எலெக்ட்ரிக் இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஸ்மார்ட்ரான் (Smartron), அதன் இரண்டாம் தலைமுறை டிபைக் ஒன்-எக்ஸ் (tbike One X) எலெக்ட்ரிக் சைக்கிளை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த எலெக்ட்ரிக் சைக்கிளை நிறுவனம் குறிப்பிட்டவர்களுக்கு விற்பனைக்கு வழங்க நிறுவனம் திட்டமிட்டு இருக்கின்றது. இது குறித்த விபரத்தையும், சைக்கிளின் விலை மற்றும் அதன் சிறப்பம்சங்கள் பற்றிய முக்கிய தகவல்களையுமே இந்த பதிவில் தொகுத்து வழங்கி உள்ளோம். வாருங்கள் அதுகுறித்த தகவலைக் காணலாம்.
ஸ்மார்ட்ரான் (Smartron) நிறுவனம் அதன் டிபைக் ஒன்-எக்ஸ் (tbike OneX) இ-சைக்கிளை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஓர் இரண்டாம் தலைமுறை இ-பைக் ஆகும். பன்முக பயன்பாட்டை வழங்கும் வகையில் இந்த வாகனத்தை ஸ்மார்ட்ரான் நிறுவனம் சிறப்பாக வடிவமைத்திருக்கின்றது.
குறிப்பாக டெலிவரி மற்றும் ரைடு ஷேர் (வாடகை வாகனம்) ஆகிய பிரிவுகளில் பயன்படும் வகையில் இவ்வாகனம் உருவாக்கப்பட்டிருக்கின்றது. ஆகையால், வர்த்தக பிரிவை மையப்படுத்தி மட்டுமே இது விற்பனைக்குக் கிடைக்கும் என தெரிகின்றது. எலெக்ட்ரிக் சைக்கிளில் சிறப்பு வசதியாக டிபைக் செயலி மற்றும் டிலாக் ஆகியவை கொடுக்கப்பட்டிருக்கின்றன.
இவை இரண்டும் மிக சிறந்த தொழில்நுட்ப வசதிகளாக டிபைக் ஒன்-எக்ஸ் காட்சியளிக்கச் செய்கின்றன. செயலி வாயிலாக இ-பைக்கையும், செல்போனையும் இணைக்கும் பட்சத்தில் பல்வேறு தகவல்களை செல்போன் வாயிலாகவே பயன்பாட்டாளர்களால் பெற்றுக் கொள்ள முடியும் என கூறப்படுகின்றது. டிபைக் ஒன்-எக்ஸ் இ-சைக்கிளில் இடம் பெற்றிருக்கும் பேட்டரியின் அளவு, அது வழங்கும் ரேஞ்ஜ் திறன் உள்ளிட்ட முக்கிய தகவல்கள் பலவற்றை அறிந்துக் கொள்ள முடியும்.
இதுதவிர, நிகழ்நேர பயணம் மற்றும் எந்த பாதையை நோக்கி வாகனம் பயணித்துக் கொண்டிருக்கின்றது உள்ளிட்ட கண்கானிப்புகளையும் செய்ய முடியும். மேலும், ரிமோட் வாயிலாக இ-சைக்கிளை லாக் செய்தல் மற்றும் அன்லாக் செய்தல் போன்றவற்றையும் செய்துக்கொள்ள முடியும். இத்தகைய சிறப்புமிக்க இ-பைக்கையே நிறுவனம் இந்தியாவில் தற்போது அறிமுகம் செய்துள்ளது.
இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் சிலவற்றிலும் மின்சார மிதிவண்டியை விற்பனைக்குக் கொண்டு செல்ல தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அந்தவகையில், மிக விரைவில் இந்த ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, பூட்டான் மற்றும் மெக்ஸிகோ உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் முயற்சியிலும் நிறுவனம் களமிறங்கியிருக்கின்றது.
ஸ்மார்ட்ரான் நிறுவனம் இந்த வாகனத்தை முழுக்க முழுக்க இந்திய தயாரிப்பாக உருவாக்கியிருக்கின்றது. ஆகையால், சீனாவில் இருந்து முக்கிய பாகங்களை இறக்குமதி செய்து வாகன தயாரிப்பில் ஈடுபட்டு நிறுவனங்களை போல் தாங்கள் எந்த சிக்கலையும் சந்திக்கவில்லை என ஸ்மார்ட்ரான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
டிபைக் ஒன்-எக்ஸ் இ-சைக்கிளில் மக்னீசியம் அலாய் வீல்கள், பஞ்சரே ஆகாத டயர்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தியிருக்கின்றது. இதுதவிர, லைஃப் டைம் வாரண்டிகொண்ட ஃப்ரேமையும் நிறுவனம் பயன்படுத்தியிருக்கின்றது. இதுதவிர, ஓர் முழு சார்ஜில் 100 கி.மீட்டருக்கும் அதிகமான தூரம் பயணிக்கும் திறன் பேட்டரி பேக் மற்றும் உச்சபட்சமாக 25 கிமீ வேகத்தில் பயணிக்கும் மின் மோட்டார் உள்ளிட்டவையும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
சுவாரஷ்யமாக, பன்முக சிறப்பு வசதிகளை தாங்கியிருக்கின்ற வேலையிலும் இந்த இ-வாகனம் இலகு ரக வாகனமாக காட்சியளிக்கின்றது. அதேவேலையில் அவ்வளவு எளிதில் இந்த இ-சைக்கிள் துருப்பிடிக்காது மற்றும் நீடித்து உழைக்கும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஸ்மார்ட்ரான் டிபைக் ஒன்-எக்ஸ்-க்கு அறிமுக விலையாக ரூ. 38 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி வரியுடன் சேர்த்தே இந்த விலையில்தான் டிபைக் ஒன்-எக்ஸ் இ-வாகனம் விற்பனைக்குக் கிடைக்கும். இந்தியாவில் உள்நாட்டு தயாரிப்புகளுக்கு அண்மைக் காலங்களாக நல்ல வரவேற்புக் கிடைத்து வருகின்றது. ஆகையால், ஸ்மார்ட்ரான் நிறுவனத்தின் இந்த இரண்டாம் தலைமுறை டிபைக் ஒன்-எக்ஸ் இ-மிதிவண்டிக்கும் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என நம்பப்படுகின்றது.
இந்த வாகனத்தின் அறிமுகம் குறித்து நிறுவனத்தின் எம்டி அனூப் நிஷாந்த் கூறியதாவது, 'டிபைக் ஒன்-எக்ஸ் எதிர்காலத்திற்கான இ-பைக் ஆகும். இது மிக எளிதான சவாரி அனுபவத்தை வழங்கும். சரக்குகளை டெலிவரி செய்ய உதவியாக இருக்கும். சிறு மற்றும் குறு வணிக நிறுவனங்களுக்கும் இந்த வாகனம் அதிகம் லாபம் வழங்கக் கூடியதாக இருக்கும்' என தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக