இந்த கோயில் எங்கு உள்ளது?
சென்னை மாவட்டத்தில் உள்ள மயிலாப்பூர் என்னும் ஊரில் அருள்மிகு முண்டககண்ணியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?
சென்னையில் இருந்து சுமார் 7 கி.மீ தொலைவில் மயிலாப்பூர் அமைந்துள்ளது. மயிலாப்பூர் பகுதியின் மத்தியில் இக்கோயில் அமைந்துள்ளது. சென்னையின் அனைத்து பகுதிகளில் இருந்தும் மயிலாப்பூருக்கு பேருந்து வசதி உண்டு.
இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?
இங்கு அம்பாளின் சுயம்பு வடிவத்திற்கு நாக கிரீடம் அணிவித்து, 2 கரங்களுடன் அமர்ந்த கோலத்தில் அலங்கரிக்கின்றனர்.
காலை 6 மணியில் இருந்து 11.30 மணி வரையில் அபிஷேகம் நடக்கும்போது மட்டுமே அம்பாளை சுயம்பு வடிவில் தரிசிக்க முடியும்.
இவளுக்கு மேலே சிறிய விமானம் அமைக்கப்பட்டிருக்கிறது. அதிலேயே துவாரபாலகிகள் இருக்கின்றனர்.
வேறென்ன சிறப்பு?
பொதுவாக ஐப்பசி பௌர்ணமியில் சிவனுக்கு தான் அன்னாபிஷேகம் நடக்கும். ஆனால் இத்தலத்தில் அம்மனுக்கு அன்னாபிஷேகம் நடப்பது சிறப்பு.
அம்பிகை பார்வதியின் அம்சம் என்பதால் இவளுக்கு அன்னாபிஷேகம் செய்து வழிபடுவது விசேஷம்.
அம்பிகை சன்னதியின் முகப்பில் பிராம்மி, மகேஷ்வரி, வைஷ்ணவி, வராஹி, கௌமாரி, இந்திராணி, சாமுண்டி ஆகிய சப்த கன்னியரும் சிலை வடிவில் காட்சி தருகின்றனர்.
இவளுக்கான நைவேத்தியமான பொங்கல் தயாரிக்க, பசுஞ்சாணத்தில் செய்த வறட்டியையே பயன்படுத்துகின்றனர். இதில் கிடைக்கும் சாம்பலையே பிரசாதமாகவும் தருவது விசேஷம்.
தினமும் மாலையில் அம்பிகை தங்கத்தேரில் உலா செல்கிறாள்.
என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?
சித்ரா பௌர்ணமி, நவராத்திரி, ஆடிப்பூரம், ஆடி மாதத்தில் கூழ் ஊற்றும் விழாவும், தை மாதத்தில் பொங்கல் வைக்கும் வைபவமும் பிரசித்தி பெற்றது.
ஆடி கடைசி வெள்ளியில் 1008 மலர்க்கூடை அபிஷேகம், தை கடைசி வெள்ளியில் 108 விளக்கு பூஜை, சித்ரா பௌர்ணமியில் 1008 பால்குட அபிஷேகம் நடப்பது விசேஷம்.
எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?
திருமண தோஷம், கண்நோய், அம்மை நோய் வந்தவர்கள் அம்பாளிடம் வேண்டிக்கொள்ள அவைகள் நிவர்த்தியாவதாக நம்பிக்கை.
கல்வியில் சிறப்பிடம் பெற, அம்பிகைக்கு 23 விளக்கேற்றி வழிபடுகிறார்கள்.
இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?
பிரார்த்தனை நிறைவேறியவர்கள் அம்பிகைக்கு அபிஷேகம், அங்கபிரதட்சணம் செய்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.
இவளிடம் வேண்டுபவர்கள் வேப்பிலையை ஆடையாக அணிந்து சன்னதியை வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தும் வழக்கமும் இருக்கிறது.
மேலும் மஞ்சள், சந்தனம், குங்குமம் காப்பு மற்றும் அன்னாபிஷேகம் செய்வது விசேஷம்.
அருள்தரும் ஆலயங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக