Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 15 ஜூன், 2020

கும்பகர்ணனும் விபீணனும்!..

கும்பகர்ணனுக்கு துணையாக ஏராளமான படைகளை இராவணன் அனுப்பி வைத்தான். கும்பகர்ணன் சேனைகள் புடைசூழ வானமும், வையகமும் நடுங்க தேரில் ஏறி போருக்குச் சென்றான். 

சூலம், வேல், வில், சக்கரம் முதலிய ஆயுதங்களை சுமந்துக் கொண்டு சேனைகள் அவன் பின் தொடர்ந்துச் சென்றன. பெரிய மலை போல் தேரில் வரும் கும்பகர்ணனை, இராமர் பார்த்து இவன் யார்? என விபீஷணனிடம் கேட்டார். 

பெருமானே! இவன் காற்றைவிட விரைந்து செல்லும் கால்களையுடையவன். இவன் தான் தவறாகக் கேட்டுவிட்ட ஒரு வரத்தினால் எப்போதும் உறங்கிக் கொண்டே இருப்பவன். 

சிவபெருமான் இவனுக்கு அளித்த சூலப்படை இவனிடம் இருக்கிறது. அந்தச் சூலாயுதத்தைக் கொண்டு இவன் போரில் தேவர்களை ஓட வைத்தவன். இவனின் பெயர் கும்பகர்ணன். இராவணனுக்கு இளைவன், எனக்கு மூத்தவன்.

கும்பகர்ணன், இராவணனிடம் சீதையை கவர்ந்து வந்தது தவறு என கூறியும் அதை இராவணன் கேட்கவில்லை. இவன் சூலத்தை எடுத்தால் அனைத்தையும் அழிக்கும் ஆற்றல் உடையவன். 

விபீஷணன் இப்படி கூறியதைக் கேட்ட சுக்ரீவன், இராமரிடம், கும்பகர்ணன் பேராற்றல் உடையவன். நற்குணத்தில் சிறந்தவன். இவனை கொல்வதால் நமக்கு என்ன பயன் கிடைக்கப் போகிறது. இவனை கொல்லாமல் நம்முடன் சேர்த்துக் கொண்டால், விபீஷணன் தன் அண்ணனை இழக்க மாட்டான் என்றான். 

இராமரும் சுக்ரீவனின் யோசனையைக் கேட்டு, இதை கும்பகர்ணனிடம் சொல்வது யார்? எனக் கேட்டார். உடனே விபீஷணன், தாங்கள் அனுமதி தந்தால் நானே சென்று கும்பகர்ணனிடம் சென்று பேசுகிறேன் என்றான். இராமர் விபீஷணனிடம், விபீஷணா! நீ கும்பகர்ணனிடம் சென்று, அவன் விரும்பினால் நம்முடன் வந்து சேர்ந்துக் கொள்ளச் சொல் என்றார்.

உடனே விபீஷணன் அங்கிருந்து புறப்பட்டு வானர சேனைகளை கடந்து கும்பகர்ணன் இருக்குமிடம் சென்றான். விபீஷணன் கும்பகர்ணனின் காலில் விழுந்து வணங்கினான். 

கும்பகர்ணன் விபீஷணனை தழுவிக் கொண்டான். கும்பகர்ணன் நீ ஏன் இங்கு வந்தாய்? நீ உத்தமன், நற்குணத்தில் சிறந்தவன். நம்மில் ஒருவனாவது உயிர் பிழைத்துக் கொண்டாய் என மகிழ்ந்திருந்தேன். தம்பி! விபீஷணா! நீ இங்கு வருவதற்கான காரணம் என்ன? உன்னால் நம் குலம் அழியாத புண்ணியமும், புகழும் பெற்றது என நினைத்திருந்தேன். 

இராமன் உன்னை கைவிட மாட்டான். இராமனிடம் நீ இருக்கும் வரையில் உனக்கு இறப்பு இல்லை. அப்படி இருக்கையில் அவர்களை விட்டு நீ ஏன் இங்கு வந்தாய்? தீவினைகள் அனைத்தும் நீங்கப் பெற்று, மெய்ஞானத்தை பெற்ற விபீஷணா! தவங்களைச் செய்து ஒழுக்கம், தர்மம் இவற்றை கடைப்பிடித்துக் கொண்டிருக்கிறாய்.

பிரம்மதேவன் உனக்கு அழிவு இல்லாத ஆயுளைக் கொடுத்திருக்கிறான். தம்பி விபீஷணா! உனக்கு அரக்க குலத்தின் குணங்கள் இன்னும் போகவில்லையா? நாங்கள் போரில் மாண்டு இறந்தால், நீ உயிருடன் இருந்தால் தானே எங்களுக்கு ஈமச் சடங்குகள் செய்ய முடியும்.

நீ இல்லையென்றால் எங்களுக்கு யார் இதைச் செய்வது? விபீஷணா! அங்கே பார்! போருக்கு தயாராக இராமரும், இலட்சுமணனும் உள்ளனர். எப்படி இருந்தாலும் அவர்கள் எங்கள் உயிரை பறிக்க போகிறார்கள். 

ஆதலால் நீ சென்று இராமனிடம் சேர்ந்துக் கொள். இராமர் போரில் வென்ற பிறகு, சீதை இராமனிடம் சேர்ந்த பிறகு, அவர்களின் முன்னிலையில் இலங்கையின் ஒப்பற்ற அரசனாக வேண்டும். அதனால் இப்பொழுது நீ இராமனிடன் சென்றுவிடு என்றான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக