Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 23 மே, 2019

கண்ணப்ப நாயனார்

Image result for கண்ணப்ப நாயனார் 

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

எங்கள் வாட்ஸ்சாப் குழுவில் இணைந்து கொள்ள இங்கே சொடுக்கவும்..
இப்பொழுதே இணைந்துகொள்


கண்ணப்ப நாயனார் என்பவர் அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராவார். திண்ணன் என்ற இயற்பெயர் கொண்ட இவர், வேடர் குலத்தில் பிறந்தவர். நாணன், காடன் என்ற நண்பர்களோடு வேட்டையாட சென்றபோது, காளத்தி மலையில் குடுமித் தேவர் என்ற சிவலிங்கத்தினை கண்டார். அந்நாள் முதல் வாயில் நீர்சுமந்து வந்து அபிசேகம் செய்தும், தலையில் சொருகி வந்த மலர், இலைகளால் அர்சனை செய்தும், பக்குவப்பட்ட பன்றி இறைச்சியை படைத்தும் வந்தார். இதைக்கண்டு ஆகமவிதிப்படி குடுமித்தேவரை வணங்கும் சிவ கோசரியார் எனும் பிராமணர் மனம் வருந்தி இறைவனிடம் முறையிட்டார். கண்ணப்பரின் அன்பினை சிவகோசரியாருக்கு உணர்த்த திண்ணார் வரும் வேளையில் சிவலிங்கத்தி்ன் வலக்கண்ணில் குருதி வருமாறு செய்தார் சிவபெருமான். அப்படி குருதி வருவதைக் கண்ட திண்ணனார், பச்சிலை இட்டு மருத்துவம் பார்த்தார். அதன்பொழுதும் அடங்காத குருதியினை நிறுத்த, தன் கண்களில் ஒன்றினை அம்பினால் அகழ்ந்து இலிங்கத்தின் கண்ணிருக்கும் இடத்தில் இட்டார். இலிங்கத்தின் வலக்கண்ணில் வரும் குருதி நின்று, இடக்கண்ணில் குருதி வழியத் தொடங்கியது, திண்ணனார் தனது இடக்கண்ணையும் அகழ்ந்தெடுக்க திட்டமிட்டு, லிங்கத்தின் இடக்கண் இருக்கும் இடத்தினை தன்காலொன்றால் அடையாளம் செய்தார். பின் இடக்கண்ணை அகழ்ந்தெடுக்க எத்தனித்த பொழுது சிவபெருமான் நில்லு கண்ணப்ப என மும்முறை கூறி தடுத்தருளினார்.
கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பர் என்று சுந்தரமூர்த்தி நாயானாரும், நாளாறில் கண்ணிடந்து அப்ப வல்லேன் அல்லன் என பட்டினத்தாரும் கண்ணப்பரை குறிப்பிடுகின்றனர். இது தான் திண்ணன் கண்ணப்ப நாயனாராக மாறிய கதை ஆகும்.
கண்ணப்ப நாயனாரின் ஆரம்ப கால வாழ்க்கை:-
பொதப்பி நாட்டிலுள்ள ஓர் ஊர் உடுப்பூர். இவ்வூரில் வேடுவ சாதியினர் வாழ்வர். இவர்களுள் அதிபதியாக நாகனார் என்பவர் இருந்தார். நாகனாரின் மனைவியார் தத்தையார். இவ்விருவரும் முருகப் பெருமானைக் கும்பிட்டு ஓர் திண்ணிய (உறுதியான உடல் உடைய) ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தனர். அக்குழந்தைக்குத் திண்ணனார் என்ற நாமஞ் சூட்டிச் சீராட்டிப் பாராட்டி வளர்த்தனர். திண்ணனார் வளர்பிறை போல் வளர்ந்து பதினாறு வயதுப் பருவத்தை அடைந்தார். அவ்வேளை நாகனாரும் முதுமையுற்று முன்புப் போல் வேட்டைத் தொழிலாற்றும் வலிமையற்றவரானார். ஆதலால் தன் மைந்தனுக்கு உடைத்தோலும் சுரிகையும் அளித்து வேடுவ குல முதலியாக்கினார்.
திண்ணனார் என்ற கண்ணப்ப நாயனாரின் முன்னைத் தவத்தின் பயன்:-
குலமுதலியாகிய திண்ணனார் வேட்டைத் தொழில் தாழ்த்தியமையால் காட்டிற் பெருகிய கொடிய மிருகங்களை அழித்தற் பொருட்டு "கன்னி வேட்டை"க்குச் செல்ல ஆயத்தமானார். அவருடன் வேட்டுவ மறவரெல்லாம் திரண்டனர். கடி நாய்கள் முன்னே பாய்ந்து சென்றன. வேட்டுவரோடி வேட்டைக் காட்டை வளைத்து உட்புகுந்து பல்வேறு ஓசைகளை எழுப்பி வேட்டையாடலாயினர். கரடி, புலி, சிங்கம் ஆகியன தாளறுவனவும், தலைதுணிவனவும், குடர்சரிவனவுமாயின. அவ்வேளையில் கடியதோர் பன்றி வேட்டைக் காட்டினின்றும் வெளியேறி ஓடலாயிற்று. அதனைக் கண்ணுற்ற திண்ணனார் தன் அடி வழியே முடுக்கிய கடுவிசையில் ஓடலாயினார். நாணன், காடன் என்போர் அவரைப் பிந்தொடர்ந்து சென்றனர். ஓடி இளைத்து ஒரு மரச் சூழலில் ஒதுங்கி நின்ற பன்றியைத் திண்ணனார் தம் சுரிகையைச் சேர்ந்த நாணனும் காடனும் இப்பன்றியைத் தின்று பசியாறி நீரும் குடிப்போம் என்றனர். திண்ணனார் "இக்காட்டில் நீர் எங்கே உள்ளது? எனக் கேட்டார். நாணன் ஒரு தேக்குமரத்தைக் காட்டி அம்மரத்துக்கப்பால் ஒரு குன்றின் அயலில் குளிர்ந்த பொன்முகலி ஆறு பாய்கின்றது எனக் கூறினான். பன்றியைக் காவிக்கொண்டு அவ்விடம் நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர். வழியில் திருக்காளத்தி மலை திண்ணனார் கண்ணில் பட்டது. பட்டதும் அம்மலைக்குச் செல்வோம் என்றார். 'மலைக்குச் சென்றால் நல்ல காட்சி காணலாம்; அங்கே குடுமித்தேவர் இருப்பார்; கும்பிடலாம்' என நாணன் சொன்னான். மலையை நெருங்கிச் செல்ல திண்ணாருக்கு இனம்புரியாததோர் சுக உணர்வு தோன்றியது. அவருக்குத் தன்மேலிருந்து பாரம் போவது போன்ற உணர்ச்சி பெருகியது. மனதில் புதிரானதோர் உணர்வு அரும்பலாயிற்று. தேவர் இருக்கும் இடம் செல்வோம் என விரைந்து நடந்தார். பொன்முகலி ஆற்றை அடைந்ததும், காடனிடன் தீ உண்டுபண்ணுமாறு கூறித் தாம் நாணனுடன் சென்றார். ஆற்றில் தெளிந்த தீர்த்த நீர் அவர் சிந்தை தெளியச் செய்தது. குடுமித்தேவரிடம் பெருகும் அன்பின் சுகமே தனக்கேற்பட்ட 'புதிரான' சுக உணர்வு என்ற விளக்கம் ஏற்படலாயிற்று. மலைச்சாரலை அடைந்த போது உச்சிக்காலமாயிருந்தது. அவ்வேளையில் தேவர்கள் வந்து காளத்திநாதரை வழிபடுவர். அவ்வாறு வழிபடும்போது தேவதுந்துபி எழும். அவ்வாத்திய ஓசை திண்ணனாருக்குக் கேட்டது. "இது என்ன இசை" என்று கேட்டார். நாணனுக்கோ அது மலைப்பெருந்தேன்வண்டின் இரைச்சலாகவே தோன்றியது. திண்ணனாரது முன்னைத் தவத்தின் பயன் முன்னி எழ முடிவிலா அன்பு பெருகலாயிற்று. அவ்வன்பும் நாணனும் முன்பு செல்லத் தான் மலை ஏறிச் சென்றார். தத்துவப் படிகளைத் தாண்டி சிவதத்துவத்தைச் சாரும் சிவஞானியாரைப் போலச் சென்று கொண்டிருந்தார். இவ்வண்ணம் சென்று கொண்டிருந்த அன்பாளர் காண்பதற்கு முன்னமே காளத்திநாதரின் அருள் திருநோக்கம் திண்ணனார் மேற் பதிந்தது. திண்ணனார் முன்னைச் சார்பு முற்றாய் நீங்கியது. அவர் ஒப்பற்ற அன்புருவானார். அன்புருவான திண்ணனார் மலைக்கொழுந்தாயுள்ள தேவரைக் கண்டார். அன்பின் வேகத்தால் விரைந்து ஓடிச் சென்று தழுவினார். மோந்தார், ஐயர் அகப்பட்டுக் கொண்டார் என ஆனந்தப்பட்டார். "கரடி, சிங்கம், திரியும் காட்டில் இப்படித் தனியாக இருப்பதோ" என்று இரங்கினார். இரங்கி நின்ற திண்ணனார் கண்ணில் தேவரின் உச்சியில் பச்சிலை, பூ என்பன தெரிந்தன. அது பற்றி நாணனிடம் திண்ணனார் விசாரித்தார்.
திண்ணனாரின் வார்த்தையைக் கேட்டு "நான் இது அறிவேன்; முன்னர் உன் தந்தையாரோடு வந்த ஒருநாள் பார்ப்பான் ஒருவன் குளிர் நீராட்டி" இலையும் பூவும் இட்டு உணவு படைத்து, சில சொற்களும் சொல்லி நின்றான்; இன்றும் அவனே இச்செய்கை செய்தான்" என நாணன் கூறினான். "இதுவே திருக்காளத்தி நாயனாருக்கு இனிய செய்கை" என்று அதைக் கடைப்பிடிக்கத் திண்ணப்பர் ஆசை கொண்டார். நாயனார் பசியோடிருக்கின்றாரே; இவருக்கு இறைச்சி கொண்டு வரவேண்டுமென விரும்பினார். ஆனால் அவரைத் தனியே விட்டுச் செல்லவும் மனம் ஏவவில்லை. சற்றுநேரம் சஞ்சலப் பட்டபின் துணிவு கொண்டு கைகூப்பித் தொழுதுவிட்டு வில்லெடுத்து விரைவுடன் இறங்கிச் சென்றார். பன்றி கிடைக்கும் இடத்தை அடைந்து உறுப்பரிந்து வைத்திருந்த இறைச்சியை தீயில் வதக்கி, வாயில் சுவை பார்த்து இனியனவெல்லாம் கல்லையிற் சேர்த்தார். இடையில் காடன் ஏதேதோ வினவினான். அவையெல்லாம் திண்ணனார் காதில் விழவேயில்லை. நாணன், "குடுமித் தேவரிடத்து வங்கினைப் பற்றி மீளாவல்லுடும்பென்ன நின்ற" அவர்தம் நிலையை காடனுக்கு எடுத்துக் கூறினான். இருவரும் இனிச் செயலில்லை; நாகனாரிடம் செல்வோம் எனச் சென்றனர். திண்ணப்பார் கல்லையிற் சேர்த்த ஊனமுது ஓர் கையிலும், வாயில் பொன்முகலி ஆற்று மஞ்சன நீரும், தலையிற் பள்ளித் தாமமும் (பூக்கொத்து) ஆக நாயனார் மிக்க பசியோடிருப்பாரென இரங்கியவராய் விரைந்து வந்தார். வந்து குடுமித்தேவரின் குடுமியில் இருந்த பூக்களைத் தம் செருப்பணிந்த காலினால் துடைத்தார். வாயின் நீரினால் அன்பு உமிழ்வார் போல் அபிஷேகம் செய்தார். தலையிலிருந்த பூங்கொத்துக்களை தேவர் குடுமியில் சூட்டினார். கல்லையிலிருந்து ஊனமுதைத் தேவரின் முன்பு வைத்து "இனிய ஊன் நாயனீரே; நானும் சுவை கண்டேன்; அமுது செய்தருளும்" என்று இவ்வாறான மொழிகள் சொல்லி அமுது செய்வித்தார். அந்தி மாலையானதும் இரவில் கொடிய விலங்குகள் வரும் என்று அஞ்சி வில்லுடான் நின்றார். இரவெல்லாம் கண்துயிலாது நின்ற வீரர் விடியற் சாமமானபோது "இன்று நாயனாருக்கு இனிய ஊனமுது படைக்க வேண்டுமென்ற ஆர்வம் கொண்டார்". இருள் பிரியாத வேளையிலே காட்டினுள் புகுந்தார். அவரின் முன்னே அவரைப் பிரியாது திரியும் நாயும் சென்றது.
திண்ணனார் இந்நிலையில் பக்திப் பரவசத்தில் இருக்க. மறுபுறம் அன்று பகற் பொழுதில் காளத்தி நாதரை அர்ச்சித்து வழிபட சிவகோசரியார் எனும் அந்தணர் பூசைத் திரவியங்களுடன் வந்தார். சாத்திரங் கற்ற ஆசார சீலரான அவ்வந்தணர் நித்தமும் சிவலிங்கத்திற்கு ஆகமவிதிப்படி பசும் நெய்பூசி, மணமிகு பூக்களோடு வில்வம் தூவி, தூயாடைக் கட்டி, எங்கும் மணங்கமழும் வண்ணம் வாசனை திரவியமிட்டு, நேரந் தவறாமற் பூசை செய்பவராக சிவனுக்கேத் தன்னையர் பணித்துக் கொண்டவராக திகழ்ந்தார். சிவனாரின் சிறப்புகளுள் மெய்சிலிற்க வைப்பது யாதெனில், குணங்களில் இருவேறு துருவங்களாக யிருப்பவருங் சிவனாரால் ஆட்கொள்ளப்படுவதே.
வந்தவர் காளத்தியப்பர் முன்னிலையில் கிடக்கும் இறைச்சி, எலும்பு என்பனவற்றைக் கண்டு திகைத்து கால்களை அகலமிதித்தபடியே நின்றார். மூன்றுகால பூசைகாணுஞ் சிவலிங்கத்திற் இரத்த நெடி கமகமக்க மாமிசத்துண்டுகள் வி்ல்வத்துடனிணைந்து விரவிக் கிடப்பதைக் கண்ட அவர் கடுஞ்சினங் கொண்டார். வேட்டுவச் சாதியினரே இவ்வேலையைச் செய்தனராதல் வேண்டும் எனச் சோர்ந்தார்.
பூசைக்கு நேரம் தாழ்கின்றதென்ற உணர்வு எழுந்ததும் இறைச்சி, எலும்பு என்பனவற்றை எடுத்து எறிந்து திருவலகு கொண்டு செருப்பு அடி, நாயடி என்பனவற்றையெல்லாம் மாற்றிய பின் பொன்முகலி சென்று நீராடினார். மீண்டு வந்து பழுது புகுந்து தீரப் பவித்திரமாம் செய்கை (பிராச்சித்தம்) செய்து ஆகமவிதி முறைப்படியான பூசனை செய்து சென்றார்.
சிவகோசரியார் மனம் அன்றைய தினம் சற்று சஞ்சலத்துடன் தான் காணப்பட்டது. அவரது நிலை இப்படி இருக்க மறுபுறம் திண்ணனார் இருள் பிரியாப் போதில் காட்டினுள் புகுந்து தாமறிந்த வேட்டைத் திறத்தால் வேறு வேறு மிருகமெல்லாம் கொன்று ஓரிடத்தில் சேர்த்து, வக்குவன வக்குவித்து, கோலினிற் கோர்த்து, தீயினிற் காய்ச்சி, தேக்கிலைக் கல்லையிற் சேர்த்தார். அதிற் தேனும் பிழிந்து கலந்தார். முன்போன்றே பள்ளித் தாமமும் வாய்க்கலசத்து மஞ்சனமும், ஊனமுதமுமாய் காளத்தியப்பரிடம் விரைந்து வந்தார். 'இது முன்னையிலும் நன்று; நானும் சுவை கண்டேன்; தேனும் கலந்தது; தித்திக்கும்' என மொழிந்து திருவமுது செய்வித்தார்.
இவ்வண்ணம் பகல் வேட்டையாடி இனிய செய்கை செய்வதும் இரவில் கண்ணுறங்காது காவல் புரிவதுமாகத் திண்ணப்பர் வாழ்ந்து வந்தார். ஆகம முறைப்படி பூசனை புரிந்து சிவகோசாரியார் மறுபுறம் ஈசனின் இருப்பிடத்தில் அடிக்கடி காணப்பட்ட ஆசார குறைபாட்டைக் கண்டு மனம் வெதும்பினார். மறுபுறம் திண்ணப்பருடன் முன்பு காணப்பட்ட நாணன், காடன் என்போர் சென்று சொன்ன சொற்கேட்டு ஆறாக் கவலையுடன் வந்த திண்ணனாரின் தந்தை ஆன நாகனார் முயலும் வகையெல்லாம் முயன்றும் தம் கருத்து வாராமற் இனி திண்ணனாரின் விருப்பப் படியே எல்லாம் ஆகுக எனக் கூறி கைவிட்டுச் சென்றார். திண்ணனார் தனக்குத் தெரிந்த முறைப்படி சிவ பூஜையை நித்தம் செய்து வந்தார்.
அந்தணர் சிவகோசாரியார் நாளும் நாளும் நிகழும் அநுசிதம் குறித்து மிகவும் மனம் நொந்தார். இத்தீச்செயல் செய்தவன் எவனேனுங் கழுவேற்றிவிட யெண்ணினார். அவலஞ் செய்வது யாரென்றறிய ஈசனிடமே முறையிட்டார். அவர் பெருமானை வேண்டிய வண்ணம் துயின்ற வேளையிற் பெருமான் கனவில் தோன்றி 'இச்செய்கை செய்பவனை நீ இகழ வேண்டாம். அவனுடைய வடிவெல்லாம் நம்மிடத்தில் கொண்ட அன்பாயமைவது; அவனுடைய அறிவெல்லாம் நமை அறியும் அறிவு; அவனுடைய செயல் எல்லாம் நமக்கினியன். இதனை நாளை உமக்குக் காட்டுவோம். நாளை இரவு தான் கொழுவிட்டிற்கும் யிடத்தினருகே யொருமரத்தின் மறைவில் இருந்து நான் நடத்தப் போகும் நாடகத்தைக் கண்டு மனந்தெளிவாயென வாய்மொழிந்தார். சிவகோசாரியார் பெருமானது அருளிப் பாட்டை நினைந்து உருகிய சிந்தையராய் அற்புதம் அறியும் ஆர்வத்தோடு வந்து பூசனையாற்றி ஒளிந்திடவே திருவிளையாடற் காட்சியினிதே அரங்கேறத் தொடங்கியது.
திண்ணனார் கண்ணப்பர் ஆன கதை:-
திண்ணப்பர் திருக்காளத்தி அப்பரைச் சேர்ந்து ஐந்து பகலும் ஐந்து இரவும் கழிந்தன. ஆறாம் நாள் விடியற் பொழுதில் கண் துயிலாது நின்ற கண்ணப்பர் வழமை போன்று காட்டினுள் சென்று வேட்டையாடி ஊனமுது ஆதியனவற்றுடன் வந்து கொண்டிருந்தார். அவருக்குத் தோன்றிய சகுனங்கள் சஞ்சலம் தருவனவாய் இருந்தன. தீய பறவைகளின் ஒலி கொண்டு 'இது இரத்தப் பெருக்கிற்கான துர்க்குறி' எனத் துணுக்குற்றார். நாயனாருக்கு ஏது நேர்ந்ததோ என எண்ணியவராய் விரைந்து வந்தார். வந்தவர் பெருமானது கண்ணிற் பெருகும் இரத்ததைக் கண்டார். கண்டதும் பதைபதைத்து மயக்க மெய்தினார். அவரது வாயினீர் சிந்தியது. கைசோர்ந்து இறைச்சி சிதறியது. தலையின் பள்ளித் தாமம் சோர்ந்தது. நிலத்தில் துடித்து வீழ்ந்தார். விழுந்தவர் மயக்கம் தெளிந்து எழுந்து சென்று இரத்ததைத் துடைத்துப் பார்த்தார். இரத்தம் நிற்காமல் பெருகிக் கொண்டே இருந்தது. செய்வதறியாது பெருமூச்சுவிட்டு மீளவும் சோர்ந்து விழுந்தார். வீழ்ந்தவர் எழுந்து வில்லும் அம்பும் கொண்டு இத்தீச்செயல் செய்த விலங்குகளுடன் வேடர்கள் உளரோ? என்று எங்கும் தேடிச் சென்றார். எவரையும் காணாது வந்து பெருமானின் பாதங்களைக் கட்டிப்பிடித்துக் கொண்டு அழுது புலம்பினார். ஓர் எண்ணம் எழுந்ததும் வெருண்டதோர் எருதுபோல் காடெங்கும் திரிந்து பச்சிலைகளைப் பறித்து வந்து கண்ணுட் பிழிந்து பார்த்தார். மருந்து பலன் தராமையால் நொந்தார். "ஊனுக்கு ஊன்" என்றோர் மருந்து நினைவு வரவே கண்ணுக்குக் கண் என்றோர் புத்தி புகுந்தது. ஆதலால் தமது ஒரு கண்ணை தோண்டி இரத்தம் பெருகும் பெருமானின் கண்ணில் அப்பினார். நின்ற செங்குருதி கண்டார். நிலத்தினின்றும் எறப் பாய்ந்தார். தோள் கொட்டினார். நன்று நான் செய்த இந்த மதி என மகிழ்ந்தார். மகிழ்ந்த அன்பாளர் மற்றைக் கண்ணினின்றும் குருதி பெருகுவதைக் கண்டார். கண்டதும் ஒரு கணம் கவலையுற்றார். மறுகணமே இதற்கோர் அச்சம் கொளேன்; மருந்து கண்டேன் என்றவராய் தம் மற்றைக் கண்ணைத் தோண்டமுனைந்தார். கண் அடையாளம் காண்பதற்காகத் தன் இடதுகாலைப் பெருமானின் கண்ணில் ஊன்றினார். உள் நிறைந்த விருப்போடு அம்பினை ஊன்றினார். இச்செய்கை கண்டு தேவதேவர் தரித்திலர். தம் திருக்கையாற் தடுத்தனர். "கண்ணப்ப நிற்க என் வலத்தினில் என்றும் நிற்க" என்று அமுத வாக்கு அருளினார். இதனை ஞானமா முனிவர் கண்டனர்; கேட்டனர். தேவர்கள் பூமழை பொழிந்து வாழ்த்தினர். இதனிலும் பெரிய பேறுண்டோ. இதனைக் கண்ட அந்தணர் சிவகோசாரியார் திண்ணனார் என்ற கண்ணப்பனார் பக்தியே சிறந்தது என்பதை அறிந்து கொண்டார். அறிந்தது அந்த அந்தணர் மட்டுமா? இவ்வுலகத்தவரும் தானே. பிற்பாடு சிவ பக்தியின் சிறப்பால் திண்ணனார் என்ற கண்ணப்பனார் முக்தியும் அடைந்தார். ஆக, இதுவே கண்ணப்பனாரின் வாழ்க்கைக் கதை.
ஆதி சங்கரர் புகழும் கண்ணப்பனாரின் பக்தி ஒரு பார்வை :-
சிவபெருமான் பெருமையை 100 சுலோகங்களில் பறை சாற்றும் சிவானந்தலஹரி என்ற தன்னுடைய (வடமொழி) நூலில் ஆதி சங்கரர் 61 வது சுலோகத்தில் கடவுட் பற்று என்பதற்கு உயர்ந்த இலக்கணம் சொல்கிறார். அவ்விலக்கணத்திற்குச் சிகரம் வைத்தாற் போல் 63 வது சுலோகத்தில் கண்ணப்பரின் உள்நிறைந்த அன்பின் மூன்று செய்கைகளையும் குறிப்பிட்டு விட்டு இதுவன்றோ பக்தி , கடவுளன்பர் என்பதற்கு இவ்வேடுவனே இலக்கணம் என்கிறார். அச்சுலோகத்தின் உரை கீழ்வருமாறு:
வழிநடைநடந்த மிதியடி பசுபதியின் அங்கத்திற்கு குறிகாட்டியாகிறது;
வாயிலிருந்து உமிழ்ந்த நீர் புரங்கள் எரித்தவனுக்கு நீராடலாகிறது;
சிறிதுண்டு சுவைகண்ட ஊனமுது தேவனுக்கும் படையலாகிறது;
பக்தி என்னதான் செய்யமாட்டாது? அன்பரென்போர் வேடுவனன்றி வேறு எவர்?
இந்த சுலோகத்திற்கு உரையாசிரியர்கள் உரை எழுதும் போது, இதனில் தீவிர பக்தியின் மூன்று படிகள் சித்தரிக்கப் பட்டிருப்பதாகக் கூறுகிறார்கள்.
சுலோகத்தின் மூன்றாவது வரி முதல் படி. தான் சிறிது சுவைத்து விட்டு மீதமுள்ளதும் அதே விதத்தில் தேனொழுக இனிக்கும் என்று சொல்வதில் ஒருவித நம்பிக்கை தான் இருக்கிறதே தவிர முழுமையாக அறுதிப்படுவது இயலாது. அதனால் இது தீவிர பக்தியில் ஒரு சாமானியப்படி தான்.
சுலோகத்தின் இரண்டாவது வரி அடுத்த படி. வாயிலிருந்து உமிழ்ந்த நீர் ஆண்டவனுக்கு அபிஷேகமாகிறது. ஆனால் 'அது' என்னும் ஆண்டவனின் ஆனந்தத்தில் சங்கமமாகும் 'இது' என்னும் இந்த ஜீவனின் உமிழ்நீர் இன்னும் 'அது', 'இது' என்ற இரட்டையின் மயக்கத்தில் தான் இருக்கிறது. அதனால், இது தீவிர பக்தியின் அடுத்த மேல் படி என்று சொல்லலாமே தவிர தீவிரபக்தியின் உச்சகட்டமாகச் சொல்லமுடியாது.
சுலோகத்தின் முதல் வரியை தீவிர பக்தியின் உச்சநிலையாகச் சொல்லலாம். ஏனென்றால், பக்தன் தன் மிதியடியையே தேவனின் கண்ணில் வைக்கும் போது, அங்கு தேவன் வேறு தான் வேறு என்ற பாகுபாடெல்லாம் பறந்து போய்விட்டது. 'தத் த்வம் அஸி' (அதுவே நீ) என்ற உபநிஷத்து மகாவாக்கியப் படி, அந்தப் பரம்பொருளே இந்த ஜீவன் என்ற இலக்கணம் ருசுவாகிறது!
மாணிக்கவாசகர் புகழும் கண்ணப்ப நாயனாரின் பக்தி ஒரு பார்வை:-
கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்
என்னப்பன் என்னொப்பில் என்னையும்ஆட் கொண்டருளி
வண்ணப் பணித்தென்னை வாவென்ற வான்கருணைச்
சுண்ணப்பொன் நீற்றற்கே சென்றூதாய் கோத்தும்பீ.
கண்ணப்பனுக்கு ஈடான அன்பு என்னிடம் இல்லாவிட்டாலும் கூட இறைவர் என்னையும் ஆட்கொண்டருளியதாகத் திருகோத்தும்பியில் குறிப்பிடுகின்றார்.
பதப்பொருள் :-
கோத்தும்பீ - அரச வண்டே! கண்ணப்பன் ஒப்பதோர் அன்பு - கண்ணப்பருடைய அன்புக்கு ஒப்பான அன்பு, இன்மை கண்டபின் - என்னிடத்தில் இல்லாமை அறிந்தும், என் அப்பன் - என் தந்தை, என் ஒப்பில் - எதனோடும் ஒப்பில்லாத, என்னையும் ஆட்கொண்டருளி - என்னையும் அடிமையாகக் கொண்டருளி, வண்ணம் பணித்து - யான் ஒழுக வேண்டிய வகையைத் தெரிவித்து, என்னை வாவென்ற - என்னைத் தில்லைக்கு வருக என்று அருளிய, வான் கருணை - மேலாகிய கருணையையுடைய, சுண்ணம் - பொடியாகிய, பொன் நீற்றற்கே - அழகிய திருநீற்றையணிந்தவனிடத்தே, சென்று ஊதாய் - போய் ஊதுவாயாக.
மேற்கண்ட பாடலின் விளக்கம் :-
அடிகள் தமக்கு இறைவன் செய்த அருள், கண்ணப்பர் போன்ற தலையன்புடையார்க்கே செய்யத்தக்கது என்பார், ‘கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்’ என்றார். முற்றுந்துறந்த முனிவராகிய பட்டினத்து அடிகளும், ‘நாளறில் கண்ணிடந்து அப்ப வல்லேன் அல்லேன்’ என்று கண்ணப்பரின் அன்புச் செயலைப் பாராட்டியுள்ளார். ‘கோலமார்தரு பொதுவினில் வருக’ என அருளியதாக முன்னர் அடிகள் கூறியதனால், ‘வாவென்ற வான்கருணை’ என்றதற்குத் தில்லைக்கு வருக என்று பொருள் கொள்ளப்பட்டது.
கண்ணப்பர் அன்பு காட்டியது :-
தொண்டை நன்னாட்டில் உடுப்பூர் என்னும் ஊரில் வேடர் குலத்தில் தோன்றியவர் கண்ணப்பர். இவரது இயற்பெயர் திண்ணனார். பருவம் வந்ததும் வேட்டையாடும்பொருட்டுச் சென்றவர் காளத்தி மலை அடிவாரத்தை அடைந்தார்; துணைவன் நாணானால் குடுமித் தேவர் அம்மலைமீதுள்ளார் என உணர்ந்தார்.
முன்னைத் தவப்பயனால் மலைமீதேறிப் பெருமானைக் கண்டார்; அன்பு கொண்டார்; இலிங்கத்தின்மேல் பூவும் பச்சிலையும் இருக்கக் கண்டு, அவற்றை அந்தணர் ஒருவர் சார்த்தி வழிபட்ட முறையை நாணன் கூறக் கேட்டார். பின்பு வாயாகிய கலசத்தில் நீரை முகந்துகொண்டும், பூவும் பச்சிலையும் பறித்துத் தலையில் வைத்துக்கொண்டும், வேட்டையாடிய இறைச்சியாகிய உணவைத் தேடிக் கொண்டுவந்தும், இலிங்கத்தின்மீதிருந்த பூ முதலியவற்றைத் தம் செருப்புக்காலால் நீக்கி, தாம் கொணர்ந்த நீரை உமிழ்ந்து பூவையும் இலையையும் சொரிந்து, ஊனமுதை இட்டு வழிபட்டார்; இங்ஙனம் ஐந்து நாள்கள் வழிபாடாற்றினார். இதைக் கண்டு மனம் பொறாது வருந்திய சிவகோசரியாருக்குத் திண்ணனாரின் அன்பைப் புலப்படுத்த எண்ணிய இறைவன், ஆறாம் நாள் தன் கண்ணில் உதிரம் சொரியச் செய்தான். இதைக் கண்ட திண்ணனார் துடிதுடித்துத் தம் கண்ணையே இடந்து அப்பினார். இறைவனது மற்றொரு கண்ணிலும் உதிரம் வரக் கண்டு தமது மற்றொரு கண்ணையும் அம்பினால் தோண்டும் போது இறைவன், ‘நில்லு கண்ணப்ப’ எனத் தடுத்து நாயனாரின் அன்பை வெளிப்படுத்தினான்.
இதனால், இறைவனது கருணை கூறப்பட்டது.
 என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன 
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் 
உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.


5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...

 

1 கருத்து:

  1. கண்ணப்பர் சிவலிங்கத்திற்கு இறைச்சியை படையல் போடும் பொது,என்ன பாடல் பாடி படையல் இட்டார் என்று எனக்கு தெரிவிக்க வேண்டுகிறேன்.நன்றி

    பதிலளிநீக்கு