 பகுதி 030

நரசிங்க முனையரைய நாயனார் !!

மக்கள் வாழ்க்கைக்கு தேவையான அடிப்படை வளங்கள் மற்றும் இயற்கை எழில் நிறைந்த கானகம்... எங்கும் தேடி கிடைக்காத பல வளங்கள் யாவும் நிரம்ப பெற்ற நாடு... வளம் நிறைந்த சிறந்த நாடாக கருத்தப்பட்டதுதான் திருமுனைப்பாடி நாடு. இந்நாட்டினை பல தலைமுறைகளாக ஆட்சிப்புரிந்து வந்த முனையராயர் என்னும் குறுநில மன்னர் மரபிலே வந்தவர் நரசிங்க முனையரைய நாயனார்.

அவர் தம் நாட்டிற்கு எதிராகவும், அறநெறி தவறி செயல்பட்ட பல எதிரி மன்னர்களையும், பகைவர்களையும் போரில் வென்று தனது அரசாட்சியை விரிவுப்படுத்தினார். மக்கள் தொண்டே மகேசன் சேவை என்பது போல குடிமக்களின் அனைத்து தேவைகளையும் அறிந்து அவர்களுக்கு வேண்டியவற்றை செய்து நிறைவேற்றி வைத்தார். மக்கள் தேவைகளை அறிந்து அதை நிறைவேற்றுவது மட்டுமல்லாமல் ஆடல் மன்னரான எம்பெருமானின் மீது மிகுந்த அன்பும், பக்தியும் கொண்டு அனுதினமும் அவரை மறவாத சிந்தனையோடு வழிபட்டு வந்தார்.

எம்பெருமானின் அருளைப் பெறுவது என்பது அவரை வழிபடும் அடியார்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவதினால் கிடைக்கும் என்பதனை உணர்ந்த நரசிங்க முனையரையனார் சிவனடியார்களின் தேவைகளை அறிந்து அவர்களுக்கு வேண்டியவற்றை அளித்து வந்தார். சிவனடியார்களின் திருவடியை அடைதலே அரும்பேறு என்பதனை அறிந்து அடியார்களிடம் மிகவும் பணிந்தார். அதுமட்டுமல்லாமல் எம்பெருமான் வீற்றிருக்கும் தலங்களை சீரமைத்தலையும், சிவச் செல்வங்களைப் பலவாக பெருக்கிக் அச்செல்வத்தை காத்தலையும் தம் உயிரினும் சிறப்பாகச் செய்தனர்.

நரசிங்க முனையரையனார் திருவாதிரை தோறும் அடியவர்களை வரவேற்று அன்னம் பாலிப்பு செய்து பொற்காசு கொடுத்து தொண்டு செய்தார். நாட்டில் வளம் பெருகியது. மக்கள் குறையின்றி வாழ்ந்தனர். ஒரு திருவாதிரை திருநாளன்று அனைத்து சிவனடியார்களையும் வரவேற்று அவர்களுக்கு வேண்டிய பொன், பொருட்களை வழங்குவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அப்பொழுது மன்னரிடம் இருந்து பொருள் பெற்றுப் போக வந்த ஒருவர் நோயால் உடல் சீர்கெட்டு நோய் பெற்ற நிலையில் காணப்பட்டார்.

நோயால் பாதிக்கப்பட்ட அடியாரை கண்டதும் பலரும் அருவருப்பாக எண்ணியது மட்டுமல்லாமல் அவரை அனுகாமல் விலகிச் சென்றனர். மன்னர் ஒவ்வொரு அடியாருக்கும் வேண்டிய பொருட்களை அளித்து வந்த சமயத்தில் எவரும் தன்னிடம் நெருங்காமல் விலகி சென்று கொண்டிருப்பதை உணர்ந்த அடியார் தனித்து நின்று கொண்டிருந்தார். அவ்வேளையில் மன்னர் அடியாரது ரோகம் பிடித்த மேனியில் தூய திருவெண்ணீறு துலங்கக் கண்டு வியந்தார். உடனே அந்த அடியாரிடம் விரைந்து சென்று அவரைக் கரங்குவித்து வணங்கி நின்றதோடு மட்டுமல்லாமல் அவரை ஆரத்தழுவி அகமகிழ்ச்சியோடு வரவேற்றார்.

மன்னர் செய்த செய்கையால் திகைத்து நின்று கொண்டிருந்த அடியார் என்ன செய்வது? என்று புரியாமல் திகைப்பில் நின்றார். நரசிங்க முனையரைய நாயனார் அடியவர்கள் நிரம்பிய கூட்டத்தை நோக்கி ரோகத்தால் பாதிக்கப்பட்ட இவரை நீங்கள் இகழக்கூடாது. திருநீறு அணிந்தால் யாராக இருந்தாலும் அவரை நாம் போற்றி பூசிக்க வேண்டும் என்று கூறினார். அதுமட்டுமல்லாமல் அவருக்கு மேலும் அதிர்ச்சி தரும் மற்றொரு செயலையும் மன்னர் புரிந்தார். அதாவது மற்ற அடியார்களுக்கு கொடுத்த பொன்னைக் காட்டிலும் அவருக்கு இரட்டிப்புப் பொன் கொடுத்து மகிழ்ச்சியோடு அவரை அனுப்பி வைத்தார்.

திருவெண்ணீற்றுக்குப் பேரன்புடையவராய்த் திகழ்ந்த நரசிங்க முனையரைய நாயனார் சிவபெருமான் சேவடிக்கமலங்களை அடையும் அமர வாழ்வைப் பெற்றார். அது மட்டுமின்றி எம்பெருமான் அருளால் மற்றொரு பேரும் அவருக்கு கிடைக்கப் பெற்றது. நரசிங்க முனையரைய நாயனார் ஒரு நாள் வீதிவலம் வரும் பொழுது வீதியில் தேர் உருட்டி விளையாடும் நம்பியாரூரரைக் கண்டார். அவர் தம் அழகில் பெரிதும் கவரப்பட்ட அரசர் சடையனாரிடம் சென்று அவரிடம் தாம் கொண்ட நட்புரிமையினால் நம்பியை தாம் வளர்ப்பதற்கு அனுமதி தருமாறு வேண்டினார்.

சடையனாரும் அவர் தனது நண்பரான வேந்தரின் வேண்டுதலுக்கு இணங்கி நம்பியை அளித்தார். நம்பியைச் பெருஞ்செல்வம் எனக்கொண்ட நரசிங்க முனையரைய நாயனார் அவரை அரச திருவெலாம் பொருந்த திருமணப் பருவம் அடையும் வரை வளர்த்தார். இவ்வாறு அன்பர் பணிசெய்து நம்பியை வளர்க்கும் பேறு பெற்றமையாலே இறைவனது திருவடி நிழலில் சேர்ந்து மீளாத நிலைப்பெற்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக