Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

புதன், 19 ஆகஸ்ட், 2020

கன்னி ராசி ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020

கலகலப்பும், கண்டிப்பும் கொண்ட கன்னி ராசி அன்பர்களே...!!
நடைமுறையில் ராகுவானவர் கன்னி ராசிக்கு பத்தாம் இடத்திலும், கேதுவானவர் நான்காம் இடத்திலும் இருக்கின்றனர். இனி வர இருக்கின்ற ஒன்றரை ஆண்டு காலம் கன்னி ராசிக்கு போக சுகத்திற்கு அதிபதியான ராகுவானவர் ஒன்பதாம் இடத்திலும், ஞானத்திற்கு உரியவரான கேது மூன்றாம் இடத்திலும் பெயர்ச்சி அடைய இருக்கின்றனர்.

இளைய உடன்பிறப்புகளிடம் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அனுசரித்து செல்ல வேண்டும். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் குடும்ப விவகாரங்களை பகிர்வதை குறைத்து கொள்ள வேண்டும். எதிர்பாராத சில உறவுகள் மூலம் லாபமும், சேமிப்பும் அதிகரிக்கும். இணையம் சார்ந்த தொழில் முனைவோர்களுக்கு புதிய வாய்ப்புகள் ஏற்படும். அறிமுகம் இல்லாத புதிய இடங்களுக்கு பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். தொழில் சார்ந்த முதலீடுகள் அதிகரிக்கும். நுணுக்கமான சில விஷயங்களில் அதிக ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். வேலையாட்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து மனம் மகிழ்வீர்கள். ஆன்மீக பணிகளில் தெளிவும், மன திருப்தியும் அடைவீர்கள்.
பெண்களுக்கு :

பெண்களுக்கு நண்பர்களின் மூலம் வருமானமும், செல்வாக்கும் அதிகரிப்பதற்கான சூழ்நிலைகள் சாதகமாக அமையும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த சுபச்செய்திகளின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். பூர்வீக சொத்துக்கள் தொடர்பான செயல்பாடுகளில் சற்று கவனத்துடன் செயல்பட வேண்டும். மாமன் வகை வர்க்கத்தினர் மூலம் அவ்வப்போது சில கருத்து வேறுபாடுகள் ஏற்படும். பணிபுரியும் இடங்களில் சில மாற்றமான சூழ்நிலைகள் அமையும். சுயதொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு வியாபாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் ஏற்பட்டு மறையும்.
மாணவர்களுக்கு :

கல்வி பயிலும் மாணவர்கள் பொழுதுபோக்கு சார்ந்த விஷயங்களில் கவனத்தை குறைத்து கொள்வது நன்மை அளிக்கும். புதிய தொழில்நுட்பம் சார்ந்த கருவிகள் மூலம் எதிர்பாராத சில மாற்றமான சூழ்நிலைகளும், வாழ்க்கை பற்றிய தெளிவும் ஏற்படும். சக தோழர்களிடம் தேவையற்ற கருத்துக்கள் பகிர்வதை தவிர்ப்பது நன்மையளிக்கும். ஆராய்ச்சி தொடர்பான கல்வியில் இருப்பவர்களுக்கு பிறமொழி பேசும் மக்களின் மூலம் அல்லது ஆசிரியர்களின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் உண்டாகும். எதிர்பாராத சில வெளியூர் பயணங்கள் மேற்கொள்வதற்கான சூழல்கள் அமையும்.
வியாபாரிகளுக்கு :

வியாபாரத்தில் புதிய தொழில்நுட்பம் சார்ந்த கருவிகளின் உதவிகளால் மேன்மை உண்டாகும். தொழில் சார்ந்து எதிர்பார்த்திருந்த கடன் வாய்ப்புகள் அலைச்சலுக்கு பின்பு சாதகமாக அமையும். முதலீடுகள் செய்யும் பொழுது முதலில் குறைந்த அளவு முதலீடுகள் செய்து லாபம் பார்த்த பின்பு படிப்படியாக அடுத்தடுத்த முதலீடுகள் செய்வது நன்மையளிக்கும்.
எழுத்தாளர்களுக்கு :

எழுத்து மற்றும் பத்திரிக்கை துறையில் இருப்பவர்களுக்கு கற்பனை தொடர்பான சிந்தனைகள் மேம்படும். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மற்றும் முடிவுகளை மற்றவர்களின் எதிர்ப்புகளை மீறி நேர்மையான விதத்தில் நிறைவு செய்வீர்கள். ஆன்மிகம் தொடர்பான கண்ணோட்டங்களில் புதுவிதமான பார்வைகள் உண்டாகும்.
நடன அமைப்பாளர்களுக்கு :

பாரம்பரிய நடனம் தொடர்பான சில நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். வெளிமாநில நடன கலைஞர்களின் அறிமுகத்தின் மூலம் பாரம்பரிய நடன அமைப்புகளில் சில மாற்றங்களை செய்வீர்கள்.
தகவல் தொடர்பு துறை இருப்பவர்களுக்கு :

தகவல் தொடர்பு துறையில் இருப்பவர்களுக்கு வெளியூர் தொடர்பான தொழில் வாய்ப்புகள் சாதகமாக அமையும். உயர் நுட்ப செயல்பாடுகளின்போது சற்று நிதானத்துடன் செயல்பட வேண்டும். சிக்கலான பல விஷயங்களை அனைவரும் புரிந்துகொள்ளும் விதத்தில் மாற்றி அமைப்பதற்கான வாய்ப்புகள் அமையும்.
கமிஷன் அடிப்படையிலான தொழில் புரிபவர்களுக்கு:

தடைப்பட்ட அல்லது இழந்த சில வாய்ப்புகள் மீண்டும் கிடைப்பதற்கான சூழ்நிலைகள் அமையும். செய்யும் செயல்கள் கை கொடுப்பதற்கு முன்பாக அதை வெளிப்படுத்துவதை தவிர்ப்பது திட்டமிட்ட இலக்கை அடைவதற்கு சாதகமாக அமையும்.

உத்தியோகஸ்தர்களுக்கு:

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நண்பர்களின் மூலம் புதிய வாய்ப்புகள் உண்டாகும். பணி நிமிர்த்தமாக எதிர்பார்த்திருந்த சில கடன் வாய்ப்புகள் கிடைக்க பெறுவீர்கள். திட்டமிட்ட சில காரியங்களை எதிர்பார்த்த விதத்தில் செய்து முடித்து அனைவராலும் பாராட்டப்படுவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு :

அரசு துறையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபங்கள் கிடைக்க பெறுவீர்கள். நல்லிணக்க செயற்பாடுகளின் மூலம் அனைவராலும் விரும்பப்படுவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். எந்தவொரு கருத்துக்களையும் பகிரும்போது சிந்தித்து செயல்பட வேண்டும். உடனிருப்பவர்களின் ஆலோசனைகளை காட்டிலும் அனுபவ ரீதியான முடிவுகள் நன்மதிப்பை ஏற்படுத்தி கொடுக்கும்.
கலைஞர்களுக்கு :

கலைத்துறையில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். வித்தியாசமான முயற்சிகளின் மூலம் பொருள் லாபம் அடைவீர்கள். பாரம்பரிய சொத்துக்கள் தொடர்பான சில பிரச்சனைகளுக்கு முடிவு கிடைக்க பெறுவீர்கள். சில முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் காலதாமதமாக கிடைக்கும். அதனால் பொறுமையுடன் செயல்படுவதன் மூலம் சுபிட்சம் உண்டாகும்.
வழிபாடு :

தினந்தோறும் கோமாதாவை வழிபாடு மற்றும் பராமரிப்பு பணிகள் செய்து வர தொழில் நிமிர்த்தமாக தனவரவுகள் மேம்படும்.
மேற்கூறப்பட்டுள்ள பலன்கள் யாவும் பொதுப்பலன்களே..!!
அவரவர்களின் திசாபுத்திக்கு ஏற்ப பலன்களில் மாற்றம் உண்டாகும்..!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!