Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 17 ஜூலை, 2020

மகளுக்கு தலைவர் பொறுப்பை விட்டுக் கொடுத்த ஷிவ் நாடார்!

roshini

ஹெச்.சி.எல். நிறுவனத்தின் தலைவர் பொறுப்பை தனது மகள் ரோஷினி நாடாருக்கு வழங்கியுள்ளார் ஷிவ் நாடார்.

இந்தியாவின் மிகப் பெரிய ஐடி நிறுவனங்களில் ஒன்றான ஹெச்.சி.எல். தனது இயக்குநர் குழுவின் தலைவர் பொறுப்பில் மாற்றம் செய்துள்ளது. இதுநாள் வரையில் அப்பொறுப்பில் இருந்த ஷிவ் நாடார் அப்பதவியை 38 வயதான தனது மகள் ரோஷினி நாடாருக்கு வழங்கியுள்ளார். ஜூலை 17 முதல் இப்பொறுப்பில் அமர்ந்துள்ளார் ரோஷினி நாடார். தலைவர் பொறுப்பிலிருந்து விலகியிருந்தாலும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகத் தொடருவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஷிவ் நாடார் பேசுகையில், “தற்போது கொரோனா பாதிப்பால் பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களும் பொதுமக்களும் இக்கட்டான சூழலில் இருக்கின்றனர். இதை சவாலாக ஏற்றுக்கொண்டு அடுத்தகட்டத்தை நோக்கி முன்னேறிச் செல்ல வேண்டும்” என்று கூறியவர் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு நிறுவனத்தில் மாற்றங்கள் செய்துள்ளதாகக் கூறியுள்ளார். ஹெச்.சி.எல். நிறுவனம் தனது ஏப்ரல் - ஜூன் காலாண்டு அறிக்கையையும் வெளியிட்டுள்ளது. 31.70 சதவீத உயர்வுடன் ரூ.2,925 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

ஐ.டி துறையில் ஆசியாவின் மிகச்சிறந்த 50 நிறுவனங்களில் ஹெச்.சி.எல். நிறுவனமும் ஒன்றாகும். உலகம் முழுவதும் 44 நாடுகளில் கிளைகளை கொண்டுள்ள இந்நிறுவனம், ஆண்டுக்கு 8.6 பில்லியன் டாலருக்கு மேல் வருவாய் ஈட்டுகிறது. இதன் தலைவராக இருந்த ஷிவ் நாடார் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பது கூடுதல் அம்சமாகும். ஷிவ் நாடாரின் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டத்தில், திருச்செந்தூர் அருகில் உள்ள மூலைப்பொழி என்ற சிறிய கிராமம் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தின் மிகப் பெரிய தொழிலதிபரான இவர் தொண்டு நிறுவனமும் நடத்தி வருகிறார். அதன் மூலம் கல்வி, நன்கொடை உள்ளிட்ட சமூக சேவைகளையும் செய்து வருகிறார். ரோஷினி நாடாரைப் பொறுத்தவரையில் அப்பாவுக்கு சற்றும் குறைந்தவர் அல்ல என்பது போல இளம் வயதிலேயே பல உச்சம் கண்டவர். இந்தியாவின் மிகவும் சக்திவாய்ந்த பெண்களுக்கான பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். தனியாக ஸடார்ட் அப் நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக