Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2020

ஓலைச்சுவடி பத்திரிகை

குருநாதா! நாம் ஒரு ஓலைச்சுவடி பத்திரிகை ஆரம்பித்தால் என்ன? என்று கேட்டான் முட்டாள். பத்திரிகையா? அதனால் நமக்கு என்ன லாபம்? என்றார் பரமார்த்தர். தினம் தினம் நம்மைப் பற்றிப் புகழ்ந்து எழுதிக்கொள்ளலாம். நமக்குப் பிடிக்காதவர்களை விருப்பம் போல் திட்டலாம் என்றான் மூடன்.
 நம் பத்திரிகைக்குத் தினப்புளுகு என்று பெயர் வைக்கலாம் என்றார் குரு. பெயருக்குக் கீழே கெட்டிக்காரன் புளுகு - எட்டு நாள் உண்மை! என்று போடலாம் என்றான் மண்டு. அன்று முதல் பரமார்த்தரின் மடம், பத்திரிகை அலுவலகம் ஆனது. பரமார்த்தர், தினப்புளுகு நாளிதழின் ஆசிரியராக பதவி ஏற்றுக் கொண்டார். மட்டியும், மடையனும் நிருபர்களாக நியமிக்கப்பட்டனர்.
  இரவில் மட்டியும், மடையனும் வெளியே புறப்பட்டபோது அந்த நாட்டு அரசன், நகர சோதனை செய்வதற்காக மாறு வேடத்தில் புறப்பட்டான். அரசர் ஏன் மாறு வேடத்தில் ஒவ்வொரு வீட்டையும் எட்டிப்பார்க்கிறார்? என்று மட்டி கேட்டான். கொள்ளையடிக்கலாம் என்ற திட்டத்தில் இருப்பார்கள் என்றான் மடையன்.
 இந்த செய்தியை முதல் பக்கத்திலேயே பெரிதாக எழுத வேண்டும்! என்றான் மட்டி. மடத்துக்கு வந்ததும், திரட்டி வந்த செய்திகளை எழுதத்தொடங்கினார்கள். வேலியே பயிரை மேய்கிறது! பொதுச் சொத்தைக் கொள்ளையடிக்க அரசரே திட்டம்! இந்தத் தலைப்பின் கீழ், அரசரைக் தாக்கி எழுதினார்கள்.
 தேர்தலில் நம்மை எதிர்த்துப் போட்டி போட்டவர்களைப் பழி வாங்க வேண்டும் என்றான் மண்டு. மந்திரிகள் பேரிலும் ஊழல் பட்டியல் தயாரித்தனர். உடனே மட்டியும் மடையனும், அரசு பணத்தில் அட்டகாசம்! தளபதி தம்புசாமி குடித்து விட்டுக் கலாட்டா! அறிவுகெட்ட அமைச்சர் அப்புசாமி, ஆறு கட்டு சுருட்டு லஞ்சம் வாங்கினார். இதே போல் தங்களுக்குப் பிடிக்காதவர்களை எல்லாம் விருப்பம் போல் தாக்கி எழுதினார்கள்.
 நம்மைப் பற்றிக் கொஞ்சம் புகழ்ந்து எழுதலாம் என்றனர். சுருட்டு மன்னர் பரமார்த்தரின் சாதனை! ஒரே நாளில் தொடர்ந்து முப்பது சுருட்டு பிடித்தார்! என்று எழுதினான், முட்டாள். தொப்பை வளர்ப்பது எப்படி? என்ற ஆராய்ச்சிக் கட்டுரையை அறிவியல் பகுதியில் எழுதினார் பரமார்த்தர்.
 பரமார்த்தருக்குச் சிலை! மக்கள் போராட்டம்! தத்துவத் தந்தை பரமார்த்த குருவுக்கும், அவரது சீடர்களுக்கும் சிலை வைக்க வேண்டும் என்று கோரி, மக்கள் போராட்டம் நடத்தினார்கள். இந்தச் சிலையை அரண்மனைக்கு எதிரேதான் வைக்க வேண்டும் என்றும் மக்கள் கோஷமிட்டு ஊர்வலம் சென்றார்கள்!
 இதே போல் ஒவ்வொருவருக்கும் தங்களைப்பற்றிக் கண்டபடி கிறுக்கி வைத்தனர். எல்லாவற்றையும் கொண்டு போய்ப் பரமார்த்தரிடம் கொடுத்ததும், எல்லாம் நன்றாகத்தான் எழுதியிருப்பீர்கள். விடிந்ததும் விற்றுவிட்டு வாருங்கள் என்று கூறிவிட்டுப்படுத்து விட்டார்.
 பொழுது விடிந்ததும், சீடர்கள் பத்திரிகைகளை எடுத்துக்கொண்டு விற்கப்போனார்கள். தினப்புளுகு வாங்கலையோ, தினப்புளுகு! நாலு பக்கம் நாற்பது காசு! என்று கத்தினான் முட்டாள்.
 சிலர் ஓடிவந்து ஓலையில் எழுதப்பட்ட பத்திரிகையை வாங்கிப் பார்த்தனர். செய்திகளைப் படித்து விட்டு அதிர்ச்சி அடைந்தனர். செய்தி, அரசருக்கும் மற்ற அமைச்சர்களுக்கும் எட்டியது. நீதி தவறாத மன்னனைப் பற்றியும், அவனது மந்திரிகளைக் குறித்தும் கண்டபடி தவறாக எழுதியதற்காகப் பரமார்த்தர், சீடர்கள் மீது குற்றப்பத்திரிகை வாசிக்கப்பட்டது.
 பரமார்த்தரோ, இதெல்லாம் உண்மை என்று யார் சொன்னது? பத்திரிகையின் பெயர் தினப்புளுகு என்று தானே போட்டிருக்கிறோம் என்று கூறினார். அதன் பின் குருவும், சீடர்களும் விடுதலை செய்யப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக