Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2020

அனைவருக்கும் இ-பாஸ்: முதல்வர் பழனிசாமி அதிரடி அறிவிப்பு!

விண்ணப்பிக்கும் அனைவருக்கும் உடனடியாக இ-பாஸ் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்

தமிழகத்தை பொறுத்தவரை கொரனா ஊரடங்கு அமல்படுத்திய பின்னர் பொதுமக்கள் வெளியில் வரத் தடைவிதித்து மாநில அரசு உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து இறுதி சடங்கு, திருமணம், மருத்துவ சிகிச்சை பெறுவோர் வெளி மாவட்டங்களுக்கு செல்ல சில வழிமுறைகளை பின்பற்றி மாவட்ட ஆட்சியர்கள் மூலம் அனுமதி வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

வெளிமாவட்டங்களுக்கு செல்வோர் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்து அவசர பாஸ் பெறலாம் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி, பொதுமக்கள் ஆன்லைன் விண்ணப்பம் செய்து பாஸ் பெற்று செல்கின்றனர். ஆனால், இந்த இ-பாஸ் பெறுவதில் பல்வேறு சிக்கல்கள் நிலவி வருகிறது. சரியான காரணங்கள் இருந்தும் முறையான ஆவணங்கள் இல்லாததால் ஏராளமானோர் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.

இதனிடையே கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் வருகிற 31ஆம் தேதி வரை பொது முடக்கத்தை நீட்டித்துள்ள தமிழக அரசு, இ-பாஸ் முறையையும் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. ஆனால், பொதுமக்கள் ஏராளமானோர் இ-பாஸ் பெற முடியாமல் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

உரிய முகாந்திரங்களுடனுன், விண்ணப்பங்களுடனும் விண்ணப்பித்தாலும் ஏதேதோ பொருத்தமில்லாத காரணங்களைச் சொல்லி இ-பாஸ் மறுக்கப்படுவதாகவும், பத்துக்கும் மேற்பட்ட முறை விண்ணப்பித்தாலும் நேர்மையான முறையில் இ-பாஸ் கிடைப்பதில்லை எனவும் குற்றம் சாட்டப்படுகிறது. எனவே இந்த இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், தமிழக அரசோ இ-பாஸ் முறை தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும் அறிவித்ததுடன், இ-பாஸ் நடைமுறையை எளிமைப்படுத்த மாவட்டந்தோறும் இரு குழுக்கள் அமைத்தும் உத்தரவிட்டது.


இந்த நிலையில், விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும் வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுமக்கள் முக்கிய பணிகளுக்கு தடையின்றி தமிழ்நாடு முழுவதும் பயணிக்க (மாவட்டங்களுக்கு இடையே) 17.8.2020 முதல் ஆதார் அல்லது குடும்ப அட்டை விவரங்களுடன் தொலைபேசி / அலைபேசி எண்ணுடன் விண்ணப்பித்தால் இ-பாஸ் அனுமதி எவ்வித தாமதமும் தடையுமின்றி உடனுக்குடன், விண்ணப்பித்த அனைவருக்கும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் நலன் கருதி எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவை, அனைவரும் பொறுப்புடன் பயன்படுத்தி தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும், தவிர்க்க இயலாத பணிகளுக்கு மட்டும் இ-பாஸ் விண்ணப்பம் செய்து பெற்று பயணிக்குமாறும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!