Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

திங்கள், 29 ஜூன், 2020

ஹோட்டலுக்கு போறதுக்கு முன்னாடி இத படிச்சுட்டு போங்க...


தற்பொழுது அனைத்து நாடுகளும், மாநிலங்களும் படிப்படியாக ஊரடங்கு தளர்வை அறிவித்துக் கொண்டே வருகின்றன. ஆனால் தற்பொழுது மறுபடியும் கொரோனா பாதிப்பு கூடிக்கொண்டே போவதால், மறுபடியும் ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்புள்ளது. நமது இந்தியாவில் மட்டும் 4 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர், மற்றும் பதினான்காயிரத்திற்கும் மேற்பட்டோர் இதுவரை இறந்துள்ளனர். இவற்றையெல்லாம் பார்க்கும் பொழுது, பாதிப்பு வேகம் கட்டுப்பட இன்னும் சிலகாலம் அல்லது மாதங்கள் கூட ஆகும் என்றே தோன்றுகிறது.

இதுநாள் வரை நாம் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்து வீட்டிலேயே சமைத்து சாப்பிட்டு கொண்டு இருந்திருப்போம். ஆனால் இப்பொழுது ஊரடங்கு தளர்வினால், ஹோட்டல்களை திறக்க ஆரம்பித்து விட்டார்கள். நீங்கள், அப்பாடா, நாம் வெளியில் பொய் நமக்கு பிடித்த ஹோட்டலில் உள்ள பிடித்தமான உணவை போய் சாப்பிடலாம் என்று ஏற்கனவே திட்டம் தீட்டி இருப்பீர்கள்.

அவ்வாறு செல்வதற்கு முன், இன்னும் கொரோனா அரக்கனின் அச்சுறுத்தல் இருக்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள். வெளியில் செல்லும் பொழுது பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை கையாள்வதன் மூலம், உங்களுக்கு கொரோனா பாதிப்பு வராமல் பாதுகாக்கலாம். அவை என்னவென்று என்பதை பின்வரும் பகுதிகளில் காணலாம்.

முடிந்த வரை ஃபுட் டெலிவரியை தவிர்க்கவும்

* தற்பொழுதெல்லாம் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்து சாப்பிடுவது பொதுவான ஒன்றாக மாறிவிட்டது. ஊரடங்கு நேரத்தில் கூட நம்மில் பலர் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்து சாப்பிட்டு இருப்போம். தற்பொழுது இருக்கும் நிலையில், வெளியில் சென்று சாப்பிடுவது எவ்வளவு ஆபத்தானதோ, அதே அளவு ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிடுவதும் ஆபத்தானது.

* ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிடுவதால் வைரஸில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம் என்று நீங்கள் நினைத்தால், அது தவறான ஒன்று. நீங்கள் உணவு ஆர்டர் செய்யும் ஒரு ஹோட்டல் அல்லது ரெஸ்டாரண்டில் சுத்தம் மற்றும் சுகாதாரம் என்பது எவ்வாறு உள்ளது என்பதை உங்களால் பார்க்கவோ அல்லது அனுமானிக்கவோ முடியாது.

* உங்களுக்கு உணவு எடுத்து பார்சல் செய்து டெலிவரி செய்யும் வரை பல படிநிலைகள் உள்ளன. இந்த ஒவ்வொரு நிலையிலும் சுத்தம் சுகாதாரம் பேணிகாக்கப்படுவது மிக முக்கியமான ஒன்று. அதே போல் உணவு டெலிவரி செய்பவர்க்கு கொரோனா தொற்று தற்பொழுது அதிகமாக ஏற்படுகிறது. நீங்கள் கூட இதனை செய்திகளில் படித்திருக்கலாம் அல்லது கேட்டிருக்கலாம்.

* உணவு டெலிவரி செய்பவர், உணவை டெலிவரி செய்வதற்காக பல இடங்களுக்கு செல்ல வேண்டியது இருக்கும். அவ்வாறு செல்லும் பொழுது ஏதேனும் ஒரு கொரோனா நோயாளியின் தொடர்பு ஏற்பட்டாலும், அவர் டெலிவரி செய்யும் மற்றவர்களுக்கும் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே ஆன்லைனில் ஆர்டர் செய்வதை அறவே தவிருங்கள். அதற்கு பதிலாக, நீங்களே போய் உணவை பார்சலில் வீட்டிற்கு வாங்கிட்டு வந்து சாப்பிடலாம்.

புதிய ஹோட்டலுக்கு செல்வதை தவிர்க்கவும்

* ஏதேனும் புதிதான ஹோட்டல்களில் கவர்ச்சிகரமான தள்ளுபடிகளில் உணவு கிடைப்பதாக விளம்பரப்படுத்தி இருப்பார்கள். இவை எல்லாம் புதிய வாடிக்கையாளர்களை ஈர்த்து அவர்கள் வியாபாரத்தை பெருகும் உத்தி. தற்பொழுது உள்ள சூழ்நிலையில் சோதனை முயற்சி செய்வதை தவிர்த்து, நீங்கள் எப்பொழுதும் வழக்கமாக உணவருந்தும் உணவகங்களிலேயே உணவு அருந்த செல்வது நல்லது.

* முன்பு கூறியுள்ளபடி, புதிதாக ஆரம்பிக்கப்பட்ட இடத்தில் எவ்வாறு உணவு தயாரிக்கிறார்கள், அங்கு சுத்தம் சுகாதாரம் எவ்வாறு பேணிக்காக்க படுகிறது என்பதை பற்றி உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

* அதேபோல், கூட்டமாக இருக்கும் உணவகங்களையும் தவிர்த்து விடுங்கள். கூட்டமாக இருக்கும் இடத்திற்கு செல்லும் பொழுது கொரோனா பாதிக்க இரு மடங்கு வாய்ப்புள்ளது.

* கையில் எப்பொழுதும் ஹாண்ட் சானிடைசர் வைத்துக் கொள்ளுங்கள். எப்பொழுதெல்லாம் வெளியில் உள்ள பொருட்களை தொடுகிறீர்களோ, அப்பொழுதெல்லாம், ஹாண்ட் சானிடைசரை உபயோகித்து, கிருமி நீக்கம் செய்து கொள்ளுங்கள்.
* நீங்கள் பஃபே விருந்துக்கு செல்ல நேர்ந்தால், அங்கு உள்ள உணவுகள் அனைத்தும் சரியாக மூடப்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்து கொள்ளுங்கள். பஃபேக்கள் திறந்த நிலையில் இருந்தால், துளி கூட யோசிக்காமல், அந்த இடத்தை விட்டு காலி செய்து விடுங்கள். பஃபே உணவை விட உங்கள் உடல் ஆரோக்கியம் மிக முக்கியமான ஒன்று.

* யாரேனும் ஒரு நோய் பாதித்த நபர் மூலம், கொரோனா வைரஸ் உணவில் ஊடுருவி சென்று அமர்ந்து கொள்ளும். அப்படிப்பட்ட உணவை நீங்கள் எடுக்கும் பொழுது, உங்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என்பதை நாங்கள் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை. மேலே சொன்ன காரணங்களுக்காக, தெருக்களில் விற்கப்படும் உணவுகளையும் அறவே தவிருங்கள்.

கூட்டம் கூட்டமாக வெளியில் செல்லாதீர்கள்

நாம் எல்லாரும் இந்த கொரோனா வைரஸ் எப்பொழுது முற்றிலும் ஒழிந்து ஊரடங்கு முற்றிலும் தளர்த்தப்படும் என்று காத்துக் கிடக்கிறோம். இப்பொழுது நீங்கள் ஏதாவது ஒரு பெரிய குடும்ப விழாக்களுக்கு ஏற்பாடு செய்து இருந்தால், தயவு செய்து அதனை ஒத்தி வையுங்கள். சூழ்நிலை சீராகும் வரை காத்திருந்து, இந்த கொரோனா தாக்கம் குறைந்தவுடன் நீங்கள் உங்கள் விழாக்களை தாம் தூம் என்று கொண்டாடிக் கொள்ளலாம்.

மாமிசம் சாப்பிடக்கூடாதா?

கொரோனா பரவ தொடங்கியதும், வதந்தி ஒன்றும் கூடவே பரவ தொடங்கி விட்டது. அதாவது மாமிசம் உண்பது கொரோனா வர வழிவகுக்கும் என்பது. மாமிசம் உண்பதற்கும், இந்த கிருமிக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை. நீங்கள் மேலே சொன்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதன் மூலமே உங்களுக்கு கொரோனா வராமல் தடுக்க முடியும். எனவே வீண் வதந்திகளை நம்பாமல், மாமிசம் மற்றும் கடல் உணவை நீங்கள் தாராளமாக சாப்பிடலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!