Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

புதன், 1 ஜூலை, 2020

சிவபுராணம் - பாகம் 2 பகுதி 053

திருமுருக நாயனார்...!!

திருப்புகலூர் என்னும் திருத்தலத்தில் அந்தணர் குலத்தில் தோன்றியவர் முருகனார் என்னும் சிவத்தொண்டர். இத்தலத்தில் எழுந்தருளியுள்ள கோவிலுக்கு வர்த்தமானீச்சரம் என்று பெயர். இளமை பருவம் முதலே எம்பெருமானின் திருவடிகளின் மீது மிகுந்த பற்று கொண்டிருந்தார்.

பிறவா நிலை என்ற பேரின்ப வாழ்க்கையை அடைவது என்பது எம்பெருமானுக்கும், அவரை வழிபடும் அடியார்களுக்கும் செய்யும் திருத்தொண்டின் மூலம் தான் கிடைக்கும் என்பதை நன்கு உணர்ந்து இருந்தார். அதனால் எப்போதும் எம்பெருமானின் திருநாமத்தையும், அவர் தம் அடியார்களையும் போற்றி வணங்கி வந்தார் முருகனார்.

இதுமட்டுமின்றி தினந்தோறும் எம்பெருமானுக்கு நறுமண மலர்களை பறித்து வந்து அதை மாலையாக தொடுத்து எம்பெருமானுக்கு சாற்றுவதை தம்முடைய பணிகளில் முதன்மையான பணியாக கருதி வந்தார். அதற்காகவே அதிகாலை வேளையில் பொழுது விடிவதற்கு முன்பே எழுந்து தூய நீரில் நீராடி உடல் முழுவதும் திருநீறு பூசிக்கொள்வார்.

அங்கிருந்து மலர்கள் இருக்கும் தோட்டத்திற்கு சென்று கோட்டுப்பூ (மலர்கின்ற பருவத்திலுள்ள மலர்கள்), கொடிப்பூ, நீர்ப்பூ, நிலப்பூ எனப்படும் நால்வகைப் பூக்களில் நல்ல நிலையில் அதாவது, இறைவனுக்கு சாற்றும் நிலையில் இருக்கும் பூக்களை பறித்து பிரித்தெடுத்து வௌ;வேறாக கூடைகளில் போட்டுக் கொள்வார்.

இவ்விதமாக பறிக்கப்பட்ட அழகிய மற்றும் நல்ல நிலையில் இருக்கும் மலர்களை கொண்டு எம்பெருமானுக்கு பலவிதமான மாலைகளை விதவிதமாக தொடுத்து மகிழ்வார். கோவை மாலை, கொண்டை மாலை, பக்தி மாலை, சர மாலை, தொங்கல் மாலை என்று தொடுத்து, எம்பெருமானுக்கு சாற்றி மகிழ்வார்.

திருமுருக நாயனார் ஆறுகாலப் பூஜைக்கும் மற்றும் அந்தந்த காலப்பூஜைக்கேற்ப மாலைகளை தொடுத்து அவற்றை திருப்புகலூரில் உள்ள வர்த்தமானீச்சரம் திருக்கோவிலில் உள்ள சிவபெருமானுக்கு சாற்றி அர்ச்சனை செய்தும், திருவைந்தெழுத்து பாடியும் வழிபட்டு கொண்டிருந்தார்.

எம்பெருமானை மகிழ்வித்தல் என்பது அவரை வழிபடும் அடியார்களை மகிழ்வாக பார்த்து கொள்வதே என்பதை நன்கு உணர்ந்து இருந்த முருகனார் அடியார்கள் வந்து தங்கும் வகையில் மடம் ஒன்றைக் கட்டுவித்தார்.

திருஞானசம்பந்தப் பிள்ளையார் எழுந்தருளியபோது பிள்ளையாரை எதிர்கொண்டு அழைத்து வந்தார். சிலநாட்கள் பிள்ளையாருடன் தங்கியிருந்து திருப்புகலூரில் வீற்றிருக்கும் வர்த்தமானீஸ்வரர் பெருமானை தினந்தோறும் வழிபாடு செய்யும் பேறு பெற்றார். திருநாவுக்கரசு சுவாமிகள் புகலூருக்கு வந்த பொழுது திருஞானசம்பந்தப் பிள்ளையாருடன் சென்று அவரை வரவேற்கும் பாக்கியத்தையும் பெற்றார்.

முருகனாரின் அன்பிற்கு கட்டுப்பட்ட திருஞானசம்பந்த பிள்ளையாரும், திருநாவுக்கரசு சுவாமிகளும் சில நாள் அம்மடத்தில் தங்கியிருந்தனர். அவர்கள் தங்கியிருக்கும் தகவல் அறிந்த நீலநக்கர், சிறுத்தொண்டர் ஆகிய பெருமக்களும் அங்கு வந்து சேர்ந்தனர். அவர்களோடெல்லாம் அளவளாவி மகிழ்ந்திருந்தார். அவர்கள் அனைவரும் நாளடைவில் முருகனாரின் அன்பிற்கினிய நண்பர்களாகவும் மாறினர்.

திருஞான சம்பந்தரின் அழைப்பை ஏற்று திருநல்லூரில் நடந்த திருஞான சம்பந்தரின் பெருமணத்தில் கலந்துகொள்ள சென்றார் முருகனார். எம்பெருமான் அருளிய பேரொளியில் திருஞான சம்பந்தர் நுழைந்தபோது சுற்றியிருந்த உறவினர்கள், சுற்றம் சூழ இவரும் எம்பெருமானின் திருவடியை அடையும் பேறை பெற்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!