இந்த கோயில் எங்கு உள்ளது?
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஆக்கூர் என்னும் ஊரில் அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?
மயிலாடுதுறையிலிருந்து நாகப்பட்டினம் செல்லும் வழியில் சுமார் 16 கி.மீ தூரத்தில் ஆக்கூர் அமைந்துள்ளது. தமிழகத்தின் முக்கிய நகரங்களிலிருந்து இக்கோயிலுக்கு செல்ல பேருந்து வசதிகள் உள்ளது.
இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?
அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் திருக்கோயிலில் சுயம்பு மூர்த்தியாக மூலவர் காட்சியளிக்கிறார்.
இத்திருக்கோயிலில் இராஜகோபுரத்தை அடுத்து பலி பீடமும், நந்தியை அடுத்து கருவறையும் அமைந்துள்ளது.
இத்தலத்தின் கருவறை கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, அடிமுடிகாணா அண்ணல், பிரம்மா, கோச்செங்கட்சோழன், துர்க்கை ஆகியோர் காட்சியளிக்கின்றனர்.
கோயிலின் வெளிச்சுற்றில் விநாயகர், சரஸ்வதி, வள்ளி, தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர் ஆகியோரின் சன்னதிகள் அமைந்துள்ளன. வெளிச்சுற்றில் அமைந்துள்ள விநாயகருக்கு பொய்யா விநாயகர் என்றும் பெயர்.
வேறென்ன சிறப்பு?
சோழ மன்னனொருவன் ஆயிரம் அந்தணர்களுக்கு தினமும் உணவு அளிக்கும் போது, இறைவனே வந்து பந்தியில் அமர்ந்து விருந்து உண்ட பெருமையுடைய தலம்.
அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் திருக்கோயிலில் 60ஆம் கல்யாணம் செய்வது மிகவும் சிறப்பு.
மூலவர் சன்னதிக்கு வலப்புறம் வாள்நெடுங்கன்னி அம்மன் சன்னதி உள்ளது. அம்மன் சன்னதிக்கு முன்பாக நந்தியும், பலிபீடமும் உள்ளன.
என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?
திருவாதிரை அன்று நடராஜர் வீதி உலா வருவதே கோயிலின் மிகப்பெரிய திருவிழா ஆகும்.
சிவனுக்குரிய மாதாந்திர பிரதோஷம், சிவராத்திரி, திருக்கார்த்திகை, பௌர்ணமி போன்ற நாட்களில் சிறப்பு பூஜை செய்யப்படுகின்றது.
இத்தலத்தில் என்னென்ன பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?
காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமியில் சகஸ்ர நாம அர்ச்சனை செய்தல் மிகவும் சிறப்பானதாகும்.
திருமணமாகாதவர்கள் இத்தலத்தில் வேண்டி சுயம்வர பார்வதி ஹோமம் செய்தால் கூடிய விரைவில் திருமணம் நடைபெறும்.
குழந்தை வரம் வேண்டி பௌர்ணமி தினத்தில் வெண்தாமரை பூவால் சகஸ்ர நாம அர்ச்சனை செய்தால் குழந்தை பாக்கியம் நிச்சயம் கைகூடும்.
இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?
இத்தலத்தில் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் மூலவருக்கு அபிஷேகம் செய்து நேர்த்திக்கடனை நிறைவு செய்யலாம்.
அருள்தரும் ஆலயங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக