Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 16 ஜூன், 2020

பிஎஃப் தாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்... எங்கு வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம்!


epf
பிஎஃப் சந்தாதாரர்களின் கோரிக்கைகளுக்கு விரைவாகத் தீர்வு காணும் விதமாக எந்த இடத்திலும் விண்ணப்பிக்கும் வசதியை வருங்கால வைப்பு நிதி அமைப்பு தொடங்கியுள்ளது.
இந்தியாவில் கொரோனா உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஜூன் 31ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் மக்களுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் அரசு தரப்பிலிருந்து பொருளாதாரச் சலுகைகள் அறிவிக்கப்பட்டன. அதோடு, பிஎஃப் சேமிப்புப் பணத்தை உடனடியாக எடுத்துப் பயன்படுத்த மத்திய அரசு வழிவகை செய்திருந்தது. மார்ச் மாத இறுதியில் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் வெளியிட்டிருந்த அறிவிப்பில், தொழிலாளர் வைப்பு நிதி உறுப்பினர்கள் திருப்பிச் செலுத்த வேண்டிய அவசியம் இல்லாத முன்தொகையைப் பெற்றுக் கொள்ள அனுமதிப்பதாக அறிவித்தது.

பிஎஃப் தொடர்பான கோரிக்கைகளும் விண்ணப்பங்களும் அதிகரித்துள்ள நிலையில், வாடிக்கையாளர்களுக்கு ஏதுவாக எந்த இடத்திலும் பிஎஃப் பணத்தைத் திரும்பப்பெற விண்ணப்பிக்கும் வசதியை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தொடங்கியுள்ளது. இதன் மூலம் பிஎஃப் அமைப்பின் எந்தவொரு மண்டல அலுவலகத்திலும் சந்தாதாரர்களின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க அனுமதிக்கப்படுகிறது. பிஎஃப் பணம், ஓய்வூதியம், பகுதி தொகையைத் திரும்பப்பெறுதல், பணத்தை முழுமையாகத் திரும்பப் பெறுதல் மற்றும் கணக்கு மாற்றம் தொடர்பான இணையவழிக் கோரிக்கைகளுக்கு இந்தப் புதிய வசதியின் மூலம் விரைந்து தீர்வு காணப்படும் என்று வருங்கால வைப்பு நிதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கொரோனா பெருந்தொற்று காரணமாக தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பின் 135 மண்டல அலுவலகங்களின் செயல்பாடு மற்றும் அவை செயல்படும் இடத்தில் நிலவும் பாதிப்புகள் அடிப்படையில் பல்வேறு நெருக்கடிகளுக்கு ஆளாகியுள்ளது. மும்பை, தானே, ஹரியானா மற்றும் சென்னை மண்டலத்தின் பல்வேறு அலுவலகங்கள் கொரோனா பாதிப்பால் மிக மிகக் குறைந்த அளவிலான பணியாளர்களுடன் செயல்பட்டு வருகின்றன.


மத்திய அரசு சமீபத்தில் அறிவித்த சலுகையின்படி பிஎஃப் முன்பணத் தொகையைப் பெற ஏராளமானோர் விண்ணப்பித்துள்ளனர். பிஎஃப் தொகையைத் திரும்பப் பெறக்கோரி வந்துள்ள விண்ணப்பங்களை நாடு தழுவிய அளவில் பரிசீலிக்கும்போது பணிச்சுமை குறைவதோடு தற்போது செயல்பாட்டில் உள்ள அந்தந்தப் பகுதி சார்ந்த கோரிக்கைகளுக்கு மட்டும் தீர்வு காண்பதற்குப் பதிலாக பல்வேறு இடங்களில் இந்தக் கோரிக்கைகளுக்குத் தீர்வுகாண புதிய நடைமுறை வழிவகை செய்யும். மேலும் குறைவான பணிச்சுமை உள்ள வைப்புநிதி அலுவலகங்களில், கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக மனுக்கள் அதிகளவில் தேக்கமடைந்துள்ள அலுவலகங்களின் பணிச்சுமை பகிர்ந்துகொள்ளப்படும்’ என்று கூறப்பட்டுள்ளது.

பிஎஃப் அமைப்பின் எந்தவொரு அலுவலகத்திலும் எந்தப் பகுதியையும் சேர்ந்த சந்தாதாரர்களின் கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வசதி வாடிக்கையாளர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. பி எஃப் அலுவலகங்களில் 2020 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் இதுவரையில் 80,000 கோரிக்கை மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. ஒவ்வொரு வேலை நாளிலும் ரூ.270 கோடி அளவுக்கு பிஎஃப் நிதி வழங்கப்பட்டுள்ளதாகத் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக