சோமேட்டோவைப் பற்றி பெரு நகரங்கள், நகரங்களில் இருப்பவர்கள் பலரும் அறிந்திருக்கலாம். இதில் ஆர்டர் செய்து உணவும் சாப்பிட்டிருக்கலாம். இது ஆப் மூலமாக ஆன்லைனில் உணவு டெலிவரி செய்யும் ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனமாகும். சமீபத்தில் தான் இந்த நிறுவனம் பங்கு சந்தையிலும் களமிறங்கியது. ஒவ்வொரு துறையிலும் கடுமையான போட்டிகள் நிலவி வருகின்றன. ஆனால் அதனை எல்லாம் தாண்டி வெற்றி பெரும் நிறுவனங்கள் தான் இன்று வெற்றியாளர்களாய், உலகினை வலம் வருகின்றன.
அந்த வகையில் உணவு டெலிவரி வணிகத்தில் கடுமையான போட்டிகள் இல்லையென்றாலும், தற்போது புதுப் புது நிறுவனங்கள் களமிறங்கத் தொடங்கியுள்ளன.
ஸ்விக்கிக்கு கடும் போட்டி
ஒவ்வொரு நிறுவனமும் தங்களது வியாபாரத்தினை பெருக்கி வருகின்றன. அந்த வகையில் தற்போது சோமேட்டோ நிறுவனம் ஒரு மிகப்பெரிய அஸ்திரத்தினை கையில் எடுத்துள்ளது. இதன் மூலம் தனது வியாபாரத்தினை மேம்படுத்திக் கொள்ள முடியும் என சோமேட்டோ நினைக்கின்றது. இதனால் போட்டி நிறுவனமான ஸ்விக்கிக்கு பெரும் போட்டியாளராக மாறலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
என்ன திட்டம்
அதெல்லாம் சரி அப்படி என்ன திட்டம்? இதனால் என்ன பிரச்சனை? இது எப்படி ஸ்விக்கிக்கு கடும் போட்டியாக மாறும்? என்னதான் பிரச்சனை? வாருங்கள் பார்க்கலாம். ETயில் வெளியான செய்தியின் படி, சோமேட்டோ நிறுவனம் பை நவ் பே லேட்டர் திட்டத்தினை கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளது.
பெருகி வரும் வணிக போட்டிகளுக்கு மத்தியில் சோமேட்டோவின் இந்த திட்டம் நிச்சயம் அதற்கு கைகொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இன்று வெற்றியாளர்களாய் நடைபோட்டு வரும் ஈ-காமர்ஸ் நிறுவனங்களான அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்கள் கூட, இந்த திட்டத்தினால் அதிகப்படியான ஆர்டர்களை பெற்று வருகின்றன. ஆக அதன்படி பார்த்தால், சோமேட்டோவுக்கு இதன் மூலம் அதிக ஆர்டர்கள் பெருகலாம். ஏற்கனவே சோமேட்டோ நிறுவனம் பல ஆஃபர்களையும் வாரி வழங்கி வருகையில், நிச்சயம் இது அதன் வணிகத்தினை மேம்படுத்த கைகொடுக்கும் என்பதில் சந்தேகம் ஏதுமில்லை
NBFC திட்டம்
இது வாடிக்கையாளர்கள் ஆர்டர்களை அதிகப்படுத்த உதவுவதோடு, வாடிக்கையாளர்கள் நிறுவனத்தோடு நீண்டகாலத்திற்கு இருக்க உதவுகிறது. இதற்கு மேலும் கைகொடுக்கும் விதமாக சோமேட்டோ நிறுவனம் மேற்கோண்டு வங்கி அல்லாத நிதி நிறுவனத்தினையும் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இந்த NBFC நிறுவனத்தின் முதல் அடி சோமேட்டோ வாடிக்கையாளர்களை கவர்வதாக தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாத சம்பளதாரர்களுக்கு பயன்
இதற்கான அனுமதிகளை பெறும் வரையில் சோமேட்டோ மற்ற NBFC நிறுவனங்களுடன் இணைந்து செயல்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
சோமேட்டோவின் இந்த திட்டமானது மாத மாதம் சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாக மாத கடைசியில் சம்பளம் வரும் வரையில் என்ன செய்வது என தெரியாமல் தவிப்பவர்களுக்கு உதவிகரமாக இருக்கும்.
வளர்ச்சிக்கு கைகொடுக்கும்
எனினும் இது குறித்து இன்னும் சோமேட்டோ எந்த அதிகாரப்பூர்வ தகவலையும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. ஆன்லைன் ஷாப்பிங்கில் மிக ஆர்வமாக உள்ள இன்றைய இளைய தலைமுறையினருக்கும், இது மேலும் ஆர்வத்தினை தூண்டலாம். மொத்தத்தில் Zomatoவின் இந்த திட்டமானது மேலும் வளர்ச்சியினை ஊக்குவிக்க சாதகமாக அமையக் கூடும்.
இன்றைய நிலவரம் என்ன?
சோமேட்டோ நிறுவனத்தின் பங்கு விலையானது என்.எஸ்.இ-யில் சற்று அதிகரித்து, 94.45 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இன்றைய உச்ச விலை 95.40 ரூபாயாகவும், இன்றைய குறைந்தபட்ச விலையானது 93 ரூபாயாகவும் உள்ளது.
இதே பி.எஸ்.இ-ல் இதன் பங்கு விலையானது சற்று அதிகரித்து, 94.50 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இன்றைய உச்ச விலை 95.30 ரூபாயாகவும், இன்றைய குறைந்தபட்ச விலையானது 93 ரூபாயாகவும் உள்ளது.இதன் 52 வார உச்ச விலையானது 169.10 ரூபாயாகவும், இதன் 52 வார குறைந்தபட்ச விலையாக 76 ரூபாயாகவும் உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக