Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 14 மே, 2020

சிவபுராணம் - பாகம்2 பகுதி 020

குங்குலியக் கலய நாயனார்!!

காவிரி பாயும் சோழ வளநாட்டில் திருக்கடவூர் என்ற ஒரு தலம் உள்ளது. இத்தலத்தில் வாழ்ந்து வந்த பல வேதியர்களுள் கலயனார் என்பவரும் வாழ்ந்து வந்தார். இவர் கங்கை அணிந்த மங்கையர் பாகன் திருவடியை இடையுறாது வணங்கி வந்தார். மேன்மையான எண்ணமும், உள்ளமும் கொண்டு பக்தியுடன் எம்பெருமானை வணங்கி வந்தார் கலயனார். திருக்கோவிலுக்கு குங்குலியத் தூபமிடும் திருத்தொண்டினை பக்தி சிரத்தையோடு செய்து வந்தார். எம்பெருமானுக்கு தூய மணம் கமழும் குங்கிலியம் அளிக்கும் தொண்டினைச் செய்து வந்ததால் இவர் குங்குலியக் கலயர் என்று பெயர் பெற்றார்.

கலயனார் குடும்பத்தில் வறுமை கோரத்தாண்டவம் புரியத் தொடங்கியது. வறுமையையும் ஒரு பெருமையாகக் கொண்டு சற்றும் மனம் தளராமல் தமது திருத்தொண்டினை மட்டும் இடைவிடாது சிறப்பாகவே செய்து வந்தார் கலயனார். வறுமை நாளுக்கு நாள் வளரத் தொடங்கியது. நிலங்களை விற்றார். கன்று, காளைகளை விற்றார். அப்படியிருந்தும் கலயனாருக்கு ஏற்பட்டுள்ள வறுமை மட்டும் குறைந்தபாடில்லை. கலயனார் தமது வாழ்க்கை வசதிகளைச் சிறுகச் சிறுகக் குறைத்துக் கொண்டாரே தவிர திருக்கோவிலுக்குக் குங்குலியம் வழங்கும் திருத்தொண்டினை மட்டும் குறைக்கவே இல்லை.

வறுமையின் நிலை கண்டு குடும்பத் தலைவி சொல்லாத் துயர் அடைந்தாள். பசியால் ஒட்டிய வயிறுகளுடன் கண்ணீர் விட்டுக் கதறும் குழந்தைகளைப் பார்த்துப் பார்த்து அம்மையார் நெஞ்சம் தணலிடைப்பட்ட புழுவைப்போல் துடித்தது. இறுதியில் அம்மையார் ஓர் நல்ல முடிவிற்கு வந்தாள். திருமாங்கல்யத்தைக் கழற்றினாள். கணவரிடம் கொடுத்தாள். அதனை விற்றுப் பணம் பெற்று நெல் வாங்கி வருமாறு கேட்டுக் கொண்டாள். மனைவியின் செயலைக் கண்டு மனம் துடிதுடித்துப் போனார் கலயனார். இருந்தும் வேறு வழியின்றி திருமாங்கல்யத்தைப் பெற்றுக் கொண்டு நெல் வாங்கி வரப் புறப்பட்டார்.

தந்தை எப்படியாவது நெல் வாங்கி வருவார். தாயார் குத்திப் பதமாக்கிச் சோறு சமைத்துப் போடுவார் என்று தங்களுக்குள் எண்ணி எண்ணிப் பூரித்துப் போன சின்னஞ்சிறு குழந்தைகள் அன்னையை அணைத்து மகிழ்ந்தது. அன்னைக்கு முத்தமாரி பொழிந்தன. கலயனார் திருமாங்கல்யத்தை விற்பதற்காகத் தெருவோடு போய்க் கொண்டிருந்தார். அவரது சிந்தனை எல்லாம் நெல் வாங்கும் எண்ணத்தில் இல்லை. மறுநாள் கோவிலுக்குக் குங்குலியம் வாங்க வேண்டும் என்பதிலேதான் இருந்தது.

நாயனாரின் எண்ணத்திற்கு ஏற்ப எதிரில் வந்தவரும் இவரது விருப்பத்தினை நிறைவேற்றும் பொருட்டே தென்பட்டார். அதாவது, இவரின் எதிரில் குங்குலியப் பொதியுடன் வணிகன் ஒருவன் நடந்து வந்து கொண்டிருந்தான். அந்த வணிகரை கண்டதும் அவர் அடைந்த மகிழ்ச்சி என்பது எல்லை இல்லாத வகையில் இருந்து வந்தது. உணவில்லாமல் பசியுடன் வாடிப்போன குழந்தைகளை கண்டதும் தனது திருமாங்கல்யத்தை கண்களில் நீர் வழிய கழற்றிக் கொடுத்து உண்பதற்கு தகுந்த பொருட்களை வாங்கி வருமாறு வாழ்க்கைத் துணைவியின் சோகத் தோற்றத்தையும் மறந்து போனார்.

குங்குலியப் பொதியுடன் வந்த வணிகரை கண்டதும் தமது குடும்ப சூழல் மற்றும் நிலைகளையும் மறந்தார். அவரின் எண்ணம் போலவே எம்பெருமானின் செயல்பாடுகளும் இருப்பது போலவே விரும்பினார். இறைவனின் கருணை என்பது அளவிட முடியாது அல்லவா? தமது கரங்களில் பொன்னையும் கொடுத்து எதிரில் குங்குலியத்தையும் அனுப்பி வைத்திருக்கிறார். இந்த அரும்பெரும் பாக்கியம் யாருக்கு கிடைக்கும் என்று எண்ணி மனம் மகிழ்ந்தார். இந்த ஏழை அடியனுக்காக எம்பெருமான் இறங்கி கருணை அளித்துள்ளார் என்பதை அறியும்போது மனம் அடையும் மகிழ்ச்சி என்பது எல்லை இல்லாத பேரானந்தமாக நினைத்து அதை பலவாறாக எண்ணி மகிழ்ந்து கொண்டு இருந்தார்.

கலயனார் மகிழ்ச்சியுடன் வணிகனை அனுகினார். தன்னிடம் இருக்கும் மாங்கல்யத்தை எடுத்துக்கொண்டு குங்கிலியப் பொதியைக் கொடுக்கிறேன், உனக்கு இறைவன் அருள் புரியட்டும் என்றார். கலயனார் மாங்கல்யத்தை வணிகனிடம் கொடுத்தார். மகிழ்ச்சியோடு வணிகனும் குங்குலியப் பொதியை அவரிடம் கொடுத்துவிட்டு வந்த வழியே சென்றான். கலயனார் குங்குலியப் பொதியோடு கோவிலுக்கு சென்று கொண்டு இருந்தார். குங்குலி மூட்டையைக் கோவிலில் சேர்ப்பித்துச் மனம் மகிழ்ந்தார். இறைவனின் திருநாமத்தைப் போற்றியவாறு கோவில் மடத்திலே அங்கேயே தங்கிவிட்டார்.

இருப்பிடத்திலே மங்கை நல்லாள் கணவர் வருவார்... வருவார்... என்று வழிமேல் விழிவைத்துப் பார்த்த வண்ணமாக இருந்தாள். புத்திரர்கள் கால்கடுக்க நின்று கொண்டு தந்தையின் வரவை எதிர்பார்த்தனர். எதிர்பார்த்து கொண்டிருந்த குழந்தைகளும் ஏமாந்து போயினர். அந்தணரின் மனைவிக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. இருட்டியும் கணவர் வரவில்லை என்பதை உணர்ந்து ஏமாற்றமும், ஏக்கமும் கொண்டாள். பசியால் அழும் பச்சிளம் பிள்ளைகளை மடிமீது போட்டுக்கொண்டு கண் அயர்ந்துவிட்டாள். குழந்தைகளும் பசியின் வேதனையைத் தாங்க முடியாமல் அழுவதற்குக் கூடச் சக்தியற்ற நிலையில் கண் அயர்ந்துவிட்டனர்.

கங்கையைச் சடையிலே தாங்கிய திருசடை அண்ணல் கலயனார் மனையின் மீது திருக்கண் மலர்ந்தார். எம்பெருமானின் திருவருளால் கலயனார் இருப்பிடத்தில் நெல்மணியும், பொன்னும், புதிய உடைகளும் எண்ணிலடங்கா வகையில் குவியத் தொடங்கின. தமது இல்லத்தில் பலவிதமான பொருட்கள் நிறைந்து கொண்டு இருப்பதை உணரமுடியாமல் கலயனாரரின் துணைவியார் உணவில்லாமல் இருந்ததால் ஏற்பட்ட சோர்வால் ஆழ்ந்த நித்திரையில் இருந்தார்.

கலயனாரரின் துணைவியாரின் நித்திரையில் தோன்றிய எம்பெருமான் கண்விழித்து உணவு உண்டு மகிழ்ச்சியாக உறங்குவாயாக என்று கூறி மறைந்தார். எம்பெருமான் கனவில் தோன்றி மறைந்ததும் கலயனார் மனைவி திடுக்கிட்டுத் துயிலெழுந்தாள். வீட்டில் நெல்மணி, பொன், பொருட்கள் குவிந்து கிடப்பதைக் கண்டு எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்தாள். தனது அருகில் துயில் கொண்டு இருந்த தாயார் எழுந்ததும் அருகில் படுத்திருந்த குழந்தைகளும் கண்விழித்து எழுந்தனர்.

குழந்தைகளுக்கு வீடு முழுவதும் நெல்மணியும், பொன் மற்றும் பொருட்கள் இருப்பதைக் கண்டு ஆச்சரியம் அடைந்தார்கள். கலயனார் மனைவி இரவென்றும் பாராமல் அவ்வேளையிலும் குடும்பத்திற்கு தேவையான அளவில் நெல்மணிகளை எடுத்துக் கொண்டு உணவைப் பக்குவம் செய்யத் தொடங்கினாள். திருக்கோவிலின் வெளியில் மனநிறைவுடன் உறங்கி கொண்டு இருந்த கலயனார் கனவிலும் எம்பெருமான் தோன்றி மறைந்தார். அக்கணத்தில் உறக்கத்தில் இருந்து விழித்து எழுந்து தலை மீது தனது கரங்களை கொண்டு நிலத்தில் வீழ்ந்து பணிந்து எழுந்தார்.

அப்போது ஆகாயத்தில் இருந்து அசரீரி ஒன்று உருவானது. வானத்தில் தோன்றிய அசரீரியானது உம்முடைய இல்லத்திற்குச் சென்று பாலுடன் கலந்த தேன் சுவை உணவை உண்டு பசி தீர்த்து மகிழ்வாயாக என்று கூறி மறைந்தது. அசரீரி மறைந்ததும் குங்கிலியக் கலயனார் அடைந்த மகிழ்ச்சி என்பது எல்லை இல்லாதது. பின்பு குங்கிலியக் கலயனார் மகிழ்ச்சி பொங்க தனது இருப்பிடத்தை நோக்கி விரைந்து சென்றார். அங்கு வீடு முழுவதும் பொருட்கள் நிரம்பி இருந்ததை கண்டதும் என்ன செய்வது என்று அறியாமல் திகைத்து கொண்டு இருந்தார்.

தந்தையை கண்டதும் புத்திரர்கள் மற்றும் துணைவியாரும் அவரை நோக்கி மிகவும் மகிழ்வுடன் வந்து கொண்டிருந்தனர். அவர்கள் அனைவரையும் அணைத்துக் கொண்டு இந்த எளியோனையும் ஒரு பொருட்டாக மதித்து ஆட்கொண்ட எம்பிரானின் திருவருட் கருணையைத் தான் என்னவென்று கூறுவேன்... என்று கூறி நமசிவாய மந்திரத்தை சொல்லிப் பணிந்தார். அனைவரும் எம்பெருமானை எண்ணி வழிபட்டனர். குங்குலியக் கலயனாரது அன்பின் வலிமையையும், பெருமையையும் மேலும் உலகிற்கு உணர்த்த திருவுள்ளம் கொண்டார் எம்பெருமான். அதற்கு தகுந்தாற்போல் திருப்பனந்தாள் என்னும் திருத்தலத்திலே இந்த உலகமே வியக்கும் அளவிற்கு ஒரு திருவிளையாடலையும் நிகழ்த்தினார்.

திருப்பனந்தாள் கோவிலில் எழுந்தருளியிருக்கும் இறைவனுக்கு மலர்மாலை அணிவிக்க வந்தவர்களுள் ஆதி சைவப் பெண்ணொருத்தி இருந்தாள். அவள் பெயர் தாடகை. இறைவழிபாடு முடிந்த பிறகு இறைவனுக்கு மாலையை அணிவிக்கப்போகும் சமயத்தில் அம்மங்கையின் உடையானது நழுவியது. உடையானது நழுவிய சமயத்திலும் தன்னுடைய இரு முழங்கைகளினாலும் ஆடையை பிடித்துக் கொண்டு இறைவனுக்கு மாலையைப் போட முயன்றாள் மனதில் அன்பும், பக்தியும் கொண்ட பெண். இருப்பினும் அப்பெண்மணியால் இறைவனுக்கு மாலையை அணிவிக்க முடியாமல் தவித்து வந்தாள்.

அன்பிற்கு அடிபணியும் எம்பெருமான் அப்பெண்ணுக்காக இறங்கிச் சற்றுச் சாய்ந்து கொடுத்தார். மங்கையும் மாலையை அணிவித்து, மகிழ்வோடு சென்றாள். அது முதல் அங்கு சிவலிங்கம் சற்று சாய்ந்த வடிவமாகவே தோற்றமளித்து வந்தது. இவ்வாறு இருக்கையில் திருப்பனந்தாள் திருத்தலத்தில் சோழ மன்னருடைய திருப்பணிகள் நடந்து கொண்டிருந்தன. சோழ மன்னன் நிகழ்ந்த நிகழ்வுகள் யாவற்றையும் அறிந்து கொண்டு சாய்ந்திருக்கும் சிவலிங்கத்தை நிமிர்ந்து நிறுத்த முயற்சித்தான். எம்பெருமான் கருணை கொண்டு சாய்ந்து காட்சி அளித்தமையால் அவரின் கருணை இல்லாமல் எதுவும் செய்ய இயலாது.

அதை உணராத மன்னன் தன்னிடம் இருக்கும் படை வலிமையை கொண்டு சாய்ந்திருக்கும் சிவலிங்கத்தை நேர்ப்படுத்த தனது முயற்சிகளை தொடங்கினார். கயிற்றின் ஒரு முனையை களிற்றிடமும், மறுமுனையை சிவலிங்கத்தின் மீதும் கட்டி இழுக்க தொடங்கினார். களிற்றின் முழுபலமும் அங்கு செயலற்று போனது. சாய்ந்திருக்கும் சிவலிங்கத்தினை ஒன்றும் செய்ய முடியவில்லை. பல படைவீரர்கள் முயன்றும் எவ்விதமான பலனும் இல்லாமல் இருந்தது. இதை அறிந்ததும் மன்னன் மனம் வாடினார்.

இந்த தகவலானது ஊர் மக்களிடம் காட்டுத்தீப்போல பரவத் தொடங்கியது. இந்த செய்தி இவ்விதமாக பரவி குங்குலியக் கலயனார் காதுகளுக்கு எட்டியது. இந்த செய்தியை அறிந்ததும் இறைவனுக்குத் திருத்தொண்டு புரிந்து வரும் குங்குலியக் கலயனார் திருப்பனந்தாளுக்கு புறப்பட்டார். ஐந்தெழுத்து மந்திரத்தை நினைத்தபடியே குங்குலியப் புகையினால் இறைவனின் சன்னதியைத் தூபமிட்டு சேவித்தார். கலயனார் வலிமையான கயிற்றை எடுத்து கயிற்றின் ஒரு பக்கத்தை எம்பெருமானுடைய திருமேனியில் பாசத்தோடு பிணைத்து, மறுபக்கத்தைத் தமது கழுத்தில் கட்டிக்கொண்டு பலமாக இழுத்தார். கயிறு இறுக்கினால் தமது உயிரும் போகும் என்பதை பற்றி கவலை கொள்ளாமல் இறைவனுக்கு இச்சிறு தொண்டினைக்கூடச் செய்ய முடியாமல் இந்த உயிர் இந்த உடம்பில் இருந்தால் என்ன? இல்லாமல் பிரிந்தால் என்ன? என்ற முடிவோடு தமது முழுபலத்தைக் கொண்டு இழுத்தார்.

எம்பெருமானைக் கயிற்றால் தன் கழுத்துடன் பக்தியோடும், அன்போடும் இறுக பிணைந்து இழுத்த செயல் எம்பெருமானுக்குத் தம்மைப் பக்தி எனும் கயிற்றால் கட்டி இழுப்பது போல் இருந்தது. அடியாரின் அன்புக்கு அடிப்பணிந்த எம்பெருமான் அசைய துவங்கினார். அந்த கணமே சாய்ந்திருத்த எம்பெருமானின் திருமேனியானது சாய்வு நீங்கி நேரே நிமிரத் துவங்கியது.

எம்பெருமானின் திருவருளால் கலயனார் கழுத்தில் போடப்பட்டிருந்த கயிற்றின் சுருக்கானது அவருக்குப் பூமாலையாக மாறியது. எம்பெருமானின் திருமேனியாம் சிவலிங்கத்தின் மீதும், கலயனாரால் கட்டப்பட்டிருந்த பூங்கச்சோடு சேர்ந்த கயிறு, கொன்றைப் பூமாலையாக காணப்பட்டது. ஒரு படை கொண்டு செய்யமுடியாத செயலை நாம் கொள்ளும் அன்பினால் செய்ய முடியும் என்பதை உணர்த்தினார் கலயனார். குங்குலியக் கலயனாரின் பக்தியையும், இறைவனைக் கட்டுப்பட வைத்த அன்பின் திறத்தினையும் உணர்ந்த மன்னனும், மக்களும் மிகவும் மகிழ்ச்சி கொண்டனர்.

சோழ மன்னன், கலயனார் பாதங்களில் வீழ்ந்து வணங்கினார். இவ்வுலகிற்கே நல்ல காலம் தங்களால் ஏற்பட்டது என்றார். ஆனால் கலயனார் இவர்கள் உரைக்கும் புகழ்ச்சி மொழியானது எதுவும் செவிக்கு ஏறாத வண்ணம் எம்பெருமானையே நினைவில் நினைத்து நின்று கொண்டு இருந்தார். பின்பு கலயனார் சிறிது காலம் தங்கி இருந்து கோவில் திருப்பணிகளில் தங்களை அர்பணித்துக் கொண்டார்.

வேந்தரோ ஆலய திருப்பணிகள் நிறைவுற்றதும் திருவிழாக்களும் நடத்தினான். கலயனாருக்கு வேண்டிய மானியங்கள் கொடுத்து மக்களின் முன்னிலையில் கௌரவப்படுத்தினார். பின்பு முழு மனநிறைவோடு தன் இருப்பிடம் அடைந்தார். இந்த மண்ணுலகில் பிறந்து பூமாதேவியின் மடியில் சிவத்தொண்டு புரிந்து பல காலம் புகழ்பட வாழ்ந்த குங்குலியக் கலயனார் இறுதியில் இறைவன் திருவடி நிழலை அடைந்து பேரின்ப வாழ்வைப் பெற்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக