Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வியாழன், 9 ஜூலை, 2020

சிவபுராணம் - பாகம் 2 பகுதி 059

வாயிலார் நாயனார்...!!

பல வளங்கள் நிரம்பி இருக்கக்கூடிய நாடுதான் தொண்டைவளநாடு. அங்குள்ள சிறப்புமிக்க பழம்பெரும் ஊரான திருமயிலை (திருமயிலாப்பூர்) செல்வ செழிப்போடு நிறைந்து இருந்தது. இந்த நகரில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானுக்கு கபாலீஸ்வரர் என்றும், உமையம்மைக்கு கற்பகவல்லி என்னும் திருநாமம் உண்டு.

இவ்வூரில் வாழ்ந்து வந்த பல குடிமக்கள் மத்தியில் வேளாளர் மரபில் தோன்றியவர் வாயிலார். இவர் சிறுவயது முதலே எம்பெருமான் கபாலீஸ்வரரின் மீது அன்பும், பக்தியும் கொண்டு அவரை வழிபட்டு வந்தார். எப்போதும், எந்த வேளையிலும் எம்பெருமானின் திருநாமத்தை மனதால் எண்ணி உள்ளம் உருக பூஜை செய்து கொண்டிருந்தார்.

பரம்பொருளை எப்போதும் மறக்காமல் தியானித்தார். வாயிலார் எம்பெருமானை மறக்காமல் மனதிலேயே நினைத்து வைத்ததால் இறைவன் இருக்கும் இடமே கோவிலானது. ஆகவே தன்னுடைய மனதிற்குள்ளேயே எம்பெருமானிற்காக கோவிலை கட்டினார். தன்னுடைய மனக்கோவிலில் குடியிருக்கும் எம்பெருமானுக்கு தன்னுடைய உணர்வுகளின் மூலம் தூய விளக்கை ஏற்றினார்.

மனக்கோவிலில் எம்பெருமானை காணும்போது கிடைக்கக்கூடிய மகிழ்ச்சியை கொண்டு எம்பெருமானின் திருமேனிக்கு திருநீராட்டு செய்வதற்கான திருமஞ்சனத்தை ஆட்டினார். எம்பெருமானுக்கு படைப்பதற்கான நைவேத்தியமாக தனது அன்பு முழுவதையும் கொடுத்தார். இதய கமல மலர்களை கொண்டு எம்பெருமானை அர்ச்சனை செய்தார். இவர் சித்தத்தை சிவன்மேல் வைத்து சிவபெருமானையே எப்பொழுதும் மனதில் வைத்து தொழுதார். ஏதும் பேசாமலேயே அன்பு செய்து சிவபெருமானுடைய சேவடி நிழலை எய்தும் பேரின்ப வாழ்வு பெற்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக