Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 21 மே, 2019

ரத்த அழுத்தம் அறிந்ததும் அறியாததும்

Image result for ரத்த அழுத்தம் அறிந்ததும் அறியாததும்

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

எங்கள் வாட்ஸ்சாப் குழுவில் இணைந்து கொள்ள இங்கே சொடுக்கவும்..
இப்பொழுதே இணைந்துகொள்


டல் முழுவதும் ரத்தம் சீராக ஓடுவதற்கு ரத்த நாளங்களில் குறிப்பிட்ட அளவு அழுத்தம் இருக்க வேண்டும். இந்த அழுத்தம்தான் உடலிலுள்ள எல்லா பாகங்களுக்கும் ரத்தத்தை எடுத்துச் செல்லும் உந்துசக்தி. இந்த அழுத்தம் வயது, எடை, உயரம் ஆகியவற்றைப் பொறுத்து சிறிது மாறுபடலாம். இது, குறிப்பிட்ட அளவைவிடக் குறைவாகவோ, அதிகமாகவோ இருக்கும் நிலையையே, ‘ரத்த அழுத்த நோய்’ என்கிறோம். ரத்த அழுத்தத்தின் அளவீடுகள், ரத்த அழுத்தநோய்க்கான பரிசோதனைகள், சிகிச்சைகள் குறித்த தகவல்களைப் பகிர்ந்துகொள்கிறார் பொது மருத்துவர் சாண்டில்யா.



அளவுகள்

இதயம் சுருங்கும் நிலையை `சிஸ்டோலி’ என்போம். அது, ஒவ்வொரு முறை சுருங்கும்போதும் அழுத்தம் ஏற்பட்டு, மகாதமனி வழியாக எல்லா தமனிகளுக்கும் ரத்தம் பரவுவதை `சிஸ்டாலிக் அழுத்தம்’ (Systolic Pressure) என்போம். அதேபோல் இதயம் விரிவடைவது `டயஸ்டோலி’ எனப்படும். இதயத்துக்கு ரத்தம் திரும்பி வரும்போது ஏற்படும் அழுத்தம் எல்லா தமனிகளிலும் குறைவாக இருக்கும். அதை `டயஸ்டாலிக் அழுத்தம்’ (Diastolic Pressure) என்போம். 120/80 மி.மீ மெர்குரி என்பதே சரியான ரத்த அழுத்தம். இதில், 120 - சிஸ்டாலிக் அழுத்தம்; 80 - டயஸ்டாலிக் அழுத்தம்.

சீரான ரத்த அழுத்த அளவுகள்

60 வயதுக்கு உட்பட்டவர்கள், நோய் பாதிப்புகள் எதுவும் இல்லாதவர்களுக்கு 130/85 மி.மீ மெர்குரி என ரத்த அழுத்தம் இருக்க வேண்டும். 60 வயதைத் தாண்டியவர்கள் மற்றும் ஏதேனும் வாழ்வியல்நோய் பாதிப்பு இருப்பவர்களுக்கு 140/90 மி.மீ மெர்குரிவரை ரத்த அழுத்தம் இருக்கலாம். இதைவிட அதிகமானால், ‘உயர் ரத்த அழுத்தம் இருக்கிறது’ என்று பொருள். 160/90 மி.மீ என்ற அளவைத் தாண்டினால், ‘மிக உயர் ரத்த அழுத்தம்.’ 90/60 மி.மீ மெர்குரி என்ற அளவைவிடக் குறைவாக இருந்தால், ‘குறைந்த ரத்த அழுத்தம்’ உள்ளதென்று பொருள். இது போன்ற சூழலில் மருத்துவ சிகிச்சை அவசியம்.

பரிசோதனைகள்

`ஸ்பிக்மோமானோமீட்டர்’ (Sphygmomanometer) கருவியின் உதவியுடன் ரத்த அழுத்தம் கணக்கிடப்படுகிறது. ரத்த அழுத்தம் சீரற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டால், கூடுதலாக கொழுப்புச்சத்துக்கான பரிசோதனை, `யூரியா கிரியாட்டினின்’ (Urea Creatinine), யூரிக் அமிலத்தின் அளவு, ஹீமோகுளோபின், தைராய்டு பரிசோதனை மற்றும் இதயப் பரிசோதனைகள் செய்யப்படும். தேவைப்பட்டால், `எலெக்ட்ரோகார்டியோகிராம்’ (Electrocardiogram) மற்றும் எக்ஸ்-ரே, எக்கோ கார்டியோகிராம் (2டி எக்கோ) போன்றவை செய்யப்படும். சிறுநீரகப் பிரச்னைகள் இருக்கின்றனவா என்பதைக் கண்டறிய, அதற்கான மாதிரிகள் பரிசோதிக்கப்படும்.

மருத்துவர்கள் மீண்டும் மீண்டும் அளவீடு எடுப்பது ஏன்?

அடிப்படையில், உடலின் ஒவ்வோர் அசைவுக்குப் பின்னும் ரத்த அழுத்தத்தின் அளவுகள் மாறுபடும். சில நிமிடங்களுக்கு முன்னர் எடுத்த `டயஸ்டாலிக்’ அளவுகூட, அடுத்தடுத்த நேரங்களில் எடுக்கப்படும் பரிசோதனைகளின்போது மாறுபடும். இப்படி அடிக்கடி வேறுபடுவதால்தான், மருத்துவர்கள் மீண்டும் மீண்டும் பரிசோதித்து, பல அளவீடுகளைப் பெற்றுக்கொள்வார்கள். கவனித்துப் பார்த்தால், அந்த அளவீடுகள் ஒரே நாளில் எடுக்கப்பட்டவையாக இருக்காது என்பதைத் தெரிந்துகொள்ளலாம். அடுத்தடுத்த நாள்களில் எடுக்கப்பட்டதாகவோ, ஒருநாள்விட்டு மறுநாள் எடுக்கப்பட்டதாகவோதான் இருக்கும். சுய பரிசோதனை செய்பவர்கள், இவற்றையெல்லாம் நினைவில்கொண்டு, பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

உயர் ரத்த அழுத்தம் ஏற்படக் காரணங்கள்

கொழுப்புச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடுவது, அதிக உடல் எடை, மன அழுத்தம், மது மற்றும் புகைப்பழக்கம், உணவில் உப்பு அதிகமாகச் சேர்த்துக்கொள்வது, கருத்தடைக்கான மருந்துகள் அதிகம் பயன்படுத்துவது மற்றும் மரபியல் காரணமாகவும் உயர் ரத்த அழுத்தம் ஏற்படலாம்.

குறைந்த ரத்த அழுத்தத்துக்கான காரணங்கள்

உயர் ரத்த அழுத்தத்தைப்போல இதை வகைப்படுத்த முடியாது. மாதக்கணக்கில், உடல் நலிவுற்று இருப்பவர்களுக்குத்தான் இந்தப் பிரச்னை ஏற்படும். ரத்தச்சோகை, தீவிர மன அழுத்தம், இதயப் பிரச்னைகள், ஊட்டச்சத்துக் குறைபாடுகள், தைராய்டு போன்ற ஹார்மோன் குறைபாடுகள் உள்ளவர்களுக்கு ரத்த அழுத்தம் குறைவாகவே இருக்கும். 90/60 மி.மீ மெர்குரி என்ற அளவுவரை, ஹார்மோன் மாற்றங்கள் மூலம் உடல் தன்னைத் தானே சீரமைத்துக்கொள்ளும். அதற்கும் கீழே சென்றால், உடனடி சிகிச்சை அவசியம்.

ரத்த அழுத்தம் அதிகரிப்பதற்கான அறிகுறிகள்

தலைச்சுற்றல், பார்வை மங்குதல், மயக்கநிலை, தன்னிலை அறியாதநிலைக்குத் தள்ளப்படுவது, அதிக வியர்வை வெளியேறுவது, பின் கழுத்தில் வலி ஏற்படுவது, இதயத்துடிப்பு அதிகரிப்பது, அடிக்கடி சிறுநீர் வருவது போன்றவை ரத்த அழுத்தம் அதிகரிப்பதற்கான அறிகுறிகளாக இருக்கலாம்.

ரத்த அழுத்தம் அதிகரிப்பதால் ஏற்படும் பிரச்னைகள்

ரத்த அழுத்தம் அதிகமானால், இதயத்துடிப்பு சீரற்றுப் போகலாம். ரத்த நாளங்களில் பிரச்னை ஏற்பட்டு, உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் முறையாக ரத்தம் கிடைக்காமல் போகும். இதனால் பக்கவாதம், மூளையில் ரத்தக்கசிவு அல்லது ரத்தக்கட்டு போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். நுரையீரலின் செயல்திறன் பாதிக்கப்படலாம். ரத்த அழுத்தம் அதிகமானால், ரத்தக்குழாய் வெடிக்க வாய்ப்பிருக்கிறது. மேலும், மாரடைப்பு, இதயம் செயலிழப்பது (Cardiac Failure), சீரற்ற இதயத்துடிப்பு போன்ற பிரச்னைகளும் ஏற்படலாம். முக்கியமாக, சிறுநீரக நோய்கள் ஏற்படலாம். எனவே, ரத்த அழுத்தம் அதிகரிப்பதுபோலத் தெரிந்தால், உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவும்.

ரத்த அழுத்தம் அதிகரித்தால் என்ன செய்ய வேண்டும்?


ஒரு தடவை ரத்த அழுத்தத்தைப் பரிசோதித்துப் பார்த்துவிட்டு, அதைக்கொண்டு ‘உயர் ரத்த அழுத்தம் இருக்கிறது’ என முடிவுசெய்துவிடக் கூடாது. குறைந்தபட்சம், வாரத்தில் மூன்று நாள்களாவது பரிசோதனை செய்ய வேண்டும். அப்போதும் அளவீடுகளில் தொடர்ச்சியாக அதிகமாக வந்தால் மட்டும் அதை உயர் ரத்த அழுத்தமாக எடுத்துக்கொள்ளலாம்.

உயர் ரத்த அழுத்தம் தடுக்க, தவிர்க்க...

புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் சாப்பிட வேண்டும். உணவில், கொழுப்பு மற்றும் உப்பின் அளவைக் குறைத்துக்கொள்ள வேண்டும். கொலஸ்ட்ரால் மற்றும் டிரைகிளிசரைடு உள்ள உணவுகளான சர்க்கரை, பிரெட் போன்றவற்றைத் தவிர்ப்பதுடன், உடல் எடையையும் குறைக்க வேண்டும். மன அழுத்தமும் பதற்றமும் குறைக்கப்பட வேண்டும். தூக்க நேரத்தை ஒழுங்குபடுத்திக்கொள்ள வேண்டும். மது மற்றும் புகைப் பழக்கங்கள் கைவிடப்பட வேண்டும்.

தினமும் 45 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். நீச்சல், விளையாட்டு என உடலுழைப்பு தரும் செயல்களில் ஈடுபட வேண்டும். முட்டைப் பிரியர்கள், வெள்ளைக்கரு மட்டும் சாப்பிடலாம். மட்டன், மாட்டிறைச்சி போன்ற அதிகக் கொழுப்புச்சத்துள்ள அசைவ உணவுகளைத் தவிர்க்க வேண்டும். ஏழு மணி நேரமாவது தூக்கம் இருக்க வேண்டும். அதிகபட்சம் இரவு 10 மணிக்கெல்லாம் தூங்கிவிட வேண்டும். தொற்றுநோய்கள் அதிகரிக்காமலிருக்க, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

சிறுநீரக பாதிப்புகள்

ஒருவருக்கு உயர் ரத்த அழுத்தம் தொடர்ந்து ஏற்பட்டால், ரத்தம் ஆங்காங்கே உறைய வாய்ப்பிருக்கிறது. அப்படி ரத்தம் உறைவதால் உடல் இயக்கம் பாதிப்புக்குள்ளாகி, சிறுநீரகச் செயலிழப்பு ஏற்படலாம். எனவே, உயர் ரத்த அழுத்த பாதிப்பு ஏற்பட்டால், முதலில் சிறுநீரகங்களைப் பரிசோதிக்க வேண்டும்.

பார்வை பறிபோகலாம்!

உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டால், உடலுக்குச் செல்லும் அனைத்து ரத்த நாளங்களிலும் பாதிப்பு ஏற்படும். மூளை மற்றும் கண்களுக்குச் செல்லும் ரத்த நாளங்களில் சிக்கல் ஏற்பட்டால், பக்கவாதம் ஏற்பட்டு, ‘ரெட்டினா’ எனப்படும் விழித்திரையில் பாதிப்பு ஏற்படவும், பார்வை பறிபோகவும் வாய்ப்பிருக்கிறது.

உயர் ரத்த அழுத்தமும் மனநலமும்

மனநலத்துக்கும், ரத்த அழுத்தத்தில் ஏற்படும் மாற்றங்களுக்கும் நிறைய தொடர்பிருக்கிறது. ஒருவர் அதிகம் பதற்றமடையும்போதும், மன அழுத்தத்துக்கு உள்ளாகும்போதும், கவலையோடு இருக்கும்போதும் ரத்த அழுத்தத்தில் மாற்றங்கள் ஏற்படும். உடல் சார்ந்த பிரச்னைகள் எதுவும் இல்லாதவர்களுக்கு, இப்படியான சூழல் காரணமாக மட்டுமே ரத்த அழுத்தம் அதிகரிக்கும். சூழல் சரியாகும்போது, தானாகவே பிரச்னை சரியாகிவிடும். ஆனாலும், தொடர்ச்சியாக நீண்ட நாள்கள் மன அழுத்தத்தில் இருந்தால், ரத்த அழுத்தம் தொடர் பிரச்னையாகிவிடும். ஏற்கெனவே ரத்த அழுத்தம் சார்ந்த பிரச்னை இருப்பவர்கள், மன அழுத்தத்தைத் தவிர்ப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

ரத்த அழுத்தம் அதிகமானால் என்ன செய்ய வேண்டும்?

ரத்த அழுத்தம் அதிகரித்தால், தலைச்சுற்றல், தன்னிலை மறப்பது, வியர்த்துக்கொட்டுதல், படபடப்பு அதிகமாவது போன்ற அறிகுறிகள் ஏற்படும். ரத்த அழுத்தம் சீரற்று இருப்பதை உடலில் ஏற்படும் இப்படியான மாற்றங்களின் வழியாக உணர முடியும். இதை உணர்ந்தவுடன் ஓய்வெடுக்க வேண்டும். மனதை ஒருநிலைப்படுத்தவும் முயல வேண்டும். அமைதியான சூழலை உருவாக்கிக்கொண்டால், ரத்த அழுத்தம் சீராகிவிடும். பொதுவாக, ரத்த அழுத்தப் பிரச்னை இருப்பவர்களுக்கு தினமும் மாத்திரைகள் தரப்படுவது இயல்பு. எந்தச் சூழலிலும் அவற்றைத் தவிர்க்கக் கூடாது.

ரத்த அழுத்தம் எதனால் குறைகிறது?

குறைவான ரத்த அழுத்தம் என்பது ஒருவகை தொடர் பாதிப்பு. ரத்த அழுத்தம் குறையத் தொடங்கியதன் அறிகுறிகளாக வியர்த்துக்கொட்டுதல், தலைச்சுற்றல், முகம் வீங்குவது போன்றவை ஏற்படும்.

மாத்திரைகள்

ரத்த அழுத்தப் பிரச்னை இருந்தால், அளவைப் பொறுத்து `ஆல்பா பிளாக்கர்ஸ்’ (Alpha Blockers), `பீட்டா பிளாக்கர்ஸ்’ (Beta Blockers), ‘ACE’ மற்றும் ‘ARB Inhibitors’, ‘கால்சியம் சேனல் பிளாக்கர்ஸ்’ (Calcium Channel Blockers), `டையூரிடிக்ஸ்’ (Diuretics), `ஆங்ஸியோலைடிக்’ (Anxiolytic) போன்ற மாத்திரைகளை தேவைக்கேற்ப மருத்துவர்கள் வழங்குவார்கள். நோயாளியின் உடல்நிலையைப் பொறுத்து எந்த மாத்திரை அளிப்பது, எந்த டோசேஜில் அளிப்பது என்பது வேறுபடும். நோயாளிகள் எந்தச் சூழலிலும் சுய மருத்துவம் செய்துகொள்ளக் கூடாது.

கர்ப்பிணிகளும் ரத்த அழுத்தமும்

கர்ப்பிணிகளுக்கு, உயர் ரத்த அழுத்தம் இருப்பது தெரியவந்தால், வாரம் ஒருமுறை அவர்கள் தொடர் மருத்துவக் கண்காணிப்புக்கு உட்படவேண்டியது அவசியம். சில கர்ப்பிணிகளுக்கு, கர்ப்பகாலத்தில் ரத்த அழுத்தம் குறையும். அவர்கள் உணவில் உப்பு அதிகமாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும். ரத்த அழுத்தத்தைச் சரியாக கவனிக்காவிட்டால், ஆறு அல்லது ஏழாவது மாத கர்ப்பகாலத்தில் `எக்லாம்ப்சியா’ (Eclampsia) பாதிப்பு ஏற்படலாம். இதற்கு முன்பே, `ப்ரீ-எக்லாம்ப்டிக் டாக்ஸிமியா’ (Pre-Eclamptic Toxemia) பாதிப்பு ஏற்பட்டிருக்கும். இப்படியான பாதிப்புகள், சில நேரங்களில் கர்ப்பிணிகளுக்கு வலிப்பை ஏற்படுத்தக்கூடும். தாய்-சேய் உடல்நலனுக்கு இது ஆபத்தானது என்பதால், கவனமாகச் செயல்பட வேண்டும்.

ஹார்மோன்களுக்கும் தொடர்புண்டு

தைராய்டு, அட்ரீனல், பிட்யூட்டரி ஹார்மோன்களுக்கும், ரத்த அழுத்த அளவுகளின் மாற்றங்களுக்கும் தொடர்பிருக்கிறது. பெண்கள் என்றால் ஈஸ்ட்ரோஜென், புரொஜெஸ்ட்ரோன் ஹார்மோன்களும் சேர்ந்து ரத்த அழுத்தத்தைத் தீர்மானிக்கும். மற்ற காரணிகளைவிட, சூழல் காரணமாக ஏற்படும் ரத்த அழுத்த அளவின் மாற்றங்கள், ஹார்மோன் சமச்சீரின்மை பிரச்னையை எளிதில் ஏற்படுத்திவிடும். ரத்த அழுத்த அளவு மாறுவதால், குறைவாகச் சுரக்கும் ஹார்மோனை சமநிலைப்படுத்த, மற்றொரு ஹார்மோன் அதிகமாகச் சுரக்கத் தொடங்கிவிடும். மருந்து, மாத்திரைகள் இல்லாமலேயே, குறிப்பிட்ட நிலைவரை உடல் இப்படி தன்னைத் தானே சரிசெய்துகொள்ளும்.

ப்ரீ ஹைப்பர்டென்ஷன்

ரத்த அழுத்தத்தில் மாற்றம் ஏற்படுவதற்கு முந்தைய நிலை இது. ஆரோக்கியமான உடல்நிலை மாறி, சிறிது சிறிதாக அறிகுறிகள் தெரியத் தொடங்கும். உதாரணமாக, உடல் எடை அதிகரித்துக்கொண்டே போவது, பி.எம்.ஐ அளவு 28-ஐத் தாண்டுவது, தலைச்சுற்றல், அதிக வியர்வை, அடிக்கடி சிறுநீர் போவது போன்ற அறிகுறிகள் ஆரம்பமாகும்.

நம்பிக்கைகளும் நிஜங்களும்

குறைந்த ரத்த அழுத்த பாதிப்பு, ஒரு நாளில் ஏற்படுவதில்லை. மாதக்கணக்கில் சிக்கல் இருந்து, தொடர்ச்சியான உடல்நலக்குறைவால் மட்டுமே இந்தப் பிரச்னை ஏற்படும். அதேபோல, ரத்த அழுத்தம் குறைந்திருந்தால், இனிப்பு சாப்பிட வேண்டும் என்று கூறுவது தவறு. சர்க்கரைச்சத்து குறைபவர்களுக்குத்தான் இந்தப் பரிந்துரை பொருந்தும்.

உடலில் எந்த நோய் பாதிப்பு வந்தாலும், அவர்களுக்கு ரத்த அழுத்தத்தில் மாற்றம் ஏற்படும் என்பதால்தான் மருத்துவர்கள் முதலில் அதைப் பரிசோதிக்கிறார்கள். உடல் சார்ந்த பிரச்னைகளை முதல்நிலையிலேயே சரிசெய்துவிட்டால், பிரச்னையைத் தவிர்த்துவிடலாம்.

ரத்த அழுத்தம் காரணமாக கல்லீரல் செயலிழக்கும் என்பது தவறான நம்பிக்கை. கல்லீரல் செயலிழந்தவர்களுக்கு, அதனால் ரத்த அழுத்தப் பிரச்னை ஏற்படலாம் என்பதே சரி.

ரத்த அழுத்தப் பிரச்னை இருந்தால், சிறுநீரகக் கோளாறுகள் ஏற்படும். இது குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை அனைவருக்கும் ஏற்படலாம். சர்க்கரைநோய் இருப்பவர்களுக்கு, ரத்த அழுத்த பாதிப்பு வர இரண்டு மடங்கு வாய்ப்பிருக்கிறது. ஆனால், ரத்த அழுத்தம் காரணமாக யாருக்கும் சர்க்கரைநோய் ஏற்படாது.

பொதுவாகவே ஒருவர் பதற்றமாகும்போது, ரத்த அழுத்தத்தில் வேறுபாடு தெரியத் தொடங்கும். சூழல் காரணமாக இப்படி ரத்த அழுத்தம் மாறுபடுவதில் பிரச்னையில்லை. மன அழுத்தம், பதற்றத்தால் அதிகரிக்கும் இவ்வகை ரத்த அழுத்தம், சில நிமிடங்களுக்கானதாக மட்டுமே இருக்கும். பதற்றத்தைக் குறைத்துக்கொண்டால், ரத்த அழுத்தம் தானாகவே சீராகிவிடும். தொடர்ச்சியாக ரத்த அழுத்த அளவு சீரற்று இருந்தால்தான் பிரச்னை. மருத்துவரின் பரிந்துரையின்பேரில், தொடர்ச்சியாக தினமும் மாத்திரை உட்கொள்ள வேண்டும்.

உயர் ரத்த அழுத்த பாதிப்பு இருப்பவர்கள், வாழ்நாள் முழுவதும் மாத்திரை உட்கொள்ளவேண்டியிருக்கலாம். ஆரோக்கியமான வாழ்வியல்முறைகளைச் சரியாகப் பின்பற்றி, குறைந்தபட்சம் ஒரு வருடத்துக்கு ரத்த அழுத்த அளவுகளை சீராகப் பின்பற்றினால், மருத்துவர்கள் அவர்களுக்கான மருந்து அளவைக் குறைக்கக்கூடும். டோசேஜ் அளவு குறைந்துகொண்டே இருந்தால், ஒரு கட்டத்துக்கு மேல் மருத்துவர்கள் மாத்திரைகளைத் தவிர்க்கவும் சொல்லக்கூடும்.

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு...

ரத்த அழுத்தம் தொடர்பான பிரச்னை உள்ளவர்கள், மனநலனில் அக்கறை செலுத்த வேண்டும். முக்கியமாக, தங்களை எப்படி அமைதிப்படுத்த முடியும் என்பதை அறிந்துவைத்திருக்க வேண்டும். தொடர்ந்து ஏதேனும் ஒரு சூழல் பதற்றத்தையோ, கவலையையோ அதிகப்படுத்தினால், அதிலிருந்து முழுவதுமாக விடுபட வேண்டும். ஊட்டச்சத்துமிக்க உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும். கஃபைன் அதிகமுள்ள டீ, காபி போன்றவற்றைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும். அதிக நேரம் வேலை செய்பவர்கள் அதைத் தவிர்ப்பது நல்லது.

ஷிஃப்ட் முறையில் அலுவலகம் செல்வதைத் தவிர்க்கலாம். அன்றாடம் தூக்கம், விழிப்பு, உணவு, ஓய்வு, விளையாட்டு போன்றவற்றை நேர அட்டவணை போட்டு பின்பற்றுவது நல்லது. விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி வகைகளில் கடினமானவற்றைத் தவிர்க்கலாம். உதாரணமாக, புஷ்-அப் பயிற்சி செய்வது, குத்துச்சண்டையில் ஈடுபடுவது, வேகமாக ஓடுவது, டைவிங் மேற்கொள்வது போன்றவை கூடாது. உணவு முறையை வகைப்படுத்திக்கொள்வதன் மூலம், உடல் எடையைக் கட்டுக்குள்வைத்திருக்க வேண்டும். எந்தச் சூழலிலும், மாத்திரையின் அளவை மருத்துவர் பரிந்துரையின்றி மாற்றக் கூடாது.

வீட்டிலேயே ரத்த அழுத்தம் பரிசோதிக்கலாமா?

வீட்டிலேயே இதற்கான கருவிகளின் துணையுடன் ரத்த அழுத்தத்தைப் பரிசோதித்துக்கொள்ளலாம். நேரம் மற்றும் காலத்தைப் பொறுத்து ரத்த ஓட்டத்தின் வீரியமும் அழுத்தமும் மாறுபடும் என்பதால், ஒரு நாளில் ஒரு முறை ரத்த அளவைப் பரிசோதிப்பது நல்லது. உடலில் ரத்த அழுத்தம் காலையில் குறைவாக இருக்கும். மாலையில் அதிகமாக இருக்கும். தூங்கும் நேரம், நடக்கும் நேரம், படிக்கட்டுகள் ஏறும் நேரம் என ஒவ்வொரு செயலையும் பொறுத்து வித்தியாசப்படும். எனவே, தினமும் சரியாக ஒரே நேரத்தில் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அதாவது, இன்று காலை 10 மணிக்கு ரத்த அளவைப் பரிசோதித்தால், நாளையும் அதே நேரத்தில் பரிசோதிக்க வேண்டும். அளவு எதுவாக இருந்தாலும், வீட்டிலேயே சுய மருத்துவம் செய்துகொள்ளக் கூடாது. தொடர்ச்சியாக ஐந்து நாள்கள் ரத்த அழுத்தத்தின் அளவு அதிகமாக இருந்தால், மருத்துவ ஆலோசனை கட்டாயம்.

உப்பு தப்பு!

உணவில் நல்லெண்ணெய், கடலை எண்ணெயை மட்டும் சேர்த்துக்கொள்ளுங்கள். சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் வேண்டவே வேண்டாம். நாட்டுச் செக்கு எண்ணெய் கிடைத்தால் அதைப் பயன்படுத்தலாம்.உணவில் அதிகம் உப்பு சேர்த்துக்கொள்ளக் கூடாது. குறிப்பாக ஊறுகாய், கருவாடு போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். அதேபோல, பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களையும் தவிர்க்கவும். சமைத்த உணவை வைத்திருந்து மறுநாள் உபயோகப்படுத்தக் கூடாது. இனிப்பு உணவுகளில் கொலஸ்ட்ரால் மற்றும் கலோரி அளவு அதிகமாக இருக்கும். அதனால் அவற்றைத் தவிர்க்கவும்.

பொட்டாசியம், மக்னீசியம், நார்ச்சத்து மிகுந்த, சோடியம் குறைவாக இருக்கும் பழங்கள், காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள். குறிப்பாக ஆப்பிள், வாழைப்பழம், புரொகோலி, கேரட், பேரீச்சம்பழம், அன்னாசி, ஆரஞ்சு போன்றவற்றை அடிக்கடி சாப்பிடுங்கள். பழங்களைச் சாறு பிழிந்து குடிக்கும்போது, அவற்றிலிருக்கும் நார்ச்சத்துகள் நீக்கப்பட்டுவிடும். அதனால் பழங்களை அப்படியே சாப்பிடுவது நல்லது.

உடற்பயிற்சிகளும் உதவும்!

* டென்னிஸ், கூடைப்பந்து போன்ற ஏரோபிக் விளையாட்டுகளை தினமும் விளையாடுவது இதயத்தை பலப்படுத்த உதவும். ஏரோபிக் பயிற்சியின்போது சிலருக்கு ரத்த அழுத்தம் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. இது தற்காலிகமானது என்பதால், பயப்படத் தேவையில்லை.

* அடிவயிற்றுப் பகுதிக்கு அதிக அழுத்தம் கொடுக்கும் பயிற்சிகளை தினமும் செய்தால், இதயச் செயல்பாடுகள் சீராகும்.

* ரத்த அழுத்தம் உயர்ந்தால், தோள்பட்டை தொடர்பான சிக்கல்கள் ஏற்பட வாய்ப்ப்பிருக்கிறது. எனவே, தினமும் தோள்பட்டை மற்றும் கழுத்துப் பகுதிக்கான பயிற்சிகளைச் செய்யவேண்டியது அவசியம்.

* தினமும் 30 நிமிடங்கள் என்ற விகிதத்தில் வாரம் ஐந்து நாள்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வது நல்லது. கூடவே மூச்சுப்பயிற்சி, ஜாகிங், சைக்கிளிங், ட்ரெட்மில் பயிற்சிகளையும் செய்துவரலாம்.

* எடை தூக்குதல் பயிற்சி, `எக்சர்சைஸ் பேண்ட்ஸ்’ (Exercise Bands) மற்றும் `தேரா பேண்ட்ஸ்’ (Thera Band) உதவியுடன் செய்யும் ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள், `அப்டாமினல் க்ரன்ச்சஸ்’ (Abdominal Crunches) போன்ற உடல் வலிமைக்கான பயிற்சிகளை தினமும் செய்வது நல்லது. இவை, உடலிலுள்ள கொழுப்பைக் குறைத்து, தசைகளை உறுதியாக்கும். உடலின் வளர்சிதை மாற்றம் சீராகும். இதயத்தின் செயல்பாடுகள் சீராகி, ரத்த அழுத்த அளவுகள் கட்டுக்குள் இருக்கும்.

* இதுநாள்வரை முறையாக உடற்பயிற்சி செய்யாதவர்களும், புதிதாக உடற்பயிற்சி செய்பவர்களும் முதலில் சில தினங்கள் 10 முதல் 15 நிமிடங்கள் பயிற்சி செய்ய வேண்டும். அதன் பிறகு பயிற்சி செய்யும் நேரம் மற்றும் வேகத்தை, கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கலாம்.

* ஒரு வாரத்தில் குறைந்தபட்சம் இரண்டரை மணி நேரமாவது இதயத்தை பலப்படுத்தும் பயிற்சிகளைச் செய்ய வேண்டும்.

* உடற்பயிற்சி செய்யும்போது உடலில் ஏதேனும் அசௌகர்யம் ஏற்பட்டால், பயிற்சியை நிறுத்திவிட்டு ஓய்வு எடுத்துக்கொள்வது நல்லது. குறிப்பாக மயக்கம், தலைச்சுற்றல், அதிக வியர்வை ஏற்பட்டால் உடனடி ஓய்வு அவசியம்.

* நெஞ்சுவலி, தோள்பட்டையில் வலி ஏற்பட்டால் அடுத்தடுத்த நாள்களில், அந்தப் பயிற்சிகளைத் தவிர்க்க வேண்டும்.

* வெளியிடங்களைவிட வீட்டிலேயே உடற்பயிற்சிகள் செய்வது நல்லது. வெளியிடங்களுக்குச் சென்று பயிற்சி செய்பவர்கள், வெயில் அல்லது குளிர் அதிகமுள்ள நேரங்களில் பயிற்சி செய்ய வேண்டாம்.

குழந்தைகளும் பாதிக்கப்படலாம்!

ரத்த அழுத்தம் அதிகரிக்கும்போது ரத்தக்குழாய்கள் பாதிக்கப்பட்டு சிறுநீரகத்தின் செயல்பாடுகளில் சிக்கல் ஏற்படும். ரத்த அழுத்தப் பிரச்னை இருந்தால், சிறுநீரகக் குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என்பதன் பின்னணி இதுதான். குழந்தைப் பருவத்திலேயே உடல் எடை அதிகரிப்பது, துரித உணவுகள் உண்பது, மன அழுத்தம், குறைந்த உடலுழைப்பு போன்ற காரணங்களால் உயர் ரத்த அழுத்தப் பிரச்னைகள் ஏற்படுகின்றன. எனவே, நான்கு வயதிலேயே குழந்தைகளை ரத்த அழுத்தப் பரிசோதனைக்கு உட்படுத்துவது நல்லது.

ஒருவேளை பிரச்னை இருப்பது உறுதிசெய்யப்பட்டால், மாதம் ஒரு முறை குழந்தைக்கு ரத்த அழுத்தப் பரிசோதனை செய்ய வேண்டும். அத்துடன் அவர்களுக்கு, முறையாக மாத்திரைகள் வழங்க வேண்டும். ரத்த அழுத்தப் பிரச்னை இல்லாத குழந்தைகளையும் வருடத்துக்கு இரு முறை ரத்த அழுத்தப் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்.
  என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.


5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக