Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 30 ஜூன், 2020

திருச்செம்பொன்பள்ளி சொர்ணபுரீசுவரர் திருக்கோயில்...

 

சோழ நாட்டு காவிரியாற்றின் தென்கரையில் அமைந்துள்ள 127 சிவத்தலங்களில் இத்தலம் நாற்பத்தி ரெண்டாவது (42) தலமாகும்...

மூலவர் :

சொர்ணபுரீசுவரர்...

உற்சவர் :

சோமாஸ்கந்தர்...

அம்மன் :

சுகந்த குந்தளாம்பிகை...

தல விருட்சம் :

வன்னி,

வில்வம்...

தீர்த்தம் :

சூரிய தீர்த்தம்...

ஆகமம் :

காரண ஆகமம்...

பழமை :

1000 வருடங்களுக்கு முன்...

தொன்நம்பிக்கை :

இந்திரன் நீராடி வழிபட்டு விருத்திராசுரனைக் கொல்ல வச்சிராயுதம் பெற்ற தலமென்பதும்,
இதனால் இத்தலத்திற்கு,இந்திரபுரி என்ற பெயருண்டு என்பதும் தொன்நம்பிக்கை,

தல வரலாறு :

பிரம்மாவின் மானச புத்திரரான தட்சன் தன் மகள் தாட்சாயிணியை இறைவன்,
சொர்ணபுரீசுவரருக்கு மணமுடித்து தருகிறார். 

தனது அகந்தையால் தனது யாகத்திற்கு சிவனை அழைக்கவில்லை. 

இதனால் தன் தந்தை தட்சனை திருத்தி நல்வழிப்படுத்த தாட்சாயிணி இத்தலத்திலிருந்து திருப்பறியலூருக்கு சென்றபோது ஆணவத்தினால் சிவனையும் - சக்தியையும் தட்சன் நிந்தித்து விடுகிறார்.

தாட்சாயிணி கோபம் கொண்டு தட்சனின் யாகம் அழிந்து போகட்டும் என்று சாபம் இடுகிறார்.அத்துடன் சிவனிடம் தட்சனைத் தண்டிக்கும்படி வேண்டுகிறார். 

சிவனும் வீரபத்திரர் மற்றும் பத்திரகாளி ஆகியோரை தோற்றுவித்து யாகத்தை அழித்து தட்சனையும் சம்காரம் செய்து விடுகிறார். 

தாட்சாயிணியும் சிவநிந்தை செய்த தட்சனின் மகள் என்ற பாவம் தீர வேண்டி இத்தலத்தில் பஞ்சாக்னி மத்தியில் கடும் தவம் புரிகிறார். 

சிவனும் தாட்சாயிணியை மன்னித்து, 
சுகந்த குந்தளாம்பிகை என்னும் திருநாமத்துடன் இத்தலத்தில் என்னருகில் இருந்து அருளாட்சி செய்
என்று அருள்பாலிக்கின்றார்...

சிவனின் சொல் கேட்காமல் பார்வதி தன் தந்தையின் யாகத்திற்கு செல்கிறார். 

இதனால் சிவன் பார்வதியை தன்னுடன் சேர்த்துக்கொள்ள மறுக்கிறார். 

எனவே முருகப்பெருமான் சிவன் வடிவில் தன் தாய்க்கு நல்ல போதனைகளை எடுத்துக்கூறினார். 

இதனாலேயே இங்குள்ள முருகன் கையில் அட்சய மாலையுடன் காட்சி தருகிறார்.

இத்தலத்தில் தான் சிவபெருமான்,
வீரபத்திரராக தோன்றுகிறார்.
இத்தல இறைவனை வழிபட்டுத்தான் இரதி மன்மதனைத் தன் கணவனாக அடைந்தது. 

இரண்டு கரங்களே உடைய சுகந்த குந்தளாம்பிகை தேவிக்கு, 

புஷ்பாளகி, 

தாட்சாயிணி, 

சுகந்தளாகி, 

சுகந்தவன நாயகி, 

மருவார் குழலி...
என்ற திருநாமங்களும் உண்டு. 

சித்திரை மாத அமாவாசையிலும் - வைகாசியிலும் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடினால் சகல பாவங்களும் விலகும்.

லட்சுமி - திருமாலைத் தன் கணவனாக அடைந்ததும் இத்தல இறைவனை வழிபட்டு தான். 

எனவே தான் இத்தலத்திற்கு, இலக்குமிபுரிஎன்று பெயர் வந்தது...

இறைவி,சுகந்த குந்தளாம்பிகை" சன்னிதி தெற்கில் உள்ளது. 

மேற்கு நோக்கிய சன்னிதியில் தல வினாயகர் - பிரகாச வினாயகர் உள்ளார்.

அம்பிகை ஆலயத்திற்கு தென் மேற்கில் சப்த கன்னிகைகள்,

சிபிக்காட்சிநாதர் எனப்படும் மான்மழுவேந்திய சிவபெருமான், 

உருத்ராட்ச மாலையும் - சக்தி ஆயுதமும் தரித்த 4 கைகளையுடைய பாலசுப்பிரமணியர்...ஆகிய ஆலயங்கள் உள்ளது.

முருகப்பெருமான் இத்தல இறைவனை வழிபட்டு தாருகனை வதைத்ததால் இத்தலத்திற்கு,கந்தபுரி என்றும் பெயர் உண்டு.

கோயில் அழகுற சோலை நடுவே அமைந்துள்ளது. கோபுரம் கிழக்கு நோக்கியது. அருகில் தீர்த்தம் உள்ளது. 

கோட்ச்செங்கட்சோழன் திருப்பணி. 
கீழே பதினாறும் - மேலே பதினாறும் இதழ்களையுடைய தாமரை போன்ற ஆவுடையில் மூலவர் இலிங்கத் திருமேனியுடன் காட்சியளிக்கிறார். 

வட்ட வடிவமான ஆவுடையார் உள்ள திருமேனி திருமாலாலும், 

சதுர வடிவமான ஆவுடையார் உள்ள திருமேனி பிரம்மாவாலும் பூஜிக்கப்பட்டதாகும்...

திருவிழா :

சித்திரை மாதம் 7ஆம் நாள் முதல்18 ஆம் நாள் முடிய 12 நாட்கள் சூரிய ஒளி சுவாமிமீது படுவதாகச் சொல்லப்படுகிறது. 

இந்நாள்களில் விடியற்காலையில் சூரிய வழிபாடு விசேஷ பூஜைகளும் - 9 நாள் பெருந்தேர் விழாவும்,
சவுரமகோற்சவம் என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக