Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 5 ஜூன், 2020

சிவபுராணம் - பாகம் 2 பகுதி 036

திருநீலகண்ட நாயனார் !!

பரம்பொருளான எம்பெருமான் மகிழ்ச்சியாக நடனம் புரிந்து அருள்புரியும் தில்லைப்பகுதியில் குயவர் குடியில் பிறந்தவர்தான் திருநீலகண்டர். சிவபெருமானின் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்தார். தம்முடைய முன்னோர்கள் செய்து வந்த குலத்தொழிலான மண்பாண்டங்களை தயாரித்து விற்பனை செய்து வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தார்.

அமிர்தம் கடையும்போது வெளிப்பட்ட ஆலகால விஷத்தை, உலகத்தை காக்கும் பொருட்டு அருந்திய எம்பெருமானின் உடலில் அவ்விஷமானது இறங்கா வண்ணம் இருக்க உமையவள் கண்ட (கழுத்து) பகுதியில் நிறுத்தியமையால் எம்பெருமானின் கண்டமானது நீலநிறமாக மாறியது. அதை குறிக்கும் வண்ணம் அடியார்கள் எம்பெருமானை 'திருநீலகண்டர்" என்று அழைத்தனர். எம்பெருமானை எந்நேரமும் இடைவிடாது திருநீலகண்டர் என்று மனம் உருகப் போற்றி வந்த காரணத்தால் இச்சிவனடியாரை திருநீலகண்டர் என்ற காரணப் பெயரிட்டு யாவரும் அழைத்து வந்தனர்.

எம்பெருமானின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்ட திருநீலகண்டர், எம்பெருமானை வழிபடும் சிவனடியார்களுக்கு தேவையான திருவோடுகள் வழங்குவதை தம் தொண்டாக செய்து வந்தார். திருவோடுகளில் அடியார்களுக்கு வேண்டிய உணவினை படைப்பதையும், அவர்களுக்கு வேண்டிய தொண்டுகள் செய்வதையும் தம்முடைய வழக்கமாக கொண்டிருந்தார். மாயையை விடுத்து அறவழியில் வழுவாது மெய்வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தார். இவரின் குணநலனிற்கு ஏற்ப இவரது துணைவியாரும் கற்புடைச் செல்வியாய் சிவபக்தியில் சிறந்தவராக இருந்தார். இருவரும் இனிமையான இல்வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தனர்.

எவரும் எதிர்பார்க்காத வகையில் இருவரது இனிமையான இல்லற வாழ்வில் ஊழ்வினைப் பயனால் குடும்பத்தில் சில சங்கடங்கள் ஏற்பட துவங்கியது. தன்னுடைய மனைவியின் மீது மிகுந்த அன்பு கொண்ட திருநீலகண்டர் இளமையின் வேகத்தில் தன் பாதை விடுத்து, தவறான பாதைக்குச் செல்லத் துவங்கினார். எம்பெருமானின் பக்தனாக இருந்த திருநீலகண்டர் மாயை சுகம் கொண்ட சிற்றின்பத்தில் நாட்டம் கொண்டு அவ்வூரில் வாழ்ந்து வந்த ஒரு வேசியுடன் பழக்கம் ஏற்பட துவங்கியது. அந்த பழக்கமானது அவள் மீது பற்று கொள்ள செய்து, அவள் வீட்டிற்கு சென்ற பின்பு தன் வீட்டுக்குத் திரும்புவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

திருநீலகண்டர் வேசியுடன் பழகும் பழக்கத்தை அறிந்ததும் அவரது துணைவியாருக்கு தம்முடைய மனதில் எல்லையில்லாத கோபமானது தோன்றியது. இருந்தும் அதை வெளிக்காட்டாமல் மறைத்து கொண்டு கணவருடன் இல்வாழ்க்கை நடத்தி வந்தார். தான் வேசியிடம் சென்று வருவது யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை என எண்ணி அவருடைய காலமும், பொழுதும் அவ்விடத்தில் அதிகரிக்க துவங்கியது. இந்த எண்ணமே அவரது இல்வாழ்க்கையில் ஒரு பெரும் புயலை உருவாக்கியது. ஒருநாள் எப்போதும் போல் திருநீலகண்டர் வீட்டிற்கு வந்தார்.

ஆனால் எப்போதும் வீட்டிற்கு வந்ததும் பேசக்கூடிய அவரது மனைவி அன்று அவரிடம் ஒரு வார்த்தைக்கூட பேசவில்லை. அவருக்கு வேண்டிய உணவை பரிமாறிய பின்பு அப்படியே எழுந்து உறங்கச் சென்றுவிட்டார். மனைவியின் இந்த செய்கையானது அவருக்கு ஒருவிதமான அச்சத்தை ஏற்படுத்த துவங்கியது. தம்முடைய துணைவியார் கொண்ட கோபத்தைத் தீர்க்கும் பொருட்டு அவரின் அருகில் சென்று யாது? என வினவி துணைவியாரின் அருகில் சென்றார். ஆனால் அங்கு நிகழ்ந்ததோ அவர் சற்றும் எதிர்பார்க்காத ஒன்றாகும். அப்போதுதான் அந்நாள் வரை அடக்கி வைத்திருந்த அவரது மனைவியின் கோபத்தை முதல் முறையாக கண்டார்.

எம்மைத் தொடாதீர்கள்.

எம்மைத் தொடும் உரிமையை தாங்கள் இழந்து விட்டீர்கள்.

வேசியின் வீட்டிற்குச் சென்ற உங்களை நான் ஒரு நாளும் எம்மைத் தொட அனுமதிக்க மாட்டேன்.

திருநீலகண்டத்தின் மீதே ஆணையிட்டு கூறுகிறேன்.

இனி எம்மைத் தாங்கள் தீண்டக்கூடாது என்று கூறிவிட்டாள்.

அதைக் கேட்டதும் திருநீலகண்டர் என்றுமில்லாமல் மனைவி இவ்விதம் ஆணையிட்டு கூறியதை கேட்டதும் மனதில் ஒருவிதமான பதற்றம் கொண்டு நிலை தடுமாறி என்ன செய்வது? என்று அறியாமல் திகைத்து நின்று கொண்டிருந்தார்.

நிலை தடுமாறி என்ன செய்வது? என்று அறியாமல் திகைத்து நின்று கொண்டிருந்த திருநீலகண்டர் அக்கணம் முதல் தம் துணைவியாரிடம் இருந்து நீங்கினார். பின்பு தம் துணைவியார் கூறியவற்றை எண்ணி அதிலுள்ள பொருளை உணர துவங்கினார். அதாவது, அம்மையார் கோபத்தில் 'என்னை" என்று ஒருமையில் குறிப்பிடாமல் 'எம்மை" என்று பன்மையாக உரைத்தமையால் தன்னை மட்டுமின்றி இனி இவ்வுலகில் வாழும் காலம் முழுவதும் எந்த பெண்களையும் நான் மனதினால் கூட நினைக்க மாட்டேன் என்று மனதில் உறுதி கொண்டார்.

திருநீலகண்ட நாயனார் இவ்வுலகில் கிடைக்கும் அனைத்து சுகங்கள் யாவையும் துறந்து, வனத்திற்கு சென்று ஐம்புலனையும் அடக்கி வாழும் முனிவர்கள் போல் வாழத் துவங்கினார். திருநீலகண்டர் வாழ்ந்து வந்த வீடு என்பது மிகவும் சிறிய வீடாகும். அவர்கள் வாழ்ந்து வந்த வீட்டிற்குள் இருவரும் கட்டுப்பாடோடும், இல்லறத்திற்குரிய பிற தர்மங்கள் யாவும் செய்து கொண்டு உடல் புணர்ச்சியின்மையை தவிர்த்து தாம் கொண்ட விரதம் பிறர் அறியா வண்ணம் வாழ்ந்து வந்தனர். பல ஆண்டுகள் அவர்கள் ஒன்றாக இணைந்து வாழ்ந்து வந்தாலும் அவர்களுடைய இல்லற வாழ்வு என்பது துறவறம் மேற்கொண்ட முனிவர்களின் வாழ்வை போல் இருந்தது.

தன்னுடைய மனைவியின் விருப்பம் அறிந்ததும் தம் மனதில் கொண்ட உறுதியைக் கடைபிடித்து தன் மனைவியைத் தொடாமலேயே வாழ்ந்து, சிவத்தொண்டுகள் பல புரிந்து வந்தார். வருடங்கள் பல கடந்து செல்ல இருவரும் இளமை நீங்கி வயோதிகம் என்னும் முதுமை பருவத்தை அடைந்தனர். உடல்தான் வயோதிகம் என்னும் முதுமையை அடைந்ததே தவிர, அவர்கள் எம்பெருமானின் மீது கொண்ட பக்தியும், அவர்களின் மனதில் இருந்துவந்த உறுதியும் எள்ளளவும் குறையாது அப்படியே இருந்தது.

எம்பெருமான் அவர்களின் பக்தியையும், தன் மேல் ஆணையிட்ட காரணத்தால் அவர்கள் உடலின்பம் தவிர்த்து வாழ்ந்ததையும் உலகத்தார் அறிய திருவுள்ளம் கொண்டார். காருண்ய ரூபம் கொண்ட பரமசிவன் அடியாரின் பெருமையை உலகத்தவர்கள் அறியும் பொருட்டு தமது திருவிளையாடலை துவங்கினார்.

என்றும் அல்லாத வகையில் திருநீலகண்டரும், அவரது மனைவியாரும் தம் வீட்டு வாசலில் ஒரு திருவோடு ஏந்திய சிவனடியார் நிற்பதைக் கண்டனர். அவரை கண்ட மாத்திரத்தில் தம்பதியர்களான இருவரும் அவரை இன்முகத்தோடு வீட்டின் உள்ளே வரவேற்றனர். பின்பு அவர் உண்பதற்கு தேவையான உணவை படைத்து உபசரித்து, முறைப்படி வழிபட்டனர். அமுது உண்டு நிறைவுற்று இருந்த அடியாரிடம் சென்று ஐயனே... யான் ஏதாவது பணி செய்தல் உள்ளதா? என்று வினாவினார். உடனே வந்திருந்த அடியார் ஆம்... என்று உரைத்து தன்னிடமிருந்த திருவோட்டினை எடுத்து திருநீலகண்டரிடம் கொடுத்தார்.

அடியாரோ திருநீலகண்டரை பார்த்து, திருநீலகண்டரே!... யான் உமக்கு கொடுத்துள்ள இந்த திருவோடு என்பது மற்ற திருவோடுகளை போல் சாதாரண ஓடு அல்ல. இந்த ஓடு விலை மதிப்பற்றதாகும். மனிதர்களிடம் இருக்கும் தங்கமும், வைரமும் கூட இதற்கு ஈடு இணையாகாது. கற்பக மரத்தினை போல் வேண்டுவனவற்றை வாரி வழங்கும் தன்மை கொண்டது. அவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த திருவோட்டினை உம்மிடம் ஒப்படைத்துவிட்டு செல்கிறேன். நான் என்னுடைய பணிகளை நிறைவு செய்த பின் மீண்டும் திரும்பி வந்ததும் என்னுடைய இந்த திருவோட்டினை எம்மிடம் ஒப்படைப்பாயாக!... என்று கூறினார்.

திருநீலகண்டரும் அடியார் கொடுத்த திருவோட்டினை மிகுந்த பயபக்தியோடும், பணிவோடும் பெற்று அடியாரின் விருப்பம் எதுவோ? அதுவே என் பாக்கியம் என்று கூறினார். பின்பு அவரிடம் இருந்து விடைபெற்று கொண்டு தன்னிடம் கொடுத்த திருவோட்டினை மிகுந்த பாதுகாப்புடனும், யாவரும் அறியா வண்ணமும் மறைத்து வைத்தார். சிறிது காலத்திற்குள் சிவனடியாரும் அவ்விடத்தில் இருந்து விடைபெற்று தன்னுடைய இடமான தில்லைக்கு சென்றுவிட்டார்.

ஒருநாள் தில்லைக்கு சென்றிருந்த சிவனடியார் திருநீலகண்டரின் இல்லத்திற்கு வருகை தந்தார். அவரின் வருகையை கண்டதும் மனம் மகிழ்ந்த நிலையில் திருநீலகண்டர் அவரை வரவேற்று அவரின் திருவடிகளை தூய நீரால் கழுவி... நல்ல மணம் கொண்ட மலர்களை தூவி... ஆசனத்தில் அமரச் செய்தார். பின்பு அடியாரிடம் தாங்கள் இவ்வீட்டிற்கு எழுந்தருளி வந்திருப்பது அடியேன் செய்த பூர்வ ஜென்ம பயனாகும் என்று உரைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அவருடைய உரையையும், அவர் கொண்ட மகிழ்ச்சியையும் கண்ட அடியார் யான் முன்னொரு பொழுதில் உன்னிடத்திலே தந்த திருவோட்டினால் இப்பொழுது எமக்கு தேவை இருப்பதால் அவ்வோட்டினை தருமாறு கேட்டார்.

உடனே திருநீலகண்டர் சிறிது காலத்திற்குள் வருவதாக உரைத்து அவரிடம் இருந்து விடைபெற்று விரைந்து சென்று தன்னிடம் கொடுக்கப்பட்ட திருவோட்டை பாதுகாப்பாக வைத்திருந்த இடத்திற்கு சென்று பார்த்தபோது அவ்விடத்தில் அவர் வைத்திருந்த திருவோட்டினை காணாமல் அதிர்ச்சி அடைந்தார். தன் இல்லத்திற்கு வந்திருப்பவர் ஆடல் மன்னரான எம்பெருமான் அடியார் கோலம் கொண்டு தம் பக்தனிடம் திருவிளையாடல் புரிந்து கொண்டு இருக்கின்றார். யாவரும் அறியாமல் பெட்டிக்குள் வைத்து இருந்த திருவோடு காணாமல் போனதும் எம்பெருமான் திருவிளையாடல் என்பதை அறியாது இருந்தார் திருநீலகண்டர்.

திருநீலகண்டர், தான் திருவோடு வைத்திருந்த இடத்தை சுற்றியும் பார்த்தார். எவ்விடத்தில் தேடியும் திருவோடு காணாததால் மனம் பதறினார். பின்பு மனைவியிடம் அடியாரின் திருவோட்டை காணவில்லை என்று கூறினார். அவரது துணைவியாரும் மனம் பதறினார். இருவருக்கும் அவ்விடத்தில்தான் வைத்தது நினைவில் இருந்தது. ஆனால் இன்றோ திருவோடு இருந்த இடத்தில் காணவில்லை. இல்லத்தில் உள்ள எல்லா இடங்களிலும் தேடி அலைந்தார்கள். தன்னை நம்பி தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட திருவோட்டை காணவில்லையே...! இனி நான் என்ன செய்வேன்? பெருமானே என்று கதறினார்.

இங்கு நிகழ்ந்து கொண்டு இருப்பதை நன்கு அறிந்தவரான அடியார் கோலம் கொண்ட எம்பெருமான், திருநீலகண்டர் அளித்த இருக்கையில் அமைதியாக அமர்ந்திருந்தார். பல இடங்களில் தேடியும் திருவோடு காணாததால் தம்பதியர்கள் இருவரும் கவலை தோய்ந்த முகத்துடன் சிவனடியாரை காண அவரின் அருகில் சென்றனர். சிவனடியாரிடம் எவ்விதம் உரைப்பது? என்று அறியாமல் ஒருவிதமான தயக்கத்துடன் நின்று கொண்டிருந்தனர்.

திருநீலகண்டரின் முகத்தில் காணப்பட்ட பயத்தையும், புற மாற்றத்தையும், அவர் கொண்ட தயக்கத்தையும் கண்ட சிவனடியார் சற்று கோபத்துடனே திருநீலகண்டரிடம் ஏன்?... என்னவாயிற்று?... யான் கொடுத்த பொருளை கொடுக்க மனம் இல்லாமல் அதை மறைத்து வைத்துக் கொண்டாயோ?... என்று உரைத்து சரியப்பா... எனக்கு காலம் இல்லை... யான் கொடுத்த திருவோட்டை தாமதிக்காமல் கொண்டு வந்து கொடுத்துவிடு... நான் உடனடியாக செல்ல வேண்டும் என்றார்.

அடியார் மொழிந்ததைக் கேட்டதும் சற்று திடுக்கிட்டு போன திருநீலகண்டர் அடியாரிடம் நிகழ்ந்தவற்றை எடுத்துரைக்க துவங்கினார். அதாவது, உண்மையிலேயே தாங்கள் என்னிடம் கொடுத்த திருவோடு காணாமல் போய்விட்டது... அடியேனை மன்னிப்பீர்களாக...! என்று பணிவோடு கூறினார். இதைக் கேட்டதும் மிகுந்த சினத்துடன், நான் உன்னிடம் கொடுத்த அதி அற்புதமான திருவோட்டினை காணவில்லை என்று உரைக்கின்றாயே? என்று மிகுந்த சினத்துடன் காணப்பட்டார். அடியாரின் முகத்தில் ஏற்பட்ட மாற்றத்தினைக் கண்ட திருநீலகண்டரின் மனைவியோ கண்களில் நீர்மல்க நின்றாள். திருநீலகண்டரோ மனதில் எம்பெருமானை தியானித்தார். காலம் ஆக ஆக அடியாரின் கோபமும் அதிகரிக்கத் துவங்கியது.

அடியாரின் கோபத்தைக் கண்ட திருநீலகண்டர் அடியாரிடம் கோபம் கொள்ள வேண்டாம்... அடியேன் செய்த இப்பிழையை தாங்கள் மன்னித்தருள வேண்டும். திருவோடு, வைத்திருந்த இடத்தில் இல்லாமல் மாயமானதை அடியேன் சிறிதும் அறியேன். எம்மை மன்னித்து விடுங்கள். தாங்கள் என்னிடம் கொடுத்த மண் ஓட்டிற்குப் பதிலாக பொன் ஓடு வேண்டுமாயின் அளிக்கின்றேன் என்று பணிவோடு அடியாரிடம் கூறினார். திருநீலகண்டரின் உரையானது சிவனடியாருக்கு மேலும் கோபத்தை தூண்டியது.

வேறு ஓடு தருகிறாயா? நன்று திருநீலகண்டா... அருமைகளையும், பெருமைகளையும் பேசியுள்ளேன். அதனால்தான் வேண்டுமென்றே திருவோட்டை திருடி வைத்துள்ளாய் என்று கோபத்துடன் கூறினார். ஐயனே...! உண்மையைதான் கூறுகின்றேன். நான் திருவோட்டை எடுக்கவே இல்லை என்று கூறினார். நீ திருவோட்டினை திருடவில்லை என்பது உண்மையானால் திருவோட்டை நான் திருடவில்லை என்று உன் மகன் கரம் பற்றி பொற்றாமரைக் குளத்தில் மூழ்கிச் சத்தியம் செய்து தாரும்... என்று அடியார் கூறினார்.

திருநீலகண்டரோ அடியாரிடம் ஐயனே...!! எனக்கு தான் மகன் இல்லையே... என்று கூறினார். உடனே அடியாரும் மகன் இல்லாவிட்டால் என்ன? மனைவியின் கையைப் பற்றி நீரில் மூழ்கி நீர் உரைத்தது மெய்யென உணர்த்தினால் போதுமானதாகும் என்று கூறினார். அடியாரின் ஆணையானது திருநீலகண்டரின் மனதை மேலும் வடுவாக்க துவங்கியது. திருவோடு காணவில்லை என்பது உண்மைதான். திருநீலகண்டரோ... தன் மனைவியின் மீது சத்தியம் செய்ய மனையாளை எப்படித் தீண்டுவது? என்றும், அவர் இந்த சூழ்நிலையை எவ்விதம் சமாளிப்பது? என்றும் புரியாமல் திகைத்து கொண்டிருந்தார்.

ஏனெனில் தமக்கும், தன்னுடைய மனைவிக்கும் உள்ள நிலையினை வெளியிட முடியாத நிலையில், சுவாமி என்னை தாங்கள் மன்னிக்க வேண்டும். நானும், எனது மனைவியும் ஒரு சபதம் செய்து வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம். ஆகையால் எம்மால் என் மனைவியின் கரத்தினை பிடித்து சத்தியம் செய்ய இயலாது என்று முடிவாக கூறிவிட்டார் திருநீலகண்டர். இனியும் உன்னோடு உரையாடி எவ்விதமான பலனும் இல்லை. வா... இப்போதே மன்றம் செல்வோம் என்று முடிவாகச் சொன்னார் அடியார் உருவத்தில் இருந்த எம்பெருமான். திருநீலகண்டரும் எம்பெருமானின் முடிவுக்கு சம்மதம் அளித்தார். எம்பெருமான் வழக்கு மன்றத்தை நோக்கி முன்செல்ல திருநீலகண்டரும் அவரைப் பின் தொடர்ந்து சென்றார்.

சிவனடியார் வடிவில் வந்த எம்பெருமானும், திருநீலகண்டரும் தில்லைவாழ் அந்தணர்கள் நிறைந்து இருந்த அவையை வந்தடைந்தனர். அவையில் கூடியிருந்த அந்தணர்களின் முன்னிலையில் வழக்கை எடுத்துரைத்தார் தில்லையில் களிநடனம் புரியும் அம்பலத்தரசர். திருநீலகண்டரோ தான் அடியார் அளித்த ஓட்டைத் திருடவில்லை என்று ஒரே முடிவாக கூறிக்கொண்டு இருந்தார். நீர் உரைப்பது உண்மையெனில் அடியாரின் விருப்பப்படி உன் துணைவியின் கரத்தினை பற்றி நீரில் மூழ்கி சத்தியம் செய்வதுதானே உத்தமம்...! என்று கூறினார்கள்.

சபையில் இருப்பவர்களின் முடிவுகளை கேட்டதும் என்ன செய்வது? என்று புரியாமல் திருநீலகண்டர் தங்களுடைய இல்வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கும் விவகாரத்தை வெளியில் எவரும் அறியாத வகையிலும், இப்பிரச்சனையை தீர்க்கும் விதமாகவும் பொற்றாமரைக் குளத்தில் என் துணைவியுடன் இணைந்து மூழ்கி எழுகிறேன் என்று கூறினார். அவையில் இருக்கும் ஆன்றோர்களும் அதற்கு சம்மதம் தெரிவித்தனர்.

அவையில் இருப்பவர்களிடம் தான் தனது இல்லத்திற்கு சென்று தனது துணையிடம் நிகழ்ந்தவற்றை எடுத்துரைத்து தம் மனைவியாரை அழைத்துக் கொண்டு பொற்றாமரைக் குளத்திற்கு அழைத்து வந்தார். குளத்தின் அருகே உள்ள ஊரில் இருந்த மக்கள் அனைவரும் இவ்விருவரும் மூழ்கி எழும் காட்சியை காணுவதற்காக பொற்றாமரைக் குளத்திற்கு வந்தனர்.

தனது துணைவியின் விருப்பத்தை அறிந்து கொண்டு அவருடைய மனதின் விருப்பத்தை காயப்படாமல், அதே சமயம் அடியாரிடம் தான் எவ்வித பிழையும் செய்யவில்லை என்பதை நிரூபிக்கும் பொருட்டு தன்னுடன் ஒரு மூங்கிலையும் எடுத்து வந்தார். மூங்கில் கழி ஒன்றைக் கொண்டு வந்து அக்கழியின் ஒரு பக்கத்தைத் தாமும், மறுபக்கத்தைத் தம் மனைவியையும் பற்றிக் கொள்ளச் செய்தார். தன் மனைவியுடன் குளத்தில் திருநீலகண்டர் இறங்க முற்பட்டதைக் கண்ட அடியார் வடிவத்தில் இருந்த எம்பெருமான் கோபம் கொண்டார்.

திருநீலகண்டர் தன் துணைவியின் கரத்தினை பிடிக்காமல் மூங்கில் துணைக் கொண்டு குளத்தில் இறங்குவதைக் கண்டு மிகுந்த சினம் கொண்ட அடியார் வடிவத்தில் இருந்த எம்பெருமான் இது முறையானது அல்ல என்றும், துணையாளின் கரம் பற்றிக் கொண்டு பொற்றாமரைக் குளத்தில் மூழ்கி சத்தியம் செய்தல் வேண்டும் என்று கூறினார். இதற்கு பின்பும் எதையும் மறைக்க விருப்பம் இல்லாத திருநீலகண்டர் வேறு வழியின்றி தம்பதிகளுக்குள் நடந்த எல்லா பிரச்சனைகளையும், அவையோர் அறிய உரைத்து கழியைப் பிடித்துக் கொண்ட திருநீலகண்டர் கழியின் மறுமுனையை மனைவியை நோக்கி நீட்ட அவளும் பற்றிக் கொண்டாள்.

அவையோரின் கருத்துக்களை கூட எதிர்பார்க்காத இருவரும் பொற்றாமரைக் குளத்தில் மூழ்கி எழுந்தனர். நிகழ்வது யாதென்று புரிவதற்குள் அங்கே ஒரு அதிசயம் நிகழத் துவங்கியது. அனைவரின் முன்னிலையில் திருக்குளத்தில் மூழ்கி எழுந்த திருநீலகண்டரும், அவரது மனைவியாரும் எம்பெருமானின் கருணை பார்வையாலும், அவருடைய அருளாலும் வயோதிகம் என்னும் முதுமை நீங்கப்பெற்று இளமை எழில் பெற்று எழுந்தனர். அதுவரை இவற்றிற்கெல்லாம் காரணமாக இருந்துவந்த சிவனடியார் அவ்விடத்தில் இல்லாது மறைந்து மாயமாகி போனது அனைவருக்கும் ஆச்சரியத்தையும், வியப்பையும் அளித்தது.

எவரும் எதிர்பாராத நிகழ்வுகள் அவ்விடத்தில் நிகழத் துவங்கியது. அதாவது காற்றின் வேகம் அதிகரிக்க, ஆலயத்தில் இருந்த மணிகள் ஒலிக்க துவங்கின. சங்கொலி முழங்க... மங்கல இசை ஒலிக்க... வானத்தில் பெரும் பிரகாசமான ஒளி தோன்ற... அதன் நடுவே எம்பெருமான் உமா மஹேஸ்வரி சமேதராக, ரிஷபத்தின் மேல் காட்சி அளித்தார்.

இக்காட்சியை கண்டதும் திருநீலகண்டரும், அவரது மனைவியாரும், அவையோரும், மற்றோரும் நிலத்தில் வீழ்ந்து வணங்கினர். இவ்வுலகில் உள்ள இன்பங்களை மறந்து ஐம்புலன்களையும் வென்று வாழ்ந்துவந்த அடியவர்களே என்றும் குன்றா இளமையுடன் வாழ்வீர்களாக... என்று நாயனாருக்கும், அவர் துணைவியாருக்கும் அருள்புரிந்தார் எம்பெருமான். திருநீலகண்ட நாயனாரும், அவரது மனைவியாரும் இறைவனின் அருளினால் இளமையுடனும், இன்பமுடனும் தரணியில் நெடுநாள் வாழ்ந்து எம்பெருமானையும், அவர்தம் அடியார்களையும் போற்றி வழிபட்டு பெரும்புகழ் பெற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக